Friday 15 February 2019

காலாதீதம்

தைரியமாக குதிக்கின்றேன் தினம் மலை உச்சியில் இருந்து.
கொடுங்காற்று சிதறடிக்கின்றது.
பேடியின் உச்சத்தில் நான் இருக்கின்றேன்.
கீழே அகளாபாதாலத்தில் கூரிய மூக்கு மலையும்.
பரந்து விரிந்து கிளை பரப்பிய கண்ணிமை மரங்களும்.
குறுக்கும் மறுக்கும் ஒடும் துல்லிய நதியும்.
போதையின் உச்சததில் குப்புற விழுகின்றேன்.
விழுந்த நொடியைவிட விழுகின்றதே காலாதீதம்.

பெண்டுலம்

நிலை கொள்ளாமல் அவள் இங்கும் அங்கும் பெண்டுலமாடிக்கொண்டிருந்தாள் தண்ணீர் தொட்டிக்கு பின்னால் ஒழிந்திருந்து எட்டி பார்க்கும் குழந்தையின் இரு கண்களுடன்.

முடிவற்ற கால வெளியில் நானும் அந்த பெண்டுலத்தை பற்றிக்கொண்டு தொங்கிக்கொண்டிருந்தேன் கீழே விழுந்தது விடாமல்.

Thursday 7 February 2019

புகுதல்

அன்றொரு நாள் நான் இருட்டினில் தனியாய் மின் விளக்கொளியில் நடந்ததுகொண்டிருந்தேன்.

முரட்டு வாகனங்கள் முட்டி மோதிக்கொண்டு செல்கையிலும் பேரமைதி.

நீலம் பாய்ந்து உடம்பெங்கும் குளிர்ந்தது.

வீட்டு வாசலில் அவளும் தனியாய் அதே அமைதியுடன்.

முதலில் புரியவில்லை பின்பு  எல்லாம்  புரிந்தது , கருவறை புகுந்ததில்.

சோப்பு நுரை

விளங்காத வார்த்தைகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டு தவிக்கின்றேன் என்றுமே கிடைக்காததொரு பதிலைத்தேடி.

நான் எங்கும் இருக்கும் உயிர் தானா இல்லை உயிரே அற்ற ஜடப்பொருளா?.

அடங்காப்பேர் இருப்புடன் அலையும் நான் வெறும் சொற்குவியலில் கிடக்கும் கசக்கி எறியப்பட்ட காலி பைதானோ?

ஒன்று மட்டும் மிகத்தெளிவாக உள்ளது என்னதான் பேசி கிழித்தாலும் வெறும் சோப்பு நுரை தான் உச்சந்தலையினுள் உள்ளது , அதுவே நிதர்சனம்.


Sunday 3 February 2019

கழுத்துப்பட்டி

Joyeetajoyart (Instagram)
கனவுகள் என்றுமே நாம் நினைத்தைப்போல் இப்படி சொல்லலாம் நாம் எதிர்பார்ப்பது போல் இருப்பதில்லை.
சொர்க்க வாசலில் இருவரும் கைக்கோர்த்து நடப்பது போலவோ தனித்த சாலையில் இரு பக்கங்களிலும் மரங்கள் நடுவே நடப்பது போலவோ நான் எதிர்பார்த்திருந்தேன் ஆனால் நடந்தது என்னவோ கடவுளுக்குத்தான் வெளிச்சம். 
என் வீட்டில் அவள் தூணில் சாய்ந்து கையில் தட்டுடன் சம்மணம்போட்டு உட்கார்ந்து  கீரையோ என்னவோ நறுக்கிக்கொண்டிருந்தாள் உள்ளாடையுடன். அதே பச்சை மேல் சட்டை. 
கருத்த தடித்த அழகிய தொடைகள் அதில் தளும்புகளுடன் வெண்புள்ளிகள் நடுக்காட்டில் சமவெளியில் முளைத்த புற்களின் பசுமையுடன் இருந்தது. மும்முரமாக டிவி பார்த்துக்கொண்டே அவளின் கைகள் முயங்கிக்கொண்டிருந்தது. தோளில் உள்ளாடையின் பட்டி தெரிந்தது அதை மூட அவள் நினைக்கவில்லை. 
ஆனால் என் முழு சிந்தனையும் அதிலேயேதான் இருந்தது என்பது மறுநாள் எழுந்ததும் எனக்கு நன்றாகவே தெரிந்தது.