Saturday 29 May 2021

பாவம் காக்கா..... - சிறுகதை

அவர்கள் நண்பர்களாய் இருக்க வேண்டிய காரணங்கள் முடிந்து போய் ஓர் வெறுமையான சூழலில் நின்ற தருணமது. சதீஸின் கண்கள் குஞ்சுள்ள கோழிகளின் சிவந்த கோபக்கண்களுடன் ஹரியை நோக்கி நகரும் கணம் , அதற்கு ஈடு கொடுக்கும் விதத்தின் ஹரியும் கண்களை அகலவிரித்து கழுத்தை நொடித்து கன்னங்களில் குழிவிழ சிரித்து சமாளிக்க முயன்றான். இருவருக்குமிடையில் அப்படி பெரிய நட்பொன்று முன்பிருந்தே இல்லை என்பது இருவரும் அறிந்து ஒத்துக்கொண்டதே. ஆனால் இந்த தருணம் அவர்களை மேலும் விலக்கி தூரமாக்கி வைத்துவிடும் சக்தி படைத்தது. பெஞ்சின் கீழ் பத்திரமாக வைத்துசென்ற செருப்பை பகுமானமாய் எடுத்து திருடி மறைத்து வைத்ததே ஹரியின் ஆகப்பெரிய குற்றம். திருட்டு எதுவாகிலும் திருட்டு திடுட்டே என்ற திருட்டு அப்பன் சொல் கேட்டு வளர்ந்த சதீஸ் இந்த செயலை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முகாந்தரம் ஒன்றுமேயில்லை என்ற நிலையில்தான் ஹரியை முறைத்து கேள்விகளை கேட்க தொடங்கினான். அந்த பள்ளியில் இரண்டாம் வகுப்பு 'பி' பிரிவில் இந்த மகா சம்பவம் நடந்து கொண்டிருப்பது சுற்றியுள்ள ஒருவருக்கும் தெரியாது. பள்ளியே கூச்சல்களால் நிரம்பியிருந்த மதிய இடைவேளையில் இவர்களின் சத்தம் கேட்பது கஷ்டம்தான் என்பதும் நாம் புரிந்து கொள்ளக்கூடியதே. 


கேள்விகள் ஆரம்பமாயிற்று , "லேய்...எனக்க செருப்ப நீ களவாண்டு வச்சிருக்க...தராலண்ணா டீச்சர்ட்ட போவேன் பாத்துக்க" இது ஓர் தொடக்க நிலை மிரட்டல் மட்டுமே. போலீஸ்காரர்களை அழைக்கலாம் என்பதும் அவனின் மறைக்கப்பட்ட பிரம்மாஸ்திரம்.


"மக்கா...இது எனக்குள்ள செருப்பு....நேத்தைக்கு சாயிங்காலம் அம்மா முக்கு கடையில வாங்கிதந்தா..உனக்குள்ளது எங்கண்ணு க்ரௌண்டல போய் தேடி பாப்பப்பமா?" இது ஓர் உத்தி தன்னை அவன் புறம் உதவிக்காக நிறுத்தி பரிந்து பேசி காரியத்தை கச்சிதமாக முடிப்பது.


"அத கழத்தித்தா....அதுல அடையாளம் வச்சிருக்கேன்." என்று எக்காளப்பார்வையில் சிரித்தான். தன் களவு போன பொருள் திரும்ப வந்துவிடும் என்பதில் நம்பிக்கை குறைவில்லை என்பதன் வெற்றி வெளிப்பாடு.


"இந்தா பாத்துக்கோ" கையில் குடுத்தால் அது பொருள் கைவிட்டு போனதற்கு சமானம் என்பதை ஹரி அறிவான் அதனால் தள்ளி நின்று கைகளில் செருப்பை ஏந்தி காட்டினான். அதன் பின்புறம் ஒட்டியிருந்த என்னமோ நாற்றமெடுக்கவே முகத்திலிருந்து விலக்கிக்கொண்டான். ஆனால் பிடி மணரபிடியாக இருந்தது.


கைகளில் தராததே சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தி சதீஸை நிலைகொள்ளாமல் தவிக்கவிட்டது. உண்மையில் அந்த அடையாளத்தை காணவில்லை, பென்சிலால் அன்று காலை எழுதிய அவன் பெயர் செருப்பின் வெள்ளைப்பரப்பிலில்லை. அச்சரியம் தாங்காமல் அவன் கண்களின் நீர் நிரம்பியது. அடையாளங்களற்ற பொருள் பொதுவானது என்பதை அவன் அம்மா மூலம் அறிந்திருந்தான். அதானல்தான் என்னமோ அவளை அப்பாவும் சித்தப்பாவும் எடுத்துக்கொள்கின்றனர். இந்த நினைப்பு அவனை அலைக்களித்தது."நீ அளிச்சிருப்ப.... உன்னப்பத்தி தெரியும்ல.....தந்துரு இலண்ணா டீச்சர்ட்ட சொல்லிக்குடுத்துருவேன்"


டீச்சரிடம் சென்றால் பொருள் கிடைக்காது. அவளுக்கு என்னைப்பற்றி தெரியும். "நம்ம க்ரௌண்ட்ல போய் பாப்பம்.....நீ சோறு திங்கும்போ அத களத்தி வச்சிதான் திம்ப.....அங்கதாம்ல இருக்கும்....வா போவோம்" சாதுரியமாக சதீஸை கடத்தி க்ரௌண்டிற்கு அழைத்துச்சென்றான். கையிலிருக்கும் செருப்பை தக்கவைத்துக்கொள்ளவில்லை என்றால் அம்மா இன்னொரு செருப்பு  வாங்கித்தர போவதில்லை. அடி பிரித்து விடுவாள். அப்பா குடித்து வந்து கொஞ்சி தலையை தடவிக்கொடுத்து கையில் காசில்லை என்பார். இதுவே தருணம் தொலைந்தது மீண்டும் கிடைக்கப்போவதில்லை. இதுவே உன்னுடைய செருப்பு. 


கீழிருந்து மேலாக விரிந்து கிடந்த க்ரௌண்டில் கொச்சங்காய் மற்றும் வளராத தேங்காய் கூடுகள் பந்தாய் உருமாற கால்பந்து விமர்சையாக பல அணிகள் பல பந்துகளேன நடந்து நிரம்பியிருந்தது. அவர்கள் இருவரும் அதனுள் நுளையும்போதே ஹரி கண்டுவிட்டான் , அவன் ஒற்றைச்செருப்பு கோல் போஸ்டினுள் நுளைந்து ஒரு கோல் ஆகியது. இன்னொறை காணவில்லை. சோறு தின்றுவிட்டு செருப்பை மறந்து அங்கேயே விட்டுவிட்டான். செருப்பை கண்டதும் திருட்டு நடந்ததை மறந்து தன் உண்மையான செருப்பை எப்படியாவது கேட்டு பெற்றுக்கொள்ளலாம் என்று ஓட்டம் பிடித்தான். சதீஸ் அவன்பின்னால் போனதில் ஆச்சரியமில்லை. அந்த செருப்புக்கால்பந்தாட்ட கூட்டத்திடம் ஹரி கெஞ்சியும் அவனுக்கு கிடைக்கவில்லை. பந்தை பிடுங்க வந்தவர்களன நினைத்த விளையாட்டுக்காரர்கள் அவனை விரட்டியடித்துவிட்டனர்.


அழுதான் , கெஞ்சினான் கிடைக்கவில்லை. சதீஸுக்கு மகிழ்ச்சி , அவனே ஒத்துக்கொண்டான். திருட்டு நடந்திருக்கிறது அதனை கண்டுபிடித்தாகிவிட்டது. பொருள் கையகப்படுத்தப்பட வேண்டும். சதீஸ் "உனக்க செருப்ப தொலச்சிட்டு எனக்குள்ளத களவாண்ட்ருக்க. திருப்பி தந்துரு". மூச்சுக்காட்டாமல் ஹரி அதனை திருப்பிக்கொடுத்தான். இரக்கம் மேலெள சதீஸ் அவனை ஒருமுறை பார்த்துவிட்டு கைக்கு வந்ததே லாபமென்று வகுப்பறைக்கு சென்றுவிட்டான். 


ஹரி அமைதியாக காத்திருந்தான். எச்சில் சோற்று குவியல்களில் காகங்கள் இருந்து எழுந்தன. முழு இட்லியை காகம் தூக்கிச்செல்வதை நம்பமுடியாமல் அமர்ந்திருந்தான். அப்பொழுது வந்த ஞயாபகம் அதிர்ச்சியூட்டுவதாய் இருந்தது. இந்த கூட்டம் விளையாடி முடித்ததும் என் ஒரு செருப்பு கிடைத்துவிடும் ஆனால் இன்னொன்று அதனை மறந்து விட்டேனே என்று அங்கலாத்தான். ஒருமுறை க்ரௌண்டை சுற்றி வந்தால் அவன் சீணித்து வீழ்ந்து விடுவான் ஆனால் அதனை சட்டை செய்யாமல் மொத்த சக்தியையும் கூட்டி இன்னொரு செருப்பை தேடி துற்றியலைந்தான் , கிடைத்த ஒன்றை கண்ணில் வைத்துக்கொண்டே...வெயில் மண்டையை பிளந்தது.


------


அன்று மதியம் சாவகசமாக வகுப்பில் நுளைந்து ஈரக்கையை சட்டையில் துடைக்கும்பொழுது மண்டையில் கல் விழுந்தது போல துடித்தான். கால்களில் செருப்பில்லை அறையிலுமில்லை. சரிதான் இது இந்த மாசத்தின் இரண்டாவது செருப்பு. பள்ளி முழுவதும் கால்தடம் பதியாத இடமில்லை எனுமளவுக்கு அலைந்தான் செருப்பு கிடைக்கவில்லை. அக்காக்கள் ஒன்றுக்குவிடும் இடத்தினுள் நுளைந்ததால் அடிதான் கிடைத்தது. அழுதான் வியர்த்தான் துவண்டான். கடைசியில் மீண்டும் வகுப்பிற்கு வந்து சேரும் பொழுது அவனுக்காக காத்திருந்ததைப்போல பெஞ்சுக்கு அடியில் கிடந்தது அதே அளவுள்ள அழகு வெள்ளை நிற லூணார்ஸ். போட்டுப்பார்த்தான் கச்சிதம். தன்னுடையது என நம்ப ஆரம்பித்து பத்து வினாடிக்குள் நம்பிவிட்டான். அலைச்சலுக்கும் வெயிலுக்கும் கடவுள் தந்த பரிசென்று கைகூப்பி தொழுதான். ஒரு கடவுளும் நினைப்பில் வராமல் செருப்பே வந்தது. அதையே தொழுது பெஞ்சில் அமர்ந்து கொண்டான்.


------


இன்னொரு செருப்பு கிடைக்கவில்லை. கிடைத்தவரை சந்தோசமென்று பழைய பந்தான செருப்பை எடுக்கச்சென்றான். அம்மாவிடம் சமாளிக்க ஓர் கதையை உருவாக்கிக்கொண்டான். கழட்டி வைத்திருந்த செருப்பை காக்கா தூக்கிச்சென்று விட்டது. அனேகமாக அது இட்லி என்று நினத்திருக்க வேண்டும் என்பது மேலதிக பதிலாக வைத்துக்கொள்ளலாம். இட்லியை தூக்கும் காக்கா அதே அளவு அல்லது அதற்கும் குறைவான எடையுள்ள செருப்பை கண்டிப்பாக தூக்கும். காரணம் தயாரானதில் மகிழ்ச்சி. அதும் சில நிமிசங்கள் தான் தொடர்ந்தது , பந்து செருப்பை வார் வேறு செருப்பு வேறென்று பிய்த்து விட்டனர் பாவிகள். துக்கம் பெருந்துக்கம் , எல்லாமே இருட்டிக்கொண்டு வந்தது. நடக்க முடியாமல் நடு க்ரௌண்டில் சப்பென்று அமர்ந்தெவிட்டான். சுற்றி அலைந்த விளையாட்டுக்காரர்களின் சத்தம் அடங்கி "ஒரு பொருளு.....ஒரு பொருளு உருப்படியா வைக்க தெரியா.....உயிரெடுக்கதுக்குண்ணே அப்பனும் மகனும் பொறப்பெடுத்து வந்துருக்கு செய்ய்ய்..." என்ற அம்மாவும் குரல் மட்டுமே கேட்டது. கூட்டத்தின் ஆரவாரத்தில் அவன் அழுகை அடங்கிப்போனது. மணலின் விழுந்த விழிநீர் துளிகள் நொடி பொறுக்காமல் கரைந்து மறைந்தன. மூச்சு முட்டியது. சரியான நேரத்தில் மணி அடித்தனர். மற்ற மாணவர்கள் தேன்சிட்டுகளென விருட்டென வகுப்பு நோக்கி பறந்தனர். தன்னிலைக்கு வரவேண்டிய கட்டாயத்தை மணிச்சத்தம் நினைவுறுத்தவே தொங்கிய கைகள் கால்முட்டில் இடிக்க புழுதி படிந்த சட்டையுடன் நத்தையென நடந்தான். 


சதீஸின் அருகில் அமரும் பொழுது அவன் முகத்தை நோட்டம்விட்டான். களிப்பில் பொங்கியிருந்தது. ஆனால் உண்மையில் சதீஸ் வருத்தப்பட்டான். திருட்டு பொய் எல்லாம் நினைவுக்கு வர இரக்கத்தை துடைத்து காலுக்கடியிலிருந்த பையில் முடிந்து வைத்தான். 


காலம் மெதுவாக செல்ல வேண்டும் என்று ஹரி நினைத்தது இவ்வொரு தருணத்தில் மட்டுமே. தண்டனைகளை தள்ளிப்போடுதல். ஆனால் உள்ளூர அதற்காக மனம் ஏங்கியது. என்ன சொல்ல போகிறாள் , எதை வைத்து அடிப்பாள் , எப்படி நழுவி தப்பிக்கலாம் எனப்பல மனதில் குதியாளம் போட்டு கிடந்தன. அழகம்மாள் டீச்ரின் கம்பும் அவனை அந்த என்ணத்தொடர்ச்சியிலிருந்து விலக வழி செய்யவில்லை. அம்மாவின் ஏச்சும் பேச்சும் அடியும் சகித்துக்கொள்ளலாம் ஆனால் அழுகை , அதனை அவனால் சகித்துக்கொள்ள முடியாது. கன்னத்தில் உப்புத்தடம் அப்படியே இருக்கும். துடைக்க நேரமின்றி அப்படியே விழுந்து விடுவாள். திருடியதற்கு கிடைத்த தண்டனையாக இருக்கலாம் , ஒற்றை செருப்பை எடுத்துக்கொண்டிருந்தால் காக்காயை வைத்து தப்பித்திருக்கலாம். எல்லாமே இப்பொழுதான் தோன்றுகிறது. அழிக்க முடியாத காலத்தில் அவன் செருப்புகள் தொலைந்ததை நினைத்து அழுதான்.


மதியம் இரண்டாம் பீரியட் முடிந்ததும் சத்துணவம்மா தங்கம் ஓர் தங்கமான செய்தியுடன் வந்தாள். 

"சத்துணவு சாப்புடுக பிள்ளேள் வரணும்.....பாயசம் குடுக்கோம்" என்றதும் பிள்ளைகள் காலமற்று . இன்றலர்ந்த பூக்களென மலர்ந்து எழுந்தனர். அனைவரது மனங்களும் உச்சாடனம் செய்தது. பேச நினைத்த அனைத்து விசயங்களும் பாயசத்தை நோக்கிச்சென்றன. விதிவிலக்கில்லை சதீஸும் ஹரியும் பாயசத்தின் இனிப்பையும் அதில் கிடக்கும் முந்திரியை எப்படி பங்கு போட்டுக்கொள்வதென்றும் பேசிச்சிரித்தனர். காலம் பாயசத்தில் வழுக்கி சென்று கொண்டிருந்தது. 

எதிர் எதிர் வரிசையாக அமர்ந்த இருபதுக்கும் குறைவான பிள்ளைகளுக்கு அலுமியப்பாத்திரத்தில் பருப்பு குறைந்த டால்டா மிதக்கும் பாயாசம் நிறைந்தது. பேச்சின்றி மூச்சின்றி ஒரு மிடறு உள்செல்ல பின் இருவருக்கொருவர் முகச்செய்களை மட்டும் காட்டி உறுஞ்சி தட்டை நக்கி துடைத்தனர். அடுத்த முறை வருமா என்று ஏங்கி நிற்கையில் இல்லை என்பது போல அண்டா பைப்படியில் தண்ணீர் குடித்து  நின்றது. கைக்கழுவி சட்டையில் துடைத்து நடந்தனர். சதீஸும் ஹரியும் நெருங்கிய நண்பர்களாக உணர்ந்தனர். ஒருவர் கைக்குள் இன்னொருவரின் கையிருந்தது. 


"செருப்பு கெடைக்கலையா...."


"இல்ல....என்ன செய்ய...."


"ஒண்ணு செய்வோமா....."


"என்ன....."


"எனக்குள்ள ஒரு செருப்ப நீ கொண்டு போ...."


"இன்னொரு செருப்புக்கு என்ன செய்வ..."


"எதாவது சொல்லிக்கலாம்...."


"இப்படி சொன்னா ஒரு பிரச்சனையும் வராது அடியும் நமக்கு கெடைக்காது.."


"என்ன சொல்ல...."


ஹரி கைகாட்ட சதீஸ் பார்த்தான். காக்கா ஒன்று இட்லியை கவ்விக்கொண்டு பறந்தது. இருவரும் கோரசாக "பாவம் காக்கா...." என்றனர்.

Saturday 22 May 2021

அஞ்ஞாடி - வாசிப்பு

 பெருங்கதைகளை கேட்டு முடித்த பிறகு நமக்கு  தோன்றுவது "யம்மாடி என்னவெல்லாமோ நடந்திருக்கு" என்று மூக்கின் மேல் விரல் வைக்கவோ , அதிசயித்து நிற்கவோ , சோகம் பீடித்துக்கொள்ளவோ என பல வாய்ப்புகள் உள்ளன. பூமணியின் பெருங்கதையான அஞ்ஞாடி நாவலிலில் முடிவில் நமக்கு தோன்றுவதும் அதுவே. அத்தனை கதைகள் அத்தனை கதாபாத்திரங்கள். அஞ்ஞாடி என்று சொல்லிக்கொண்டே இந்நாவலை பல வழிகளில் அணுகி வாசிப்பதற்கான சாத்தியங்களை தன்னுள்ளே கொண்டுள்ளது. அதனை பின்வறுமாறு தொகுத்துக்கொள்ளலாம்.

  • கோவில்பட்டி , விருதுநகர் , தூத்துக்குடி போன்ற ஊர்களின் சாதிரீதியான ஓர் வம்சாவளியின் தொடர்ச்சியை அளித்தல்
  • சாதிகளின் உருமாற்றம் அதன் தொன்மம் , தொடக்கம் , பல்வெறு சாதிகளுக்கிடையான உள் உறவுகள்
  • சாதிகளின் வரலாற்று மறு உருவாக்கம்
  • கைகளிலடங்கா கரிசல் நிலத்தின் தகவல்கள்
  • இவற்றிற்கெல்லாம் மேலே மனிதர்கள் , ரத்தமும் சதையுமான மனிதர்களின் கதைகள்.

நமக்கு கைகளில் கிடைக்கும் வரலாற்றெழுத்தைக்கொண்டு ஒரு குறிப்பிட்ட அரசரின் வம்சாவளியை இந்தியாவில் தகவல்களுடன் உருவாக்க முடியாது என்கிறார் டி டி கோசாம்பி. பூமணியின் இந்த நாவலானாது தாழ்த்தப்பட்ட சாதிகளின் , இடைநிலை சாதிகளின் வம்சாவளி ஒன்றை உருவாக்க முயல்கிறது. அதே நேரத்தில் மொத்தமும் அறிவிய பூர்வமான தகவல்களையே நம்பி நகராமல் தன்னைபோல் நாவல் செல்கிறது. அந்த வகையில் இது ஓர் முன்னோடி தமிழ் நாவல் என்றுகூட சொல்லலாம். ஆண்டி பள்ளர் இனத்திலும் , மாரி வண்ணான் இனத்திலும் என்று சொல்லி நாவல் அவர்களின் சின்ன வயசுப்பழக்கம் முதல் சொகமாக ஆரம்பிக்கிறது. அப்படியே அவர்களின் கொள்ளுப்பேரனுக்கு பேரன் பிறந்த கதை வரை காட்டிச்செல்கிறார். அந்த வகையில் இதனை தான் வளர்ந்த ஊரின் குறிப்பிட்ட கால அளவின் வரலாற்று ஆவணம் என்று சொல்லி பிற்காலத்தில் நாம் அதிலிருந்து தகவல்களை மேற்கோள் கூட காட்டலாம். நாயக்கர் நாடார் சாதிகளையும் அவர்களின் வம்சாவளியினை உருவாக்கிக்காட்டுகிறார். பரதவர் பற்றி ஓர் இடத்தில் தொன்மமாக வரும் பதிவைத்தவிர வேறெதும் இருப்பதாக தெரியவில்லை

சாதரணமாக ஓர் இனக்குழு தான் ஆரம்பித்த இடத்தில் அப்படியே தங்கி விடுவதில்லை. காலத்திற்கேற்ப சூழ்நிலைக்கேற்ப அவர்கள் தங்களை மாற்றிக்கொண்டு கால்ந்தள்ள முயற்சிக்கின்றனர். அப்படி சாதிகள் ஒவ்வொன்றும் மாறும் அமைப்பானது ஓர் தனிப்பட்ட வரலாற்றையே உருவாக்கிவிடுகிறது. அந்த வகையில் பள்ளர் இன மக்கள் குத்தகையெடுத்து , நிலங்களை விலைக்கு வாங்கி , நிலங்களுடனிருந்து பின் தாது வருச பஞ்சத்தில் ஊரில் பாதிக்குமேல் பலிகொடுத்து ,  தீப்பட்டியாபீசில் வேலை சேர்ந்து நிலத்தில் கால் ஊன்ற முடியாத நிலைவரை சொல்லிச்செல்கிறார். நாடார்களை நாம் முதாளிகளாகவே பார்த்த நமக்கு அவர்களின் பனையேறி வாழ்க்கையும் திருவிதாங்கூரில் பதிவாளாயிருந்து இங்குவந்து வியாபாரம் செய்து பொருள் சேர்த்து , மறவர்கள்களுக்கு பயந்து , பணமிருந்துகோவில் நடையேற  உரிமையில்லாமல இருக்கும் கதை நமக்கு பெரிய கதையே. 

எட்டயபுரம் ராஜாக்களின் நாயக்க வரலாறு தொன்மக்கதையிலிருந்து ஆரம்பித்து அப்படியே தகவல்களாக ஓர் வம்சாவழியினை உருவாக்கி விடுகிறது. அதன் தொடர்ச்சியாக திருச்சி நாயக்கர்களின் வரலாற்று இணைப்பாக மங்கம்மாவின் வரலாறும் வருகிறது. ஆரம்பக்கட்ட இந்திய வரி எதிர்ப்பு போராடட்டங்களை சுட்டி அதன் மூலம் நமக்கு தெரிந்த எட்டப்பனின் தெரியாத வரலாறும் கட்டபொம்மு , ஊமைத்துரையின் வரலாறும் வருகிறது. இவை அனைத்தும் நிலப்பரப்பின் வரலாறும் கூட. சைவம் வளர்ந்த தொன்மம்  சமணர்களை கழுவேற்றியதையும் அங்கு முருகன் கோவில் வருவது வரை நீழ்கிறது. பூமணி வரலாற்றை அணுகுவது தொன்மத்தில் ஆர்மபித்து தகவல்களுடன் நவீன வரலாற்றில் வந்து நிற்கிறார். உதாரணமாக , பள்ளர்கள் தேவெந்திரனிலிருந்து வந்தவர்கள் என்பதில் தொடங்கி தீப்பட்டியாபீஸ் போவதில் முடிகிறது. நாடார்களுக்கு வரும் தொழில் சார்ந்த அல்லது கிண்டல் சார்ந்த பெயர்கள் கூட புதிய கிளைகளாக  சாதியை உருவாக்கிறது.

சாதிகள் தனித்தியாக வாழ்ந்தாலும் அவர்களுக்குள் சுமூகமான இரு தரப்பினரும் புரிந்து கொள்ளத்தக்க அன்பான உறவுகள் இருப்பது தெரிகிறது. ஆண்டி , மாரி ; ஆண்டி , பெரிய நாடார் ; சுந்தர நாயக்கர் , மாடப்பன் ; ஆண்டாள் , வேலம்மாள் ; கருப்பி , அனந்தி. ஒருவர் மற்றவரை ஒருமையில் அழைப்பது இன்னொருவரால் சாதாரணமாகவே எடுத்துக்கொள்ளப்படுகிறது அதேபோல 'சாமீக' என்பதும் மரியாதைய் நிமித்தமாக இல்லாமல் சாதாரணமாகவே வருகிறது. அவர்களுக்குள் அன்பு காட்டுதல் மாறி மாறி நக்கலடித்துக்கொல்ளுதல் இருந்தாலும் அந்த எல்லைகள் அவர்களின் கண்காணாமலேயே வகுப்பட்டுள்ளது. அவை ஏற்றுக்கொள்ளப்பட்ட வாழ்க்கைமுறை என்றே எடுத்துக்கொள்ள முடிகிறது.

இந்த உறவானது ஓர் தாழ்ந்த தரப்பு மற்ற உயர்ந்த தரப்பின் பொருளாதார நிலைமைக்கு மேல் செல்லும் பொழுது வேறுமாதிரி உருவீடுக்கிறது. பொருளாதார நிலை அவர்களை உயர்ந்தவர்கள் என்ற நிலையில் வைத்து தங்களை தாங்களே யோசிப்பதற்கான சாத்தியங்களை உருவாக்கி கொடுக்கிறது. நாடார்களுக்கும் மற்ற உயர்சாதி மறவர் , பிராமணர்களுக்கு இடையில் உருவாகும் பிரச்சனைகளை இந்த இடத்தில் வைத்தே புரிந்து கொள்ள முடிகிறது. நாடார்களுக்கு பட்டண பிரவேசமும் , கோவில் நுளைவும் இதன் பொருட்டே. அவர்களுக்கு எந்த விதத்தில் நான் குறைந்தவன் என்னும் கேள்வி கையில் பணம் வந்த பிறகே வருகிறது. இதன் பொருட்டு தங்களுக்கான கோவிலை கர்த்தரின் மூலம் கண்டுகொள்ளும் நாடார்களின் குருத்தோலை திருநாளில் கழுகுமலை முருகனின் தேரில் முட்டி நிற்க வெட்டு குத்து கொலை வீடெரிப்பு. இத்தனைக்கும் சர்க்காரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இது கோர்ட்டுக்கு சென்று முற்றவே , பிராமணர் தவிர மற்றவர் அனைவரும் சேர்ந்து கொள்ளையடிக்கின்றனர். இதுவும் அவர்களின் உயர்ந்த பொருளாதாரத்தின் விளைவே. நாடார்களை தவிர மற்ற அனைத்து சாதியினரையும் அவர்களுக்கு எதிராக அணிதிரட்டி வருகின்றனர் மேலக சாதியினர். பசியில் அகப்பட்ட இரு பகடைகள் தாங்கள் கைக்கு அகப்பட்டதை எடுத்து ஓடவே வந்தோம் , நாடார்களுக்கும் எங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லையென்பதே அவர்களின் பதில். அரசின் இதனை அணுகும் மோசமான முறையானது பிரச்சனையை புரிந்து கொள்ள தகுதியில்லாதவர்கள் உயர்ந்த பதவியில் இருப்பதே. கோவிலகளில் நுளைய நாடார்கள் தோரயமாக முப்பது வருடங்களுக்கு மேல் போராடியுள்ளனர். 

ஒரு கதை அல்லது நாவல் நம்மில் ஓர் உலகை கட்டியெழுப்ப அத்தியாவசியாமாது அதனுள்ளே நிரம்பியிருக்க வேண்டிய நுண்தகவல்கள். அஞ்ஞாடி ஒவ்வொரு அத்தியாத்திலும் அதுபோன்ற தகவல்களை கொண்டிருக்கிறது. தானியங்கள் தூவுதல் , ஏரடித்த மேட்டை சமன் செய்தல் , தட்டிவைத்து , துளை வைத்து மீன் பிடித்தல் , பனைநாரில் வடிகட்டி செய்தல் போன்ற நூற்றுக்கணக்கான தவல்களை சொல்லிக்கொண்டே செல்கிறார். இது அவருடைய மற்ற நாவல்களான பிறகு , வெக்கை போன்றவற்றிலும் இருப்பதே.

மேல் சொன்ன அனைத்தும் அறிந்து கொள்ளும் ரீதியிலானது அதாவது நாம் படித்து முடித்தவுடன் நாவலை அறிவார்ந்த ரீதியில் அணுகி தொகுத்துக்கொள்வது. ஆனால் இவற்றை உணர்ந்து கண்ணீர் விட நமக்கு மனிதர்கள் வேண்டும். அவர்களின் வாழ்க்கை வேண்டும். ஆண்டியும் மாரியும் சிறுவயதில் சந்தித்து பேச்சுப்பழக்கம் பேட ஆரம்பித்தது அவர்களின் இறப்பில் நம்மை அறியாமல் ஓர் ஏக்கம் வருத்தம் வந்து விடுகிறது. அது 'நான் பார்த்து வளந்த பய , இப்ப நம்ம கூட இல்லையே என்னும் எண்ணமே. ஒவ்வொரு இறப்பும் ஓர் தடத்தை விட்டுச்செல்கிறது. வீரம்மா , கருத்தையன் நொண்டியன் , ஆண்டி , கருப்பி , வள்ளி இறந்து இடுகாட்டு மேட்டிலமர்ந்து பேச்சுப்பழக்கம் போட்டு மீண்டும் குழிக்குள் போய்விடுகின்றனர். செத்தும் குடும்பத்தை வம்சத்தை நினைத்து ஏங்கி மீண்டும் குழிக்குள் சென்று படுத்துக்கொள்கின்றனர். பொத்தி பொத்தி வளர்த்த வீரம்மா கருத்தையனை மணந்து கொள்வதும் அவன் இறந்து போவதும் ஆண்டிக்கும் கருப்பிக்கும் தாளாத்தாய் அமைகிறது. என் அண்னின் நண்பன் அவன் பசுபிக் கடலுக்கு போனதியயும் அங்கிருந்த வேலியையும் பார்த்த கதைய வீராவேசமாக சொன்ன கதை எனக்கு தெரியும். மாரி இறந்த பின்னும் ஆண்டிக்கும் அந்த மாதிரி கதைகளை சொல்லிக்கொண்டேயிருக்கிறான். ஆனால் அவை தொன்மங்கள் கலந்துமுள்ளது. கருத்தையன் வீரம்மா கதைகளை நொண்டியன் சாமியாக மாறி அங்குவரும் விடலைகளுக்கு கதையாக சொல்கிறான். மாரி ஆண்டிக்கு விட்டுச்செல்வது அவனின் பாட்டுக்களே அதற்காக ஏங்கி கலிங்கலூருணி புங்கமரம் அருகில் அமர்ந்து காற்றில் அதனை தேடி அமர்ந்திருக்கிறான். சுந்தர நாயக்கர் , மங்கம்மா ; பெத்தபேடு , ஆண்டாள் ; சர்க்கரை நாடார் ; தாயம்மாள் என மனிதர்கள் அவர்களுக்குள் இருக்கும் உறவுகளின் பிரச்சனைகள் வந்துகொண்டேயிருக்கின்றது. எங்கோ பிறந்து மீண்டும் இங்கு மீண்டும் தங்கையாவின் குடும்பம் என ஒரு சக்கரம் போல வாழ்க்கை சுழன்று வருகிறது.

இவையனைத்தும் மொத்தமாக சேர்ந்து ஓர் முழுமையான நாம் அறியாத வாழ்க்கையை  உணர்வுகளுடனும் , தர்க்கங்களுடனும் பூமணி காட்டிச்செல்கிறார். நாவல் முடிந்தவுடன் ஸ்...அஞ்ஞாடி.... என்றே சொல்லத்தோன்றுகிறது. கூடவே கருப்பியையும் துணைக்கு அழைத்துக்கொள்ளலாம்.

Sunday 9 May 2021

யெந்தை பெருந்துயர் பொய்தானோ - சிறுகதை

புகை மண்டிய சுடுகாட்டில் மயான சுடலை எல்லாவற்றையும் மேற்பார்வை பார்த்தவண்ணம் கையில் மணிக்கம்புடன் நின்றது. அதன் காலடியில் சுப்பிரமணி விழித்துக்கொண்டபோது பின்னிரவாகியிருந்தது. விழித்திருந்த அவன் மனம் மீண்டும் புகைத்தாலென்ன என்று எண்ணியது. உடல் அசதியுடன் இருந்ததால் அந்த நினைப்பை தள்ளிப்போட்டுக் கொண்டேயிருந்தான். மயிலின் அகவலொன்று அவனை எழுந்து அமரச்செய்தது. அங்கு எரியும் பிணம் அவன் குழந்தை கண்ணம்மாவினுடையது. கைகளில் ஏந்த பயந்தான் அவள் பிறந்த கணத்தில். அவன் முரட்டு கைகள் பிஞ்சை துன்புறுத்திவிடக்கூடாது என்பதில் கருத்தோடிருந்தான். கைகளில் வந்ததும் அசையாமல் அவன் சிவந்த கண்களையே பார்த்துக்கொண்டொருந்தாள். அந்த கண்கள் களைத்திருந்ததை அவள் அறிவாள். தொடர்ந்த உழைப்பு மற்றும் அலைச்சலால் அவன் உடல் சரிவர இயங்காமல் துவண்டிருந்தது. ஆனால் மனம் விழிப்புடன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தது. செல்வி வீட்டிலேயே பிரசவம் பார்த்துவிட்டிருந்தாள். மருத்துவச்சி வரவில்லை. நின்று உலக்கையில் மாவிடிக்கையில் கண்ணம்மா முன்னுக்கூட்டி இறங்கி வந்து விட்டிருந்தாள். சேலையில் தாங்கிப்பிடித்தவாறு அப்படியே கால்நீட்டி சாய்ந்து பெற்றெடுத்தாள். அந்த அலறலில் அருகிலிருப்பவர்கள் வந்திருந்தனர்.


பிணம் எரிந்து எலும்பு புடைத்திருந்தது. வெட்டியானை காணவில்லை. அடித்து கீழே தள்ளி மீண்டும் தூங்க வைக்க வேண்டும். நினைத்துக்கொண்டான் "நான் இங்கு வராமல் வேறொங்கோ சென்றிருக்கலாம். இல்லை இதனை நான் பார்க்க வேண்டும் அவள் எரிவதை. கரங்கள் துடிப்பதை எலும்பு புடைப்பதை அதற்காகத்தான் செல்வி சொல்லியும் நான் இங்கோயே தங்கிவிட்டேன்" கைகால்கள் நடுக்க அவன் பொட்டலத்திலிருந்த துகள்களை எடுத்து சிலும்பியில் வைத்தான். சிதைச்சுவாலையே அதனை பற்ற வைக்க எம்பி வருவது போலிருந்தது. அவன் எழுந்து அதனை நோக்கிச்செல்லும் பொழுது அதுவரை தூங்கிக்கொண்டிருந்த வெட்டியான் எழுந்து சுப்பிரமணியை பிடித்து சுடலை கோவிலின் திண்டின் அமர்த்தினான்.


சிலும்பி பற்றி எரியவும் மீண்டும் அவளின் நினைவுகள் இறந்த அழுகிய உடலின் எழும் புழுக்கள் போல எழுந்து வந்தன. தக்குத்தானே வாய்விட்டு பேசுவது போல புலம்ப ஆரபித்தான்.


"நான் தந்தை , கொடுக்க வேண்டியவன். இங்கிருந்து அவளை அணைத்து அணிவித்து உணவளித்து கைப்பிடித்து கொடுத்து மார்பில் கண்ணீர் சொட்ட வாசலில் நின்று அழ வேண்டியவன். ஆனால் இதோ இந்த பிணம் இங்கு கிடந்து என்னைப்பார்த்து சிரிக்கிறது. கையாலாகத ஓர் அப்பன். நீ இருப்பதும் இறப்பதும் ஒன்றெனச்சொல்கிறது. உண்மைதான். நான் இழி பிறப்பே. எழுத்தென்றும் , சமூகமென்றும் , இலட்சியமென்றும் கற்பனையில் உன்னை விட்டுவிட்டேன். சுத்த சாமானியன் நான் என்பதை மறந்து விட்டேனடி கண்ணம்மா. என் மறதிக்கு யார் காரணம். நானே. பொருளீட்ட வழியில்லா ஈனன். பொருளில்லாருக்கு இவ்வுலகமில்லை அருளில்லாருக்கு அவ்வுலகமில்லை. சீ...வெட்கங்கெட்ட பேச்சு. இதோ இதுவே ஸ்தூல உலகம். என் கண்களுக்கு தெரிவது." என்று சிதையை சுட்டி எழுந்து நின்றான். படுத்திருந்த வெட்டியான் தலை தூக்கிப்பார்த்து மீண்டும் படுத்தான். சுப்பிரபணி அமர்ந்து பின் தொடர்ந்தான் "சுற்றமும் நண்பும் போ...போ..என்றன....புகழ்ந்தவன் கதவடைத்தான்...இங்கு நான் பாவியல்லவா கண்ணம்மா...உங்கள் உயிரெடுக்கும் பாவி....நிறைவென்று மகிழ்வென்று சொல்ல என்னவிருக்கிறது உங்களுக்கு....பொன்னில்லை பொருளில்லை சோறில்லை....பசியில் விட்டுவிட்டு என்ன கவிதை எழுத்து...அசிங்கம்....நான் கடமை தவறியவன்...இதோ இங்கு ஓர் இழிந்த அப்பனாய் உன் முன் நிற்கும் இந்த சுப்பிரமணியாகிய நான் சாகத்தகுதியுள்ளவன். காலா உனை காலால் உதைப்பேனென்று சொல்லகூடியன் தான். ஆனால் காலன் வரும்பொழுது பயந்து ஒடுங்கிக்கொள்வேன். எல்லாம் கவிதை எழுத்து பொய் அபத்தம். அந்த கணம் வாழும் நான் வெளிவந்ததும் வெறும் சக்கை புழுத்த மரம்" என்று திண்ணையில் அமர்ந்து சாய்ந்து கொண்டான். மாடன் அமைதியாக நின்றான் வருத்தப்பட்டது போல தெரியவில்லை. சிதைக்கு பின்புறம் ஓடிய ஆற்றில் நீர் நிறைந்திருந்திருந்தது. காலை பெய்த மழையால் தவளைகள் சத்தமிட்டுக்கொண்டேயிருந்தன. வானம் வெறித்து மேகமில்லாமல் கிடந்தது. நிலவு முழுதாய் நிரம்பியிருந்த தருணம் "கிறுக்கு பிடித்த தவளைகள். குழந்தை பெற்றுக்கொள்ள துடிக்கின்றன. இந்த அசுர இயற்கை குழந்தைகளை தின்று விடும். நாம் பார்த்துக்கொண்டேயிருக்க வேண்டும். செய்வதற்கொன்றுமில்லாமல்." என்று சிலும்பியை கைமூடி இழுத்துக்கொண்டான். 


நிலவு மேலெழும்பியிருந்தது. பிதற்றில் அடங்கிப்போய் அவன் படுத்திருந்தான். சிதை எரிந்து அடங்கி கங்கெழுந்து புகைந்து கொண்டிருந்தது. இரவின் சப்தம் மட்டுமேயிருந்தது. எழுந்திருக்க முடியாமல் தூங்கிப்போனவனின் கனவில் அவள் எழுந்து வந்தாள். வீட்டின் முற்றத்தில் சட்டையில்லாமல் விலா எலும்புகள் தென்னித்தெரிய அவன் கால்நீட்டி தூணில் சாய்ந்து அமர்ந்திருந்தான். எதிரில் கண்ணம்மா தும்பிலையின் முன் செல்வி சுடு சோறு வடித்து கொட்ட அதில் மொத்த புலனும் முனைந்து நிற்க அமர்ந்திருந்தாள். பச்சை பாவாடை சட்டையும் கழுத்தில் சின்ன தாமரை பதித்த அட்டிகை அணிந்திருந்தாள். பொலிந்த முகத்தில் நிறைந்த குங்குமத்துடன் செல்வி "என்ன" என்பதைப்போல புன்சிரிப்புடன் அவனை பார்த்துக்கொண்டிருந்தாள். நிறைவு மேலெழ ஒன்றுமில்லை என்பது போல தலையசைத்து மொத்த உடலும் மகிழ்வில் முற்றத்திலிருந்து இறங்கி வெளியே வந்தான். அங்கிருந்த திண்ணையில் புத்தகங்கள் குவிக்கப்பட்டு நடுவில் மரமேசையொன்று இருந்தது. யோசனை வந்ததும் திரும்பி பார்க்கையில் கதவு முடிவிட்டது. அவன் வீடு மட்டுமிருந்த அந்த வெளி பாலைவனமாகியிருந்தது. கதவை திறக்கவோ உடைக்கவோ முடியவில்லை. சோற்று வாசனை நின்று சிதையெரியும் வாசனை வரவும் விழித்துக்கொண்டான். விடிந்திருந்தது. காலை இரவை விட இன்னும் அசிங்கமாயிருப்பதாக உணர்ந்தான். அழுக்கடைந்த வெள்ளை சட்டையை அணிந்து ஆற்றில் இறங்கி முகம் கழுவி மேலேழும்பொழுத சிதை முற்றிலும் எரிந்து அனேக எலும்புகள் அப்புறப்படுத்தப்பட்டிருந்தன. அருகில் சென்று பார்த்தான்.


வெட்டியான் "இன்னும் வேல ஆக வேண்டியது கெடக்கு. அங்கண போய் உக்காருங்க" என்று திண்டை காட்டினான். அவன் எதும் சொல்லாமல் போய் அமர்ந்து கொண்டான். மனம் அமைதியடைந்திருந்தது அவனுக்கே வியப்பாயிருந்தது. "ஒரு பொட்டலமே போதுமாயிருக்கிறது" என்று நினைக்குபொழுது அவனால் புன்னகைக்க முடிந்தது. "ஆம் இது வெறும் மாயை , நான் அழுதது அற்பம். அல்லது சொப்பனம். அவள் பிரம்மத்தில் கலந்து விட்டாள். நானும் ஒரு நாள். இதில் அழுவதற்கோ புலம்புவதற்கோ ஒன்றுமேயில்லை. நான் சாதாரணமானவலல்ல என்பது எனக்கே சில சமயங்களில் மறந்து விடுகிறது. நான் ஓர் வேள்வி. குடும்பம் பந்தம் இதனை அறுத்தவனே தன்னை வேள்வியாக்க முடியும். நேற்று நடந்தது ஓர் விளையாட்டு நித்திய கன்னியின் விளையாட்டு. எனக்கு கடமைகள் இருக்கின்றன. அதற்கு நான் என்னை எப்பொழுதும் தயார் படுத்திக்கொள்ள வேண்டும். உயிர் போவதும் வருவதும் இயற்கையே , மாயையே. ஆம் நான் காலனை காலால் உதைப்பேன். அவனும் பறந்து பந்தாவான். என்றும் அழியா படைப்பாளியின் முன் எதும் துச்சமே" எழுந்து சிதையின் அருகில் சென்று அனைத்தும் அமைதியாகும்படி சத்தமாக "மகளே...உன் கடமை முடிந்தது. நீ எனும் மாயை அற்று பிரமத்தினுள் வாழ்வாயாக" என்று ஆற்றை நோக்கி நடக்க ஆரம்பித்தான். நாகணவாயொன்று நீரின் விளிம்பில் தொட்டு மேலேறி அக்கரையில் இருந்த அரசின் கிளையொன்றின் அமர்ந்து சிறகை அலகால் நீவிவிட்டு ஒலியெழுப்பியது. அதனிடம் சொல்வது போல , 


காலமென்று ஒரு நினைவும்

காட்சியென்று பல நினைவும்

கோலமும் பொய்களோ அங்கு குணங்களும் பொய்களோ

காண்பதலெல்லாம் மறையுமென்றால் 

மறைந்ததெல்லாம் காண்பதுவோ

நானும் பொய்தான் 

இந்த ஞாலமும் பொய்தான்" என்று முணுமுணுத்தபடியே நீரில் மூழ்கி எழுந்து சுடலையின் கால்களிலிருக்கும் திருநீறை கைகால் உடம்பு முகம் என அள்ளி அள்ளி பூசிக்கொண்டான். வெட்டியான் அதனை சட்டை செய்யாமல் அவன் வேலையை கருத்தேயென் செய்து கொண்டிருந்தான். சட்டையை அங்கேயே வைத்துவிட்டு வெறும் வேட்டியுடன் சுடுகாடு தாண்டி வயல் வரப்போறம் நடந்து வீட்டை அடைந்தான். மனம் கேள்விகளற்று விடைகளால் நிரம்பியிருந்தது. செல் செல் என்பது போல முட்டி முட்டி தள்ளியது. வீட்டிற்குள் அமங்கலம் நிறைந்திருக்க செல்வி சுவரில் சாய்ந்து குந்தி அமர்ந்திருந்தாள். காடாத்திற்கு செல்லவும் ஒருவருமில்லாத நிலையை சமாளிக்க என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருந்தாள். அண்ணன் யாராவது வரலாம் அவர்களிடம் உதவி கேட்கலாம் என்பதே அவள் கடைசி எண்ணமாயிருந்தது. சுப்பிரமணி வந்ததை அவள் கவனிக்காதது போல எழுந்து உள்ளே சென்றாள். 


திண்ணையில் அமர்ந்தவாறு "நீ செல் உனக்கு என் சிந்தனைகள் புரியப்போவதில்லை. நான் அமர்ந்திருப்பது ஓர் ராட்சச பறவையின் முதுகில். பேய்க்காற்றடித்து மெலிந்து போயிருக்கும் நான் உங்கள் நிலங்களை காண்பது அதியுயரத்திலிருந்து. பறக்கும் உணர்வை நீங்கள் அறியப்போவதில்லை. அதற்காக என்ன விலை கொடுத்தாலும் சரி. கீழே வருவதாக இல்லை. எனக்கு பணியிருக்கிறது" என்றான். சமீப காலமாக ஒருவரும் அவன் சொற்களை கேட்பதில்லை. சொற்களும் பேச்சு வழக்கிலில்லாமல் உரைநடை வழக்கில் மாறியிருந்ததால் , உளறும் பைத்தியங்களை அவர்கள் போக்கில் விட்டுவிடுவது போல விட்டுவிட்டனர். அவனுக்கும் அது சில சமயங்களில் தெரிந்திருந்தது. 


வாசலைத்தாண்டி முற்றத்தின் வலதுபுறம் இருந்த படிப்பறையினுள் நுளைந்தான். ஓடுகள் அங்கங்கே பெயர்ந்து ஒளி வளையங்கள் தரையில் கிடந்தன. மேசையை இழுத்து விட்டு கை நிற்காமல் எழுத ஆரம்பித்தான். "நான் நம்புகிறேன். இவை சென்றுவிடும். அவள் அழுகையை நிறுத்திவிடுவாள். இன்னொரு குழந்தையை பெற்று கட்டிக்கொடுப்பாள். சம்பந்தியுடன் சண்டையிடுவாள். கோள் மூட்டுவாள். நானும் அங்கிருப்பேன் , சரணடைவேன் , 


நல்லது தீயது நாம் அறியோம்

நல்லது நாட்டிட தீமையை ஓட்டிவிட

அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட

பொன்னை உயர்வை புகழை விரும்பாதிருந்திட

சக்தியே நின்னை சரணடைவேன்

பிரம்மமே நின்னை சரணடைவேன்

நித்திய கன்னியே நின்னை சரணடைவேன்


இவை என் சொற்களில்லை. முன்பே சொல்லிச்சொல்லி என்னில் பதிந்த சொற்கள். நான் அவற்றை மீண்டும் முணுமுணுக்க ஆரம்பித்து விட்டேன். இது ஓர் பிரதியெடுத்தல். இன்னொருவராய் உருமாறுதல். புது ஆன்மா பிறப்பெடுத்தபின் இங்கிருப்பது அவன் மட்டுமே. பழையவனை கண்டுபிடிப்பது படைத்தவனாலேயே முடியாது. 


என்றுமுள்ள அரிப்பு போல அந்த எண்ணம் மேலோங்கி வருகிறது ,  நான் ஒரு போலி. இன்னொருவனின் உணர்ச்சிகளை எனதாக்கி வருந்தி அருகிலிருப்பவரின் உணர்ச்சிகளை தூக்கி எறிகிறேன். காலையில் அடைந்திருந்த நிறைவு "போலி" என்ற ஒரு வார்த்தையால் இல்லாமல் ஆகிவிட்டது. மீண்டும் கண்ணம்மா. அவள் கன்னங்கள் ஒடுங்கி உருண்ணையான முகம் நீண்டிருந்தது" அவன் பேனாவை வைத்துவிட்டு இறங்கி வெளியே வந்தான். செல்வியுடன் இருவர் ஏதோ பேசிக்கொண்டு முற்றத்தில் அமர்ந்திருந்தனர். அவள் முகம் பிச்சையெடுப்பதைப்போலிருந்தது. அவனை பார்த்தும் பார்க்காததை கவனித்து வெளியே வந்தான். வெயிலின் இன்னொரு உருவாய் அனைத்து தோற்றம் கொண்டு கொப்பளித்திருந்தன. நடந்து மீண்டும் சிதையை நோக்கி சென்றான் வழியெல்லாம் "போலி" என்ற சொல்லை மந்திர உச்சாடனம் போல சொல்லிக்கொண்டிருந்தான். வரப்பில் வழுக்கி வேட்டியில் சகதி வழிந்தது. சிதையை அடையும் பொழுது அங்கு அடுத்ததாக கொண்டு வந்திருந்த பிணம் கிடத்தி வைக்கப்பட்டிருந்தது. கூன் விழுந்த கிழவியின் சுருங்கிய உடல் பாடையில் கிடந்தது. உறவினர்கள் சுற்றி நின்றனர். அதன் அருகே சென்றவன் மண்டியிட்டு அமர்ந்து 


பெருந்துயர் எய்தி நிற்கிறேன், தீய வறுமையான்

ஓங்கி நின்ற பெருஞ்செல்வம் யாவையும்

நான் செய்த சதியில் இழந்தேன்

பாங்கி நின்று புகழ்ச்சிகள் பேசிய

பண்டை நண்பர்கள் ஓடி ஒழிந்தனர்

வாங்கி யுய்ந்த கிளைஞரும் தாதரும்

வாழ்வு தேய்ந்தபின் யாது மதிப்பரோ?

இத்தந்தை பெருநதுயர் கேளாய் மகளே....

இத்தந்தை பெருநதுயர் கேளாய் மகளே....


என்று வெளிவராச்சொற்களாக திக்கி விம்மலுடன் கண்ணீர் நெஞ்சில் வழிய சொல்லி முடித்தான். சுற்றியிருந்தவர்கள் அவனை தூக்கி சுடலையின் திண்டில் ஏற்றி வைத்தனர். நேற்றிரவிருந்த அதே கைகால் நடுக்கம் மீண்டும் வந்தது. அன்று முதல் தினமும் இரவில் சிதையின் முன் தூங்கி புகை போட்டு காலையில் கிளம்புவதை பழக்கமாக்கியிருந்தான்.


ஆற்றங்கரையில் , வீட்டின் படிப்பறையில் , சிதையின் முன் மொத்தமாய் நாற்பது வருடம் இருந்து அதே சிதைக்கு கொண்டு செல்லும் பொழுது நாகணவாயொன்று நதியில் விளிம்பில் தொட்டெழுந்து மரக்கிளையில் அமர்ந்து "பொய்தானோ" என்று அவனிடம் கேட்டது.

பூதம் - சிறுகதை

அந்த அறை குளிர்ந்திருந்தது. சாந்து பூசப்படாத சுவர்களில் செங்கல் சில்லுகள் சில இடங்களில் பெயர்ந்திருந்தன. மொசைக் தரையின் வெண்மை நிறம் மங்கி மஞ்சளாகியிருந்தது. இடைவெளி விட்டு வரிசையாக போடப்பட்ட கட்டில்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நோயாளிகள் படுத்திருந்தனர். விட்டத்தில் தொங்கிய மின் விசிறியின் அங்கலாய்ப்பில்லா சுழ்ற்சியை பார்த்துக்கொண்டிருந்தான் ஸ்ரீ கிருஷ்ணா என்ற கிருபாகரன்.


அது ஜெயின் சமூகத்தினர் கட்டிய மனநல காப்பகம். அனைவரும் இலவசமாகவே தங்கியிருந்தனர். தொண்ணூறு விழுக்காடு நோயாளிகள் தெருவிற்கு விடுவதற்கு பதில் அங்கு விடப்பட்டவர்களே. ஒருமுறை நோயாளி ஒருவன் அங்கு கொண்டுவரப்பட்டு கரண்டி வைத்து வளித்து எடுத்த கருத்த அழுக்கை சாக்கில் கட்டியதாக செவிலியர் பேசிக்கொண்டனர்.


சாய்ந்திருந்ததில் முதுகில் குத்திய செங்கல்களின் நெருடலில் முதுகை நகர்த்து தோதான இடத்திற்கு கொண்டு சென்றான். வெள்ளை நிற அங்கி துவைத்து சுத்தமாக இருந்தது. கடந்த ஒரு வாரமாக காலை எழுந்ததும் தன்னை தேடிவருவதாக சொல்லியிருந்த ஊடகக்காரர்களை இன்றும் வாசலைப்பார்த்தவாறு தேடிக்கொண்டிருந்தான். "இன்று அவர்கள் வரவாய்ப்பிருக்கிறது" என்று வாய்விட்டு சொன்னான். மற்ற நோயாளிகள் அதனை கண்டுகொள்ளவில்லை. அவர்கள் தூக்கத்திலிருப்பது போலிருந்தது. அவன் எதிர்பார்த்தது போல அவர்கள் வராமல் அடுத்த நாளே வந்தனர். அவர்கள் வந்திருந்தது ஒரு பேட்டிக்காக. எங்கோ பல கோடி மக்கள் அதனை பார்ப்பதற்கு ஆவலாக இருப்பதாக சொன்னது கிருபாகரனுக்கு வியப்பாக இருந்தது. நம்மை அவ்வளவு பேர் பார்க்க போகிறார்கள் என்பது ஆர்வமும் அந்த பேட்டியில் ஈடுபாடும் தருவதாக இருந்தது. கேளள்விகளை அவனே கற்பனை செய்து அதற்கு பதில் கூறுவது போல இயல்பாக அரைநாள் தனக்குத்தானே கட்டிலின் இருபுறமும் மாறி மாறி அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதை வெளிலிருந்து பார்ப்பவர்களுக்கு ஏன் அங்கிருக்கும் நோயாளிக்கே சாதாரணமாக இருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவனுக்கு அது சாதரணமானதே.


தென்னந்தோப்பிற்கு நடுவே அமைந்திருந்த அந்த விடுதியின் நீண்ட ஒற்றை நோயாளிகள் அறையை தவிர்த்து இடதுபுறம் கடைசியில் இருந்தது சமையலறை. வலது புறம் நீண்ட குளியல் மற்றும் களிப்பறை. நோயாளிகளுடன் சேர்த்து அங்கு பத்து பேர் இருந்தனர். சுற்றியிருந்த தொன்னைகள் தலை சுழற்றி ஓலை உதிர்த்து நிறைய பேசிக்கொண்டிருந்தன. வெயில் புள்ளி புள்ளியாகவே தோல் நோய் போல தரையில் விழ முடிந்தது. அதன் வாசல் முற்றத்தின் இருபுறமும் பூச்செடிகள் தொட்டிகளில் இருந்தன. அத்தனையும் வெள்ளை ரோஜா செடிகள். முற்றத்தில் வந்து நின்ற பைக்கிலிருந்து இருவர் இறங்கி வந்தனர். வண்டி நின்றது தென்னையின் பேச்சொலி மட்டுமே கேட்டது. இரு சிறிய கேமராக்களை எடுத்துக்கொண்டு முற்றத்தை தாண்டி அந்த அறைக்குள் நுளைந்தனர்.


"வாங்க இந்த பக்கம்" என்று கைகாட்டி உள்ளே அழைத்து சென்றார் வாசலில் நின்றிருந்த செவிலியர். நோயாளிகள் சந்தேகப்பார்வையுடன் வந்த இரு இளைஞர்களை கவனித்தனர். முட்டிவரை காற்சட்டையும் டீ சார்டும் அணிந்திருந்தவர்களுக்கு  புருவங்களில் ஒரே போல வெட்டிருப்பது நோயாளிகளுக்கு வித்யாசமாக இருந்தது. தலையை திருப்பி மீண்டும் அவர்களின் மேன நிலைக்கு திரும்ம்பினர். வரவேற்புக்கு எதிர் புன்னகையாக இருவரும் காட்டிக்கொண்டிருந்தனர்.


அவர்களின் ஒருவன் "ஸ்ரீ கிருஷ்ணா" என்றதும் கிருபாகரனிடம் அழைத்துச்சென்றனர்,


"ஆக்டர் சார். உங்கள பாக்க வந்துருக்காங்க" என்று பொய் மரியாதையுடன் குனிந்து நின்றான் ஒரு செவெலியன். கிருபாகரன் அதற்கு பதில் சொல்லவில்லை. முதுகை நகர்த்தி மற்றொரு இடத்தில் பொருத்திக்கொண்டான்.


"வணக்கம் சார். உங்கள பாத்ததுல சந்தோசம். மூவிங்க் மைண்ட்ஸ் அப்படினினு ஒரு சானல்ல இருந்து வந்திருக்கோம். உங்களோட பேட்டி ஒண்ணு கெடச்சா ரொம்ப நல்லாருக்கும்" என்று பிளந்த வாயை அப்படியே பற்களை காட்டி சிரிப்பை ஒட்டவைத்து நின்றான் ஒருவன். மற்றொருவன் கேமராவை இணைத்து பேட்டியை தொடங்க தாயாராகிக்கொண்டிருந்தான்.


"கண்டிப்பா...நானும் பேட்டி குடுத்து ரொம்ப நாள் ஆகிடிச்சு"


"நீங்க கடைசியா கொடுத்த பேட்டி எப்ப"


"நான் குடுத்து ஒரு பத்து வருசம் இருக்கும்"


"அப்போ பத்து வருசமா இங்கதான் இருக்கிங்க"


"ஆமா என்னோட கடைசி படத்துக்கு அப்பறமா இங்க கொண்டு வந்து விட்டுட்டாங்க"


"நீங்களே வந்துட்டீங்களா"


"ஆமா , நானே வந்தேன். வெளில இருக்க முடியல. எல்லா விசயங்களும் பயமுறுத்துச்சு"


"உங்ககூட தொடர்புல இருக்க யாரு இருக்காங்க"


"யாரும் இல்லதான். அப்போ இருந்தாங்க"


"அப்படி இருந்த ஒருத்தங்க இப்பொ இறந்துட்டாங்க. அது விசயமாதான் நாங்க சில கேள்விகள் உங்கள கேட்கலாம்னு இருக்கோம். பின்னாடி அத ஒரு டாகுமெண்ட்ரியா அத கொண்டுவரலாம்"


"யாரு இறந்தது"


"மேனகா. ஆக்ட்ரெஸ் மேனகா. ரெண்டு நாளைக்கு முன்னாடி தற்கொல பண்ணிக்கிடாங்க"


ஒரு கேமராக்கள் ட்ரைபாடின் மேல் நிறுத்தி எதிர் எதிர் கோணங்களில் நிறுத்தி வைக்கப்பட்டது.


"ஆமா..அவ அப்பவே இறந்திருக்கணும். இவ்வளோ நாள் தாக்குப்பிடிச்சதே பெரிய விசயம். என்னோட கடைசி படம்தான் அவளுக்கு கடைசி. நல்லா நடிப்பாண்ணு சொல்லமுடியாது. சொல்லப்போனா டப்பிங்க் ஆர்ட்டிஸ்ட்தான் நடிச்சிருந்தாங்க எங்க படத்துலலாம். நாங்க வெறுமனே வருவோம் வாய என்னமாம் அசைபோம். கடைசியா அவங்க பேசி படத்த உருவாக்குவாங்க. இதுக்குண்ணே குளோஸப் சாட்ஸே கிடையாது எங்க ரெண்டு பேருக்கும்.. ஆமா எப்படி தற்கொல பண்ணிக்கிட்டா"


"தூக்கு சார். அவங்க பூர்வீக வீட்டுல. போஸ்ட் மாட்டம் ரிப்போர்ட்ல கடைசி கொஞ்ச நாளாவே சாப்பிடனு போட்டுருக்காங்க. எழும்பி தூக்கு போட்டுக்கிட்டததுக்கு சத்து இருந்ததே ஆச்சரியம்னு சொன்னங்க"


"முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்னு சொன்னத நெறைய பேரு தப்பா மட்டும்தான் புரிஞ்சுக்கிறாங்க. எது வருதோ அதுல முயற்சி பண்ணலாம். சும்மா கையிலெடுத்ததுல முயற்சி , இவள மாதிரி பண்ணுனா சாகத்தான் வேணும். இங்க என் கூட வந்திருந்தா சாப்பாடு கெடச்சிருக்கும். பசியில்லாம செத்துருக்கலாம். கொஞ்சம் மண்டைக்கு சரியில்லாம போகணும். கண்டிப்பா அவளுக்கு அதே நிலமதான் இருந்திருக்கும். நான் வந்துட்டேன் அவ வரல. இப்பொ பாருங்க தூக்குல தொங்கும் போது பசியா இருந்தா எவ்வளவு கஷ்டம். ரெண்டு வேதன. ரெண்டு பேரும் கடைசியா படம் சேர்ந்து நடிக்கும் போது நான் நேரடியாவே சொல்லிட்டேன். இந்த நடிப்பு உங்களுக்கு வரல. வேற எதுலயாம் போய் பொழச்சிக்கோங்கண்ணு. அந்த படத்துல நடிச்சதோட சரி. அதுக்கப்பறம் பேச்சு கிடையாது.”


“உங்களோட நடிப்பு அனுபவத்த சொல்லுங்க”


“கையில காசில்லாம மூட்ட தூக்கிட்டு இருந்தேன். உருவத்த பாத்து நடிக்க கூட்டிக்கிட்டு வந்தாங்க. எனக்கும் நடிப்ப பத்தி ஒண்ணும் தெரியாது. நிக்க சொன்ன நிப்பேன் ஓட சொன்னா ஓடுவேன். அதுதான் என்னோட நடிப்பு. டைரக்டர் சொல்றதுதான் வேத வாக்கு. அதோட சரி. மொதல் படத்துடல நான் நானாவே இருந்தேன் மூட்ட தூக்குனேன் சண்ட போட்டேன. எடுத்து ஒடச்சேன். அடுத்தடுத்த படங்கள்ல அந்த மாதிரி நடிக்க வாய்ப்பு கிடைக்கல. சட்ட பாண்ட் போட்டு ஸ்கூலுக்கு போகுற மாதிரி நடிக்க சொன்னங்க. காலேஜ பாத்ததேயில்ல , அங்க கொண்டு போயி காதலிக்க மாதிரி நடிக்க சொன்னாங்க. எல்லாம் செஞ்சும் வசனம் பேச வரல ரெண்டாவது படத்துலயே ரொம்ப கஸ்டப்பட்டங்க. மூணாவ்தும் கடைசி படத்துல மொத்தமும் போச்சு. என்னவிட அந்த டப்பிங்க் ஆர்ட்டிஸ் காசு நிறைய கேட்டுருக்காரு. அதுக்கு அப்பறம் படம் வர்ல. நானும் இங்க வந்துட்டேன்”


“ஊருல போய் பழைய தொழில பாத்துருக்கலாம்ல”


“அதயும் சொஞ்சி பாத்தாச்ச்சு. ஒரருத்தரும் வேல தரல. தொணக்கு அங்க யாருமில்ல. அப்படியே இங்க வந்துட்டேன்”


“உங்களுக்கும் ஆக்ட்ரஸ் மேனாகவுக்கும் தொடர்பு இருந்ததாகவும் நீங்க சேர்ந்து கொஞ்ச நாள் வாழ்ந்ததாகவும் சொல்லுறாங்க உண்மையா?”


“தொடர்பு இருந்துச்சு ஆனா சேர்ந்துலாம் வாழல். சும்மா திரிஞ்ச அவளையும் புடிச்சு நடிக்க வச்சாங்க. இது பெரிய வாய் பொளந்த பூதம் மாதிரி. கொசு நொளஞ்சா தெரியவா போகுது இல்ல அது செத்தாதான் தெரியவா போகுது. பூதத்த பாத்தா நமக்கு ஒரு பிரமிப்பு வரும் கூடவே ஒரு ஆச்சரியமும் வசீகரமும் வரும். அதோட நீண்ட பல்லும் பெரிய தொப்பையும் முண்ட கண்ணும் தோள்ல படர்ந்து கிடக்குற சடையும். சாதரணாம பாக்க முடியாத ஒண்ணில்லையா. அத எப்புடி விட முடியும். சினிமா பாக்குற எல்லாருக்குமே அந்த எண்ணமிருக்கும். பாரதிராஜா பாண்டியன பாத்த மாதிரி நம்மையும் பாத்துற மாட்டாங்களாண்ணு. எனக்கு அது அமஞ்சது. நடிச்சேன். அவளுக்கும் அது அமஞ்சது. எங்கள புதுசா காட்டி அவங்க பேரு வாங்குனாங்க பணம் சம்பாதிச்சாங்க. எங்களுக்கும் அந்த பூதத்த கண்ணுல காமிச்சு விட்டுட்டாங்க. அவ பாத்தது மாதிரி நான் அந்த பூதத்த பாக்கல. ஒருநாள் ஷூட்டிங் தொடங்குறதுக்கு முன்னாடி சொன்னா “இத விட்டு நான் போறதாயில்ல. இது ஒரு பெரிய கனா மாரில்லா இருக்கு. இலங்கைல அக்தியா இருந்த கழுதைக்கு இந்த கனா எவ்வளோ பெரிசு. அத விட்டுற முடியாதுல்ல. எல்லாரும் பாக்க நான் முன்னாடி அவ்வளோ பெரிய திரைல நிக்கும் போது நான் எங்கயோலா இருக்கேன். காலுக்கு கீழ மத்த எல்லாரும்”


“என்ன மாதிரி தொடர்புனு சொல்ல முடியுமா”


“ரெண்டு பேரும் பேசிக்கிறதுக்கு நெறய விசயம் இருந்துச்சு. ரொம்பவே பயந்துட்டு இருந்தோம். வாழ்க்கை எப்புடி போகும்னு தெரியல. வருசத்துக்கு ஒரு படம்னு மூணு வருசம் சேர்ந்து இருந்த்தோம். முன்னாடி பெரிய பெரிய விசயங்கள் நடக்கும் போது நாங்க பூச்சி மாதிரி காத்துல ரெக்க அடிச்சிட்டு இருந்தோம். நிக்க இடம் இருக்க்காது. திடீர்னு வர்ர எதுமே நமக்கு ரொம்பவும் புடிச்சு போயிருது. கஷ்டமான விசயங்கள் கூட. அம்மா அப்பா செத்து போனா…நாம எதாவது வண்டில அடிபட்டு விழுந்தா கூட சந்தோசமா இருக்கும்னு தோணுது. அப்போ எங்க ரெண்டு பேரையயும் முதல் படத்துல நடிக்க வச்சாங்க எங்களொட முகம் எல்லா பக்கமும் தெரிஞ்சது. அதுல நாங்க முங்கி எழுந்தோம். எழும்பும் போது நாங்க பழைய ஆட்கள் இல்ல. திரும்பவும் பழைய இடத்துக்கு போகவும் முடியல. நான் போக முயற்சி பண்ணேன் அவ அதுக்கு எதும் பண்ணல. இதுலையெ முங்கி இருக்க நெனச்சா. மொத்தமா முக்கி அழுத்திரும்ணு சொன்னேன் கேக்கல. எங்க ரெண்டு பேருக்கும் ஒரே முகம். விரும்பாம எங்களுக்கு ஒட்ட வச்சது. அதுனாலேயே எங்கள மத்தவங்க சேத்துக்கல தனியானோம் அதனால நாங்க சேர்ந்தோம். அதுல ஒரு திருப்தி இருந்துச்சு நம்ம நாமே ஓத்துக்கிறது. நாம நமக்குள்ளே போய்க்கிறதுல இருக்கிற நிம்மதி. அதுதான் எங்களுக்குள்ள இருந்த தொடர்பு. நான் சினிமால இருந்து வெளியேறணும்னு சொன்னதும் விலக ஆரம்பிச்சுட்டா. எங்க முகம் மாறிடிச்சு. துண்டா வெட்டிக்கிட்டா. என்னால தொடர்பு கொள்ளவே முடியல”


“உங்களால எப்படி சினிமா விட்டு வர முடிஞ்சது. நீங்க ரெண்டு பேருமே ஒரெ நேரத்துல அறிமுகம் செய்யப்பட்டு சினிமா உங்களுக்குள்ள வந்திருக்கு” அந்த இளைஞன் பேச்சை முடிக்கும் முன் கிரபாகரன் பேச ஆரம்பித்தான்.


“கடைசி படத்துக்காக எங்க ரெண்டு பேரையும் ஆஸ்திரேலியாவுக்கு கூட்டிடு போனாங்க. பெரிய மலைகள ஒட்டி கடற்கரை. கடலுக்குள்ளையும் அதே மாதிரி மலைகள் ஒண்ணு ரெண்டு தனியா நின்னுட்டு இரூந்துச்சு. ரெண்டு நாள்ல அந்த பாட்டு எடுத்துட்டு தெரிஉம்ப வரணும். 12 மணிநேரம் போய் இறங்குனதும் எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. சூரிய உதயம் அஸ்தமனத்துல எடுக்குறதா இருந்தாங்க. எங்க ரெண்டு பேரையும் கிறிஸ்டீன் கண்லாயணா உடைல கொண்டு போனாங்க. கருப்பு கோட்டு என்னோட நெறத்துகு ஒத்துப்போய் வெள்ள உள்சட்ட மட்டும் தெரிஞ்சது”

“நான் அந்த பாட்ட பல தடவ பாத்துருக்கேன் சார். எனக்கூ ரொம்ப பிடிச்சது அதுல வர சூரிய உதயமும் அஸ்தமன்மும்”


அதனை கிருபாகரன் கண்டுகொள்ளவில்லை. தடைபட்ட பேச்சை மீண்டும் தொடர்ந்தான். 


“அவளோட வெள்ள கவுண் காத்துல பறந்தது. எங்க ஊர்ல கிருண்னன் கோவில் தெப்பகுளம் ஒண்ணு கோவிலுக்கு பின்னால இருக்கும். தணுத்த கருப்பச்சை. அது அவளோட நெறம். அந்த உடுப்பு அவளுக்கு ரொமபவே ஒத்துப்போச்சு. சாதரணமா சிரிக்க மாட்ட சினிமா ஷூட்டிங்ல அந்த மொகத்துல பல்லு தெரியும். வெள்ள மீனு துள்ளி வர்ரது மாதிரி. காலைல கடற்கரையோர மலைகள்ல ஒண்ணுல உச்சில உக்கந்துருந்தோம். சூரியன் வெளில வரும்போது மேகம் எதுமேயில்ல. அப்பொதான் அவ சொன்னா “பூதம்”. நான் என்னனு கேட்கவும். சூரியன கைகாட்டி “அது விழுங்குது உன்ன என்ன” அப்படின்னு சொன்னா. கடல் நீரோட விளிம்பு வானத்தோடு இணையுற இடத்தில் சூரியன் இளஞ்சிவப்பா நின்று எரிஞ்சது திறந்த வாய்க்கு நடுவுல. நாங்க நிண்ணு பாத்தோம். அந்த காட்சி அதுதான் காரணம்”


“அப்பறமா சினிமா வேண்டாம்னு முடிவு பண்னிட்டீங்களா”


“அந்த படம் சரியா போகல….அதுக்கு அப்பறாம ரெண்டு பேருக்கும் படம் வரல. நான் ரெண்டு வருசம் பாத்துட்டு இங்க வந்துட்டேன். அவ அனியாயமா இப்போ செத்துட்டா. என் கூட வந்துருக்கலாம்”


“இல்ல நீங்க சினிமால இருந்து வெளில வந்து அத சாதாரணாமா எடுத்துக்கிட்டீங்கனு சொன்னீங்க”


“ஆமா…அது சாதாரணமான விசயம்தான் அதுக்கு நீங்க சில விசயங்கள் செய்யனும் அத தொடர்ச்சியா பண்ணினா எல்லாமே சாதாரணம் தான்”


“உங்கள ஏன் இந்த விடுதிக்கு கொண்டு வந்தாங்க”


“சாதாரணமான விசயங்கள் எல்லாருக்கும் ஒரே மாதிரி இருக்க வேண்டிய கட்டாயமில்ல. நான் அந்த பூதத்த கொல்ல நெனச்சேன். சின்ன சின்னதா ஆக்காம அத கொல்ல முடியாது. ஒரு நாளைக்கு ஒரு சின்ன உருவம்னு சொன்னுட்டு இருக்கேன். அது வளந்துட்டே போகுது. ஒரு நாள் அத கொண்ணு முடிச்சிரலாம். அப்போ மொத்தமா அந்த பூதத்திட்ட இருந்து தப்பிச்சு வந்துரலாம்”


என்று சுவரின் பின்னால் காட்டினான். கரித்துண்டுகளால் குழந்தை கிறுக்கல் போல வரைந்திருந்த சின்ன உருவங்கள். சுவர் முழுவதும் பரவியிருந்தது. ஒரு நிமிடம் போதும் அவை ஒன்று சேர்ந்து பெருத்த உருவம் கொள்வதற்கு. அந்த கிறுக்கல் பூதத்தின் கழுத்தில் கோடு வரையப்பட்டிருந்தது. வாய் பிளந்திருக்க அதன் நடுவில் வட்டமாக கரி அடர்த்தியாக வரையப்பட்டிருந்தது.


மேனகா ஸ்ரீ கிருஷ்ணாவுக்கு எழுதியிருந்த அனுப்பப்டாத கடிதங்களை காட்டாமல் அப்படியே உள்ளே வைத்தான் அந்த இளைஞன். அதிலும் சுவரில் இருந்ததைப்போல சின்ன பூதங்களின் உருவங்கள் தலை வெட்டப்பட்டு வரையப்பட்டிருந்தது.


“உங்களோட நேரத்திற்கு நன்றி. ஒளிபரப்பானதும் கொண்டு வந்து காட்டுறேன்”


“நன்றி. என்ன ஸ்ரீ கிருஷ்ணா என்ற கிருபாகரன் அப்படினு அறிமுகப்படுத்துங்க”


“கண்டிப்பா”


கேமரா கருவிகள் எடுத்து பைக்குள் வைத்து திரும்பும் போது ஸ்ரீ கிருஷ்ணா என்ற கிருபாகரன் சுவரில் அடுத்த பூதத்தின் படத்தை வரைய இடம் தேடிக்கொண்டிருந்தார்.