Saturday 22 August 2020

சாத்தியமே

கடவுள் ஒளிந்திருக்கும் இடம் நிரம்பியுள்ளது

தேடுவது சாத்தியமே

கிடைப்பதும் சாத்தியமே

எனக்கொன்றும் உனக்கொன்றுமாய்

கோடித்துளிக்கடவுள்

தேடிக்கிடைக்கையில்

அவன் கைகளில்

நூறாவது காலி கொக்ககோலா டின்

அன்றைக்கான நூறாவது கடவுள்

கிடப்பதும் சாத்தியமே

தேடுவதும் சாத்தியமே

உனக்கும் எனக்கும்

Friday 21 August 2020

நிசப்தம் - சிறுகதை

1.

"யவட்டி இவ , சொன்ன நேரத்துக்கு அங்க போகாண்டாமா நல்ல ஆட்டிட்டு வந்துட்டா , சவத்தெழவு" என்று பொங்கினார் பேருந்துக்குக்காத்திருந்த மேஸ்திரி

"டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்" என்று காற்றை உறுமிய படியே சென்றன இருசக்கர வாகனங்கள்.

"காலைல அம்மைட்ட செரியான அடி கேட்டியா" என்றான் ஒரு சிறுவன்.

"பொறவு" என்றான் கூட வந்தவன்

"பொறவென்ன நைஸா  ஒர்ருவாய அடிச்சுமாத்திட்டு வந்தாச்சி"

"கிரீட்ச் கிரீட்ச்" என்றது பறவை

"ஆய்ய்ய்ங்க் ஆய்ய்ய்ய்ங்க்" என்றது இடுப்பில் இருக்க மறுத்த குழந்தை

"உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்" என்று மரம் காற்றுக்கு உறுமியது.

"சிஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்" என்று சருகுகள்  சாலையில் உருண்டன.

"ம்ம்ம்மா....." என்று கதறியவாறே கன்று பசுவை நோக்கி துள்ளிச்சென்றது.

இவையனைத்தும் நடந்து கொண்டிருக்க , அமைதியாக மரத்தின் பின் தனித்திருந்தது பேருந்து நிழற்குடை. அதன் மூலையில்  கூரையை பார்த்துக்கொண்டிருந்தது பிறந்து சில தினங்களே ஆண் குழந்தை. அருகில் ஓர் சூலி நாய் குட்டிப்போட காத்து படுத்திருந்தது. குழந்தை தன் கைகால்களை ஆட்டியது ஆனால் ஒலி எழுப்பவில்லை இன்னதென்று எதையும் கேட்டு உற்று நோக்கவுமில்லை , அதனால் இருக்கும் தடம் சுற்றியிருந்த எவருக்கும் தெரியவில்லை. நாய் அவ்வப்போது குழந்தையை நக்கிக்கொண்டிருந்தது. ஒவ்வொரு முறை நக்கி முடிந்ததும் குழந்தை மெல்ல தன் உதடுகள் விரிய புன்னகைத்துக்கொண்டிருந்தது.

பின்னொருநாள் குழந்தைகளை பறிகொடுத்த பெண்ணொருத்தி அவனுக்கு தினமும் முலைகொடுக்க ஆரம்பித்தாள். "மண்டைக்கு வழியில்லாத கேஸாக்கும்" என்று ஊர்மக்கள் அப்பெண்ணை கூறிவந்தனர். அவளை அவன் "ம்மா" "ம்மா" என்று  அடித்தொண்டை அதிர்வாய் மட்டுமே அழைத்தான். எட்டு வயது வரை அவன் முலையருந்த்தியதாக ஊர் மக்கள் கூறியிருந்தர். பத்து வயது வரை அவன் பேசியது "ம்மா" என்ற ஒற்றைசொல்லாகவே இருந்தது. மொழி அவனுள் அவ்வழியே விளைவு கொண்டிருந்தது.

அவள் இறந்த பிறகு அவனை பிற மனிதர்கள் தங்களுடன் சேர்த்துக்கொள்ளவில்லை. இடுங்கிய தெருக்கள் நிரம்பிய அந்த ஊரில் நாய்களுடன் அவன் வளர்ந்தான் , அன்னைகள் இட்ட குப்பையமுதம்  தின்று சென்றது வாழ்க்கை. உணர்ச்சிகளற்ற மிருகம் போலிருந்தவனை சில சமயம் கயிற்றில் கட்டிப்பொட்டு கூவிச்சிரித்தனர் அவன் வயதொத்த சிறுவர்கள். பலபுலனில்லா அவனை அனைவரும் முண்டன் என்று அழைத்தனர்.

மெலிந்து இறக்கும் தருவாயில் "ம்மா ம்மா" என்று கதறியவனின் குரல் கேட்டு அவனை அருகிலிருந்த சில காட்டுநாயக்கன் தெரு மக்கள்  நெருங்கித்தூக்கினர். நல்ல உடல் வலிமையுடன் அவன் இருந்திருந்தானெனில் அவனுக்கு முலைகொடுத்த அப்பெண்ணைத்தவிர எவரையும் அவன் அணுக விட்டிருக்கமாட்டான். அவளின் பால்முலை வாசனையை அதன் ஸ்பரிசத்தை தவிர எதையும் அவன் அணுக விட்டதில்லை.

"மக்கா லே பாக்க எலும்பாட்டுருக்கா அனா மொரட்டு கனம் கேட்டியா" என்று ஒருவன் சலித்துக்கொண்டான்.

பக்கத்து ஊர் குன்னுவெளை தேவாலயத்தின் திண்ணையில் கொண்டு கிடத்தியவுடன் இடுப்பிலிருந்த துண்டை அவிழ்த்து  வியர்வையை துடைத்துக்கொண்டனர்.

"சாமீ....சாமீ....." என்று பாதிரியாரை அழைத்தான் ஒருவன்

"என்னடே இந்நேரத்துல வந்துருக்கீங்க , ஆருக்காது பிரசவமா" என்று கேட்டவாறு அங்கி சலசலக்க வந்தவர் முண்டனைப்பார்த்ததும். "இதாராக்கும் எங்கயோ பாத்தாமாரிலா இருக்கு" என்று குனிந்து பார்த்தார்.

கூட்டத்தில் ஒருவன் "இவன் நம்ம முண்டன் சாமீலா" என்றான் சிரித்தவாறே "பயலுக்கு காது கேக்காது கண்ணு முளி கிடையாது பேச்சும் வராது கேட்டெளா , ஆனா பய முகத்த பாத்தா அத்தன ஐசோர்யம்" என்றான்.

பாதிரியார் குனிந்து பார்த்தார். முண்டன் "ம்மா ம்மா" என்று முனங்கினான். "இந்த பயல எங்கனையாவது ஆஸ்பத்திரிக்கு  கூட்டிட்டு போனும் சாமீ தீர சுகமில்ல" என்றான் கூட்டத்தில் இன்னொருவன்.

அடுத்த நாள் விழித்ததும் அவன் ஆஸ்பத்திரியில் யாரையும் நெருங்க விடாமல் அங்குகிங்கும் ஓடி காயங்களுடன் மயக்கமாக படுத்திருந்தான்.

2.

வெண்மையில்லா கருமணி மட்டுமே நிரம்பியிருக்க மூடா இமைகள் ,  சிறுத்த காதுகள் , கீழ் உதடு பெருத்து வாய் பெரிதாய் அதன் முடிவில் முடிவிலா மடிப்பு, வயாதான நாயின் விரிந்த நாசி , குழிந்த கன்னங்கள் , முன் வழுக்கை , நீண்ட கை கால்முட்டி வரை அவன். அவனை உற்றுபார்த்தபடி அவள் அந்த படிப்பறையின் வாசலிலேயே நின்றிருந்தாள். அவன் அவள் நிற்கும் திசையைப்பார்த்ததும் அவனருகில் இருந்த இன்னொரு நாற்காலியில் சென்றமர்ந்தாள்.

இருவரும் தங்கள் கைகளைத்தொட்டு பேச ஆரம்பித்தனர். ஒவ்வொரு தொடுதலுக்கும் ஒவ்வொரு ஆங்கில எழுத்து என்ற வீதத்தில் நீர்த்திவலைகள் தெறிக்கும் அருவியென வார்த்தைகள் விழுந்து கொண்டெயிருந்தன. விலகி நின்று பார்ப்பவர்களுக்கு அது இரு குழந்தைகள் அவர்களுக்குள் மட்டும் முயங்கும் ஒரு விளையாட்டு போலிருக்கும்.

"எனக்கு நேரம் கொடுத்ததற்கு நன்றி அதிக நேரம் எடுத்துக்கொள்ளமாட்டென்" என்றாள் காயத்ரி

"நான் ஒரு பொருள் அல்ல , அது உனக்கு தெரிகிறதா"

"இல்லை எங்களுக்கு நீ ஒரு மூலப்பொருள்" என்றாள். இருவரும் சிரித்தனர். அவன் சிரிப்பு நிற்காத விக்கல் போலிருக்கும் முதலில் கேட்பவர்களுக்கு.

"உனக்கு தெரியுமா நீதான் உலகிலேயே உன்னைப்போலவே இருக்கும் ஒரே ஒருவன் என்று" 

"நான் உங்களைப்போல அல்ல என்பதும் எனக்கே தெரியும், " என்றான் நாற்காலியில் இருந்து எழுந்தவாறு

அவளும் கலவரத்துடன் எழுந்தாள்.

அவன் புன்முறுவலுடன் அமர்ந்து "நான் இங்கு வந்து இருபது வருடங்கள் ஆகின்றன , உங்களைப்போன்றவர்கள் நேற்று வந்து நாளை செல்ல போகிறவர்கள். என்னை ஓர் அரிய கருவியின் பாவத்துடன் அணுகுகிறார்கள். அதிலும் நீதான் முதல் பெண். அவர்களிடம் எனக்கு எந்த அக்கறையுமில்லை ஆனால் உங்களிடம் எனக்கு சில கேள்விகள் கேட்பதில் எப்போதும் ஆர்வம் இருக்கின்றது. கேட்கட்டுமா ? ரொம்ப நேரம் எடுத்துக்கொள்ள மாட்டேன்" என்று சிரித்தான்.

மகிழ்ச்சியில், "நான் மட்டும்தான் ஆய்வு செய்கிறேன் என்று நினைத்தேன் தவறுதான் , கேளுங்கள்" என்றவாறு தன் மற்றொரு கையில் மடிக்கணிணியை குறிப்பெடுக்க எடுத்துக்கொண்டாள். அவள் கண்கள் இளமைக்கே உரித்தான குறும்புடன் காட்டுச்செடியின் இலையில் தங்கிய நீர்த்துளி போல தழும்பியது.

"எதைத்தேடி இங்கு வந்தாய்"

"நாங்கள்  மொழியியல் ஆய்வு மாணவர்கள் ,  மொழியின் ஆதி அதாவது அதன் வரிவடிவமும் ஒலி அமைப்பும் இணைந்து அதன் தோற்றத்திலிருந்து இப்போதிருக்கும் ஒழுங்கமைவுக்கு வந்த பரிணாமத்தை தெரிந்து கொள்ள வந்திருக்கிறேன்"

"நல்லது , குறிப்பாக என்னை எதற்கு பார்க்கவந்தீர்கள்"

"மனித உயிர் அனைத்திற்கும் அதன் பரிணாம வளர்ச்சியில் மொழியும் ஒரு பகுதியாக வந்து சேர்ந்திருக்கின்றது என்பதை நான் நம்புகிறேன்" தயங்கி பின் யோசித்து "அந்த பரிணாமத்திற்கு நம் புலன்களே காரணம் என்ற பட்சத்தில் பார்க்கவோ , கேட்கவோ , பேசவோ முடியாத உங்களுக்கும் எனக்கும் இருக்கும் வித்யாசமே உங்களைத்தேடி வந்ததன் காரணம். என் ஆராய்ச்சியில் புதிய திருப்பங்கள் வரலாம் என்று எதிர்பார்க்கிறேன்"

"நல்லது , இதே கேள்வியுடன் எனைப்பார்க்க நாம்சாம்ஸ்கி வந்திருக்கிறார்  இன்னும் பலரும் சரி அது இருக்கட்டும். அடுத்த கேள்வி , இயலாமையை வெறுப்பைப்பற்றி என்ன நினைக்கிறாய்"

"நம்மால் இயலாதது என்று எதுவும் இல்லையென்றே நினைக்கிறேன் , என்ன அதனை செய்ய அல்லது அடைய கடின உழைப்பு அவசியமாகின்றது. வெறுப்பு நம் இயலாமையில் இருந்து பிறக்கின்றது , நம்மை தகர்க்கும் , நம் இயலாமையை உணர்த்தும் செயலை செய்யும் அனைத்தையும் நாம் வெறுக்கிறோம்"

"என் குறைகளை இயலாமையை என்ன நினைக்கிறாய்"

"நீங்கள் ஒரு, உங்களுக்கு" என்றவாறு தயங்கினாள் பின் தொடர்ந்தாள் "புலன்களை இழப்பவன் தன் மனதை ஆழ்வதற்கு அதனை கட்டுப்படுத்துவத்துவதற்கு இயற்கையிலேயே தகுதி வாய்த்தவன் , அது ஒரு வரம் என்று நான் நினைப்பதுண்டு , உலகின் அனைத்து புராணங்களிலும் நாம் மீண்டும் மீண்டும் காண்பது இதையே அருந்தவம் செய்வது ஒருவன் தன் புலங்களை அடக்கவே. அதன் பின்பே அவர்கள் கடவுளை காண்கின்றனர். நீங்கள் முற்பிறவியில் செய்த காரியங்களால் இங்கு புலன்களின்றி கடவுளின் அருகில் அமர்ந்திருக்கிறீர்கள்" என்று அவளின் குமிழுதடுகள் விரிய சிரித்தாள்

"நல்லது , உனக்கு எனக்கு வரும் கனவுகளைப்பற்றி என்ன நினைக்கிறாய்"

"கனவுகள் வசீகரமானவை என்று எங்கோ பாடித்த ஞாபகம் , கனவுகள் மனிதனில் உருவாகும் ஒரு மாபெரும் கலைப்படைப்பு என்று நினைக்கிறேன் மொசார்ட்டின் இசைக்கோர்ப்பும் வான்கோவின் வண்ணங்களும் சேர்ந்தது போல. உளவியல் முறையில் நான் அவற்றை அணுகி அதன் பலங்களை அவதானித்திருக்கிறேன் என் நண்பர்களுக்கும் பரிந்துரைக்கிறேன். ஒரே விதமான கனவுகள் பல உருவெளிகாட்சிகளுடனும். பல விதமான கனவுகள் ஒரே விதமான  உருவெளிகாட்சிகளுடனும் வருவதாக எனக்குத்தோன்றும். ஆனால் சில கனவுகள் மட்டும் திரும்ப திரும்ப வருகின்றன. அவை ஒழுங்கற்ற ஒழுங்கில் அமைந்திருக்கின்றன என்று நினைக்கிறேன்.

உங்களுடைய கனவுகள் உருவெளிக்காட்சிகளற்ற ஒலிகளற்ற கருமை நிரம்பியதாய் இருக்கும். உங்கள் நனவிலியில் இருக்கும் வாசனை சுவையைத்தவிர உங்களுக்கு கனவில் ஏதும் வராது அல்லவா"

அதற்கு பதில் சொல்லாமல் "காமம் என்பது உனக்கென்ன" என்றான்.

அவள் பதற்றமின்றி "நான் உருவாக்கிவைத்து நான் முயங்கி நான் வெளிவரயிலா வெளியே காமம். புலன்கள் அனைத்தும் மோதிக்கொள்ளும் உச்சமே காமம் இதை போகிக்கும் புலங்களில்லா உலகில் திளைப்பதே காமம்  என்பதை ஞானிக்கும் வைத்துக்கொள்ள்லாம்" என்றாள்

"உணர்ச்சிகள் என்பது உனக்கென்ன"

"புலன்களின் முயக்கத்தால் நாம் சேகரித்துவைத்துள்ள அனைத்தும் நம் மூளையில் உள்ளன , அதனை பல சூழ்நிலைகளில் மீண்டும் முயங்க விட்டு நம் நனவிலி உருவாக்குவதே உணர்ச்சிகள்"

"நீ ஆய்வு செய்வதாக தெரியவில்லை , கற்பனை மட்டுமே செய்கிறாய்"

"ஆய்வு என்பதன் தொடக்கம் கற்பனைதானென்று நினைக்கிறேன்"

"நீ ஒரு பெண் இல்லையா"

"சந்தேகமா"

"உன்னை தொட அனுமதிப்பாயா"

அனுமதிக்கு காத்திருக்காமல் , அவளின் தலை மீது இரு கைகளையும் வைத்தான்.

"மென்வெம்மையுடைய தலை , கூந்தல் அடர்த்தியில்லாமல் மிருதுவாக நெளிந்திருந்தது. பெரிய நெற்றியின் கீழே இலை நரம்புகளென வளைவும் மென்மையுமாய் புருவங்கள். அங்குகிங்கும் ஓடித்துடிக்கும் அறியா ஒளிக்கோளங்கள். பெரும் அதிர்வுகளுடன் வளைந்த தடித்த பெரிய மூக்கு. இடக்கன்னத்தில் சிறிய குழியான தளும்பு. மென் மீசை மயிர்கள். கீழே கருஞ்சுழல்" பயத்தில் கையை வெடுக்கென்று எடுத்து விட்டான்.

அமைதியாக இருந்த அவள் "என்னவாயிற்று எதாவது பிரச்சனையா" என்றாள் அவன் கைகைளை அழுத்தி.

"இல்லை எனக்கு எப்பொழுதும் வரும் கனவு ஞாபகம் வந்தது. கனவில் நான் ஒரு பெண்ணை பெரிய வெளியென அறிவேன் ஆனால் அவளின் யோனியின் அருகில் சென்றதும் பயந்து விளித்துக்கொள்வென். உன் உதடுகளைத்தொட்டதும் அந்த யோனி ஞாபகம் வந்துவிட்டது"

அதிருப்தியாக இருந்தாலும் அவள் அதனை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. "நண்பர்கள் அழைக்கின்றனர். இது வெறும் சந்திப்புக்கான தொடக்கும் மட்டுமே. நாம் நாளை சந்திப்போம்" என்றவாறு எழுந்தாள்.

அறையின் வாசலில் நின்று அவன் செய்ககையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் தலையயை மட்டும் திருப்பி பார்த்ததும் அகப்பட்டுவிட்டதைப்போல நடக்கலானாள்.

3.

"இன்று நான் கேள்விகளை கேட்கலாமா" என்றாள் காயத்ரி.

அந்த கைவிடப்பட்ட பூங்கா கல்லூரியின் இறுதியில் மரங்கள் ஒன்றோடொன்று இறுக அணைத்தபடி நின்றிருந்தன. பெரிய ஆலமரம் ஒன்று நடுநாயமாக வேர்ப்புடைப்புடன் விழுதுகள் தொங்க நின்றது. அதைச்சுற்றி புதர்கள் மண்டிய நடைபாதை. அவன் மரத்தில் இருந்த பெரும்பொந்தில் போய் அமர்ந்து கொண்டான். அவள் அதிலிருந்த ஓர் வேர்புடைப்புல் அமர்ந்தாள்

"இங்கு ஏன் வரச்சொன்னீர்கள்"

"நான் தனிமையை விரும்புகிறேன்,  நேற்று நிறைய கேள்விகேட்டுவிடேன்  அதற்கு என்னை மன்னியுங்கள் , இன்று நீங்கள் கேட்கலாம்"

"தனிமையை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்"

"தனிமை என்பதற்கு உங்களுக்குள் ஏற்கனவே ஓர் அர்த்தம் இருக்கலாம். ஒரு வேளை இப்படி , மனிதர்களற்ற இடம் , சப்தமற்ற இடம் , மலை உச்சி , தனித்த அறை இப்படி பல. சரியாக சொல்லவேண்டும் என்றால் உங்களை பாதிக்காத ஒலிகள் அல்லது மொழிகள் மட்டும் அலையும் வெளியே தனிமை."

"ஒலிகள் சரி அது என்ன மொழிகள்" என்றாள்

"மனிதன் தனக்கான மொழிகளை கண்டுகொண்டான். அப்படியிருக்க பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்து உயிர்களும் தனக்கேயான பரிணாம வளர்ச்சியில் வந்து இங்கு நம் முன்னே நிற்கின்றன அல்லவா , அப்படியேனில் அவற்றின்  ஒலிகள் நமக்கு தெரியாத ஒரு லிபியல்லவா. நீங்கள் நடந்து வரும் பொழுது நரம்புகளேன பிணைந்திருக்கும் பெரிய சிறிய வேர்களில் தொகையை மிதித்து வந்திருக்கலாம். அவை தங்களுக்குள் பேசிக்கொள்கின்றன" சட்டென அவளின் கையை விடுவித்து வானத்தை உற்று நோக்கினான்.

வெண்மேகங்கள் வேகமாக நடந்து பின் ஓடிச்சென்று கொண்டிருந்தன. சிட்டுக்குருவிகள் புதர்களுக்குள் மழைத்துளியென சென்று தடமின்றி மறைந்தன. மரங்கள் தென்றலுக்கு ஏற்றாற்போல மெதுவாக இலைகளை உதிர்த்தபடி ஆடியன. அதில் ஒரு பழுத்த இலை மெல்ல காற்றில் தவழ்ந்து அவன் மடியில் விழுந்தது.  உடம்பு திடீரென்று அதிர , மேல் சட்டை நனையுமளவிற்கு வியர்க்க தன்னைத்தானே சமாதாப்படுத்த முயன்றான். அவள் இதனை கவனித்துவிட்டாள்.

"மொழி உங்களுக்குள் எப்படி உருவானது , அதனை நீங்கள் அறிந்ததுண்டா"

தன் பதற்றத்தை வெளிகாட்டிக்கொள்ளாமல் "மொழி ஒரு கொடிய மிருகம் போல என்னை வாலால் அடித்து துரத்தியிருக்கின்றது. நான் அதன் முன் மண்டியிட்டு அழுதிருக்கிறேன். கோபத்தில் கத்தியிருக்கிறேன். ஆனால் ஒருபோதும் முலைகொடுக்காமல் விலக்கியதில்லை. என இயலாமையை உங்களால் அறிந்து கொள்ள இயலாது. ஒரு வினாடியில் நீங்கள் படிக்கும் புரிந்து கொள்ளும் வார்த்தைகாக நான் ஒரு மணி நேரம் பொறுத்திருந்த காலம் என்னுள் இருகின்றது. அப்பொழுது நான் மருத்துவமனையில் இருந்தேன். உங்களுக்கு ஹெலன் கெல்லர் பற்றி தெரிந்திருக்கும் அவருக்கு வார்த்தைகளை உலகின் பருப்பொருளுடன் இணைப்பதில் இருந்த அதே பிரச்சனை எனக்கும் இருந்தது. அவருக்கு கிடைத்த அன்னா போல எனக்கு பாதிரியார் சிவம் கிடைத்தார். அவரே எனக்கு உருகொடுத்தார். கைகளைப்பிடித்து எனக்கு பருப்பொருட்களை அறிமுகப்படுத்தினார். பின் அதொரு விளையாட்டானது"

"மனிதன் சிந்திப்பது மொழியிலேயே , அவன் தன்னுள் சேர்த்துவைக்கும் அனைத்துமே மொழியின் வடிவிலேயே உள்ளது. அதனை பின் தொட்டெடுக்கவும் மொழி தேவைப்படுகிறது. அப்படியிருக்கையில் சிறுவயதில் எப்படி உங்களால் சிந்திக்க முடிந்தது"

"என் சிந்தனை இயங்கியது பசி , காமம் மற்றும் கோபம் பொருட்டே. அவற்றை  என்னால் உணர முடியும் அதற்கு நான் ஒரு பெயரும் கொடுத்திருந்தேன்."

அந்தச்சொல்லை  உச்சரிக்க வாயைக்குவித்தான். ஆனால் ஒலியெழவில்லை அதிர்வாய் காற்றில் கலந்தது "ம்மா..."

"அம்மா" என்றாள் காயத்ரி.  அறிந்திருந்த ஒன்று அவள் முன் பூதாகரமாய் நிற்பதை உணர்ந்தாள்.

"ஆம் அதுதான்" என்றான் அவன்

"அதன் பிறகு நான் கற்றது பாதிரியாரிடம் இருந்தே. ஆரம்பத்தில் எல்லா சொற்களின் இறுதியிலும் நான் 'ம்மா' என்று உச்சரித்ததாக அவர் சொல்லுவார்."

"எப்பொழுதிலிருந்து நீங்கள் கற்காத மொழியை புரிந்துகொள்ள ஆரம்பித்தீர்கள்"

"நான் புரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை அதனை நான் கண்டைந்தேன். என்னில் இருக்கும் பலவற்றில் ஒன்றை நான் அறிந்து கொண்டேன். நம் கைகால்களை தொட்டு உணர்வது போல அவையும் நாம்தானே! குரங்குகளின் மரபிணுவில் மொழியின்  கூறுகள் இருப்பதாகவும். அதன் பரிணாம வளர்ச்சியே நாம் கொண்டுள்ள மொழியாக கூறுகின்றனர். இதில் ஆச்சரியப்படுவதற்கொன்றுமில்லை. தமிழ் வார்த்தைகளை பாதிரியார் தொடுமுறையில் கற்றுக்கொடுக்கையில் அதன் அர்த்தங்கள் என்னுள்ளிலிருந்து மேலெழுந்து வந்தன. கடலாழம் நாம் அறிய முடியாதது என்பார் பாதிரியார். அதனை பூரணமாக உணர்ந்திருக்கிறேன்"

"நீங்கள் கற்ற முதல் தமிழ் வார்த்தை"

"லிங்கம் , என் குறியை முதலாக காமத்தில் தொட்ட கணம் இந்த வார்த்தை என்னுள் ஓடியது. அதனைப்பற்றி நான் கேட்கவே பாதிரியார் எனக்கு தமிழை அறிமுகப்படுத்தினார். வார்த்தைகள் அதன் பின் எனக்குள் ஒன்றன்பின் ஒன்றாக ஊற்றேடுத்தன. ஆனால் அது சமஸ்கிரத வார்த்தை என்பது பின்பே எனக்கு தெரிந்தது. ஆப்பிரிக்காவில் அழிந்துபோனதொரு மொழியைக்கூட நான் கண்டடைந்துகொண்டேன். அதனை அறிந்தவன் இந்த கணத்தில் இந்த பிரபஞ்சத்தில் நான் மட்டுமே"

"வண்ணங்களை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா ? , அதனை எப்படி உணர்கிறீர்கள் ?"

"வண்ணங்களை நான் அறிந்ததில்லை , உணர்ந்திருக்கிறேன். நான் அதனை வெறும் வார்த்தைகளாக மட்டுமே அறிந்து வைத்திருந்த பொழுது அவை என் உணர்ச்சிகளுடன் தொடர்புற்றிருந்தன. என் தனிமையை கருப்பு  , உறக்கத்தை வெண்மை , மகிழ்ச்சியை பொன் , காமத்தை பச்சை , கோபத்தை சிவப்பு என்று என் மனம் எனக்கு அறிவித்திருந்தது. நான் அறிய முடியாமல் இருப்பது இசையை மட்டுமே. அதன் கட்டுமானத்தை மொழிகளில் சிந்திக்கும் பொழுது எனக்கு பிடிகிடைக்கவில்லை ."

வண்டொன்று அவனது தலையைச்சுற்றி ரீங்காரமிட்டது. பதறி எழுந்து கைகளை முன்னும் பின்னும் ஆட்டி அதனை பிடிக்க முயன்றான். அவன் முகம் பரிபூரண மகிழ்ச்சியிலிர்ருந்தது.

"என்னவாயிற்று" என்றாள்

"அதன் சிறகடிப்பு"

"அது கேட்கிறதா"

"ஆம்"

"உங்கள் கைகளை நான் இப்பொழுது தொடவில்லை , ஆனால்" என்றாள் ஆச்சரியத்துடன்

"நீங்கள் பேசுவது எனக்கு கேட்கிறது கூடவே அதன் இசை" என்று தனக்குள் நினைத்துக்கொண்டான். அவன் அமர்ந்திருந்த மரம் காற்றிற்கு திசைகள் கடந்து சுழல  , இலைகள் உதடுகளென துடிதுடித்துச்சிரித்தன. அதனை உணர்ந்தவனென அதனை மேல் நோக்கி உற்றுப்பார்த்தான். அவன் ஒளியற்ற கண்கள் சுழன்றன. புருவங்கள் மேலெழும்பி புன்னகைத்தான்.

கால்கள் உறுதியுறாத குழந்தையின் நடைபோல அவன் முன்பு வந்த ஓடுபாதையில் ஓடினான்.

4.

ஜன்னலுக்கு கீழ் இருந்த மேசையில் அழுக்கு ஒரு வழுவழுப்பான தோல் போல எண்ணைப்பிசுக்குடன் படர்ந்திருந்தது. அதன் மீதிருந்த தொட்டறியும் புத்தகங்களின் அசைவின்மை அவன் சிலகாலமாக எதையும் படிக்கவில்லை என்பதை காட்டியது. கணினி முன் இருந்த தொடு முறை விசைப்பலகை மேல் சிலந்தி ஒன்று தன் எட்டு காலகளை எடுத்து வைத்து நடக்கலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தது. அது அமர்ந்திருந்த திசையையே பார்த்துக்கொண்டிருந்தான்.

அந்த அறை வெளிச்சம் வருவதற்கு வாய்ப்பில்லாததாய் நிலத்துக்கு கீழேயிருந்தது. கதவுகள் மற்றும் ஜன்னல்கள் வெற்றிடம் உருவாக்கும் வண்ணம் மூடப்பட்டிருந்தது. தன்னை உண்ணும் விலங்கின் கண்களை அரவணைப்புடன் பார்க்கும் மிருகம் போலவனிருக்க அந்த அறை அவனை தின்றுகொண்டிருந்தது. அதைவிட்டு வெளியெ வந்து சில நாட்களாகின்றன என்பது அவனுக்கு தெரியாமலில்லை. உணவு இல்லாமல் உறங்கும் குளிர்கால விலங்கு போல அவன் விழித்திருந்தான். கண் இமைகள் கனத்து விழிகள் ஆழமானதொரு பாசிபடர்ந்த குட்டை போன்றிருந்தது. மேஜையுடன் கூடிய இருக்கையில் இருந்து எழும்பும் போதெல்லாம் கால்கள் இருக்கும் உணர்வுபோய் தடுமாறும். அணிந்திருந்த மேல் சட்டையும் ஜீன்சும் கூட தூசிப்பிடித்திருந்தது. மொத்தத்தில் அவன் ஒரு பாழடைந்த உடைந்த ஜன்னல் கதவுகளுடைய வீடு போல இருந்தான் ஆனால் உயிரிருந்தது.

இன்று பௌர்ணமி , அவனுள் அவனுக்காகவே உருவாக்கியிருந்த நிலவின் இருளொளி முகத்தில் உயர்ந்த ஜன்னல் வழி வழிய அமர்ந்திருந்தான். தெருவில் நாய் ஒன்று அடிவயிற்றிலிருந்து மொத்த சக்தியையும் தன் தொண்டைக்கு திரட்டி ஊளையிட்டது. பதற்றம் தொற்றிக்கொள்ள "அவை கேட்டுக்கொண்டேயிருக்கின்றன" என்று நினைத்தவனாக தலையை இரு கைகளால் பற்றிக்கொண்டான்.

கதவு தட்டப்படும் அதிர்வை முதுகில் உணர்ந்தவனாய் அந்த திசையை நோக்கி திரும்பினான். வந்தவள் அவன் அருகே வந்து தன் கைகளால் அவன் கைகளை பிடித்து தொடுதல் முறையில் பேச ஆரம்பித்தாள். அவன் கைகளை சற்று அழுத்தியவாறே "ஏன் இப்படி தனியாக வந்து உன்னை சுயவதைசெய்துகொள்ள வேண்டும்" என்றாள்

அவன் அதற்கு பதில் ஏதும் கூற முற்படவில்லை. அமைதியான அறையின் தனிமையை ஏற்றுக்கொள்ள முடியாமல் "என் அறையே அதனுள் தனிமையாக இருக்கின்றது" என்றவாறு அவன் கைகளை விடுவித்துக்கொள்ள முற்பட்டாள்.

"நிசப்தம் , நான் அதனை இழந்து விட்டேன். அதன் தூய்மை என்னை விட்டு விலகிவிட்டது" என்றான். அவன் ஒளியிழந்த கண்கள் பனி வெம்மை கொண்டது பொல துளிகளை உதிர்த்தது.

அவன் உட்கார்ந்திருந்த நாற்காலியின் எதிர்புறம் இருந்த சுவரின் மூலையில் பல்லி ஒன்று அமைதியான அறையில் பலத்த  சப்தமொன்றை எழுப்பியது. இருவரும் அதன் தியைநோக்கி திரும்பினர்.

"உனக்கு அந்த சப்தம் கேட்கிறதால்லவா , நான் பேசுவதும் கூட" என்றாள் ஆச்சரியப்பட்டவளாக.

 "அந்த நாளுக்குப்பிறகு பிரபஞ்சத்தின் குரல் கேட்க ஆரம்பித்துவிட்டது. தொடக்கத்தில் அதிதூய இசையைப்போலலிருந்தது. பரவசம் உச்சத்திலேயே கழிந்தன நாட்கள். மெல்லிய தென்றலென இருந்தது பின் பேரோலம் கொண்டு  துழன்றடித்தது. அதன் விளிம்பில் விட்டுவிட மன்மின்றி தொற்றிக்கொண்டேன். அதும் என்னை விடவில்லை. பல்லிகளின் நாய்களின் குருவிகளின் சிலந்திகளின் ஏன் மரங்களின் செடிகளின் மொழியை என்னால் உணர முடிகிறது" மரணம் அவனெதிரில் நேரமில்லாமல் காத்திருப்பதைபோல பேசிக்கொண்டிருந்தான "ஆனால் அவை மனம் இசையால் இயங்குகிறது , அவை மொழிவதேயில்லை. அந்த இசையில் அவை லயித்திருக்கின்றன. நம் மனம் மொழியால் இயங்குகையில் அவை இசையில் இயங்குகின்றன. என்ணங்களை இசைக்கோர்ப்பாக சேர்க்கமுடிந்தால்" கண்காண ஒன்றில் லயித்திருந்த அவனை அவள் தொட்டு இறக்கி வைத்தாள். "ஆம் அதொரு பேரிசையின்பம். ஆனால் அதன் மறுபுறம் தொடர்ந்து உச்ச ஸ்தானியில் நிறுத்தாமல்  இயங்கும் தருணம் உண்டு அதுவே பேரோலம்" 

பதறியவனாக "என்னால் முடியாது இனி நான் உலகுடன் தொடர்பற்றிருப்பதே எனக்கும் உங்களுக்கும் நல்லது" என்று நாற்காலியில் இருந்து எழ முற்பட்டு தவறி விழுந்தான். அதன் எதிரே இருந்த விட்டிலை நொடிப்பொழுதில் கவ்வியவாறு பல்லி மீண்டும் கத்தியது. விழுந்தவன் எழாமல் அந்த அதிர்வு வந்த திசையையே நோக்கிக்கொண்டிருந்தான்.

அவனும் கத்த ஆரம்பித்தான் "ஆஆஆஆ" "ஊஊஊஊஊ"  "இஇஇஇஇ" "ஈஈஈஈஈ" "ஓஓஓஓஓஓ" என்று ஒவ்வொரு ஒலிக்கும் இடைவெளி விட்டு அதிர்வாய் அவன் குரல்வளை ஏறி இறங்கியது. கைகால்கள் விறைத்து நெளிந்தான் அவன் உடம்பெங்கும் வியர்த்திருந்தது. மூச்சு அடங்குவதாயில்லை. வாயில் இருந்து பதைபோன்ற எச்சில் வழிந்ததும் புயல் ஓய்ந்த மரம் போல கிடந்தான். சன்னதம் வந்த சாமியாடி போலிருந்தான் அவளுக்கு. பல்லி தடம் தெரியாமல் மெல்ல ஊர்ந்து மறைந்துவிட்டது.

அவனை தூக்கி பிடித்து நாற்காலியில் அவளும் அதேபோன்று  பதற்றத்துடன் அவனை உட்கார வைத்தவளாக "ஏதும் அடிபடவில்லையே , என்ன ஆயிற்று தண்ணீர் கொண்டு வருகிறேன்" என்று அவன் கையை தொட்டு பேசியவளாக செல்ல முயன்றாள். அவள் கையை வலுவாக அழுத்தியவாறு சிறிது நேரத்தில் தெளிந்தவனாக "எங்கே அந்த பல்லி" என்று கோவம் கொண்டவனாக அந்த அதிர்வு வந்த திசை நோக்கி அதனை கொல்ல முயன்றான்.

"இல்லை நீ சென்று விடு இது எனக்கு சரியாக படவில்லை எனை அவை எங்கோ கூட்டிச்செல்கின்றன. அதன் பரந்த வெளி எனக்கு பதற்றத்தை அளிக்கின்றது , தெளிவாக தெரிகின்றது அதிலிருந்து என்னால் வெளிவர இயலாது. நான் யோசித்து அதனை ஆட்கொள்ளவில்லை  என்னை வந்தடைகின்றது. கசண்டாஸ்கி சொன்னது போல "என் மூளைய பற்றிக்கொண்ட பருந்து" போன்றது அது. ரத்தம் வழியும் நிணத்துடன் தலையை தொட்டு தொட்டு நான் அலைகிறேன். இன்புறும் வண்டின் விளைவுடனே நான் அதனை அணுகினேன் ஆனால் அது அவற்றையெல்லாம் தாண்டி எங்கோ இருக்கின்றது. அந்த பூச்சியின் அழுகுரலை அந்த பல்லியின் திருப்தியை என்னால் உணர முடிந்தது. உண்மையாக சொல்கிறேன் அது என் கற்பனையல்ல அவைகளின் குரலை கேட்டேன் எனை நம்பு , போதும் போதும் நிறுத்துங்கள்" என்று கூறி தரையில் விழுந்து கைகளையும் கால்களையும் கவிழ்த்துப்போட்ட வண்டு போல ஆட்டி கதறினான்.

5.

எங்கும் இருள் நிரம்பியிருந்தது , ஆனால் அதனுள் அதன் பருப்பொருட்களை அடையாளம் காணமுடிந்தது. அங்கு அதிர்வுகளே இல்லை ஆனால் அவை உருவாக்கிய பருப்பொருட்கள் இருந்தன. அதன் நெளிவுகளை அவனால் தன் கைகளைக்கொண்டு தொட முடிந்தது அதன் வாசனையை அவனால் நுகர முடிந்தது. கருமைக்குள் கருமையாய் விரிந்திருந்த மாபெரும் உலகமொன்று அவன் முன் படர்ந்து கிடந்தது. அதன் ஒவ்வொரு பொருளையும் அவன் தொட்டறிந்தான் அதன் மடிப்புகள் அதன் திண்மையை அதன் நீர்மையை அதன் குளிர்ச்சியை அதன் வெம்மையை அதன் ருசியை அதன் அதி வாசனையை அனைத்திலும் முயங்கி எழுந்தான். அவ்வுலகத்தின் உச்சி முதல் பாதம் வரை அவன் அறிந்த ஒன்று பொலிருந்தது. அதன் உச்சியில் நீர்மையுடன் விழுந்திருந்த கருமை கீழே குழிந்த இரு நீர்மைகள் நகர்ந்தால் ஓங்கிய நிலத்தில் முன்னும் பின்னும் அலைகளிக்கும் வெம்மையான காற்று பின் தேன் தடாகத்தின் திறப்பு குனிந்தால் ஓங்கிய வழுக்கிச்செல்லும் இரு குவைகள் வழி வழியும் அமுத நீர்மை தாண்டினால் பரந்த பொருளற்ற வெறுமை அதன் சிறிய பள்ளம்  முடிகையில் இருந்தது ஓர் சுழல் கால் வைக்க வேண்டாம் என்று எண்ணும் கணம் உள்ளே விழுந்தேன்.

பின்பு அவன் எழுந்து நடமாடமுடியாமல் போனது. இறக்கும் வரை அதன் அவசியமற்றுக்கிடந்தான் 

விளிம்பிலிருந்து நகர்ந்து புயலின் நடுப்புள்ளியில் நிற்பதை காலமற்று உணர்ந்திருந்தான். பிரபஞ்ச நிசப்தம்.

Monday 17 August 2020

ஊர் கதை - குறுங்கதை

இருள் பரவ ஆரம்பித்து ஒரு மணி நேரம் ஆகிறது. மயங்கிவழியும் நீலம் வானில் விரவியிருக்கும் பதினோறு மணி. பாதிபடித்து வைத்திருந்த நாவல் மடியிலிருக்கிறது. இந்தியர்களுக்கு காட்டமான மால்புரோ சிகரேட் ஒன்றைப்புகத்தாலொழிய என்னால் விழித்திருக்க முடியாது. கண்களின் இரப்பை கனத்து இமைகள் மூடக்காத்திருக்கிறன.ஒரு நடை சென்றால் தூக்கம் கலையலாம். வழக்கமாக செல்லும் பாருக்கு வெளியே பெயர் தெரியா நண்பர்கர்களிடம் வெறும் வணக்கம் வைத்து எதாவது உதிரிச்சொற்கள் பேசலாம்.

குப்பைக்கூழங்கள் அற்ற தெருக்களில் எரித்த சிகரேட்டின் துண்டுகள் மட்டும் கூட்டுப்படுகொலை செய்யப்பட்டு பாதி எரிந்த பிணங்கள் போல கிடக்கின்றன. என் கையில் சாகக்காத்திருக்கும் ஒருவன். ஸ்வீடனில் கோடைக்காலம் முடியப்போகிறது. பகல் குறைந்து இரவின் ஆட்சி தொடங்கும் பொழுது பகலின் துகள்கள் பனியாய் மொழியும். அறையிலிருந்து தெருவில் இறங்கி பத்தடி தூரத்தில் இருக்கிறது அந்த பார். பத்து நிமிடத்திற்கு ஒருமுறை ஒரு கூட்டம் அதிலிருந்து வெளியேறி புகைவிட்டு பழைய இருக்கைகளில் அமர்ந்து கொள்ளும். சிகரேட் இல்லாமலே சென்று யாரிடமோ ஒன்று கடன் வாங்கிக்கொள்ளலாம் ஆனால் எனக்கு உகந்ததல்ல , நான் கொடுப்பவன். முழுப்போதையிலுருப்பவர்களும் கருப்பு அகதிகளுமே அதிகமாக சிகரேட் கடன் வாங்குகிறார்கள். பதின் வயது சிறுவர்களும் - பார்ப்பதற்கு பீமனைப்போலிருந்தாதும் - நம்மிடம் கேட்பதுண்டு.

லைட்டர் எடுக்காமல் வந்து விட்டேன். நண்பர்கள் யாரிடமோ கேட்டுக்கொள்ளலாம் என்றால் அங்கு ஒரு குடிகாரனுமில்லை. பின்னானிலிருந்து ஒரு குரல்.

"பெங்காலியா" என்றது உதிரி ஆங்கிலத்தில். கட்டையான உருண்டை வடிவம். சிவந்த இந்திய நிறம். தூரத்தில் அவனை பார்த்திருந்தாலும் கவனிக்காதது போலிருந்தேன்.

"இல்லை நான்" என்று முடிப்பதற்குள்

"இந்தியனா ? , வேறு எப்படியும் இருக்க வாய்ப்பில்லை" என்றான். அவன் ஆங்கிலம் புரிந்து கொள்ள கடினமாக இருந்தது. குள்ளமாக இருந்த அவனை எனக்கு கீழே பாதாளத்தில் பார்ப்பது போலிருந்தது. நான் கேட்காமலேயே லைட்டரை எடுத்து எனக்கு பற்ற வைத்தான். அவன் முன் ஸ்டைலாக புகை விட வேண்டும் என்று நினைப்பு எனக்கிருந்தது.

"நான் பங்களாதேஷி , எங்கு வேலைப்பார்க்கிறாய்" என்று சகஜமாக பேச்சுக்கொடுத்தான். எனக்கு சாதரணமாகவே அகதிகளுடன் பழக வேண்டும் என்ற நினைப்பிருந்தாலும். அவர்களைக்கண்டால் நான் விலகி விடுவதே என் இயல்பாக இருக்கின்றது. அப்படி நெருங்கி அறிந்து கொண்ட இங்கு குடியேறி அமர்ந்து விட்ட இலங்கை தமிழர்களின் கொண்டாட்டம் ஏனோ என்னில் ஒரு சந்தோஷமின்மையை கொடுத்தது.

"நான் ஐடி , உங்களுக்கு தெரிந்திருக்கும் , ஹெச் அண்ட் எம். அங்குதான் வேலைப்பார்க்கிறேன். எவ்வளவு நாளாக இங்கு இருக்கிறீர்கள்" என்றேன். அவனைப்பார்ப்பதும் பின்பு மேகமில்லாத வானைப்பார்த்து புகை விடுவதுமாயிருந்தேன்.

பதில் சொல்ல விருப்பமில்லாததைபோல "ஏழு வருடங்களாக இங்கிருக்கிறென். டீ சென்றலில் வேலைப்பார்க்கிறேன்" என்றான்.

அவன் கேட்காமலேயே " நான் இரண்டு வருடமாக இங்கிருக்கிறேன்" என்றேன். பேசி முடித்தவுடன் ஒரு சிரிப்பை நான் இயந்தரத்தமாக பழகிவிட்டிருக்கிறேன். கண்டிப்பாக எதாவதொரு கிளீனராகவோ. ரெஸ்ட்ராண்டிலோ வேலைப்பார்ப்பான். நம் அளவிற்கு சம்பளம் வர வாய்ப்பிலை பாவம்தான்.

"நீங்கள் அந்த கட்டிடத்திலிருந்து வருவதைப்பார்த்தேன்" 

"ஆம் அங்குதான் தங்கியிருக்கிறேன்" இருவரும் புன்னகைத்துக்கொண்டோம். நல்லதாகப்படவில்லை ஒருவேளை என்னுடைய அறையில் தங்க முயல்கிறானோ. எங்கு தங்கியிருக்கிறாய் என்ற கேள்வியை அவனிடம் கண்டிப்பாக கேட்கக்கூடாது.

"ஹிந்தி தெரியுமா"

"இல்லை தெரியாது நான் தென் தமிழகத்தவன் , ஓரிரு வார்த்தைகள் மட்டுமே தெரியும் , ஹமாரா , துமாரா , கானா கேலியே" ஒவ்வொன்றாக நிறுத்திச் சொன்னேன். சிரித்ததில் அவன் விட்ட புகை மூக்கிலிருந்து வந்தது. 

"எங்களூரில் ஐம்பது சதமானம் பேர் பெங்காலி பேசுவார்கள் , ஹிந்தி தெரிந்தால் அங்கு கண்டிப்பாக பிழைக்காலம். எல்லாருக்கும் ஹிந்தி தெரிந்திருக்கும். தென்னிந்திய மக்களுக்கு ஹிந்தி தெரியாதென்பது எனக்கு தெரியும்" என்று நக்கல் சிரிப்பு சிரித்தான். நானும் அதில் இணைந்து கொண்டேன்.

"உங்களுக்கு தென்னிந்திய நண்பர்கள் இருக்கிறார்களா"

"இருக்கிறார்கள்" என்று சிரித்தான். என்னில் , தமிழ் தெரியுமா ? உலகிலேயே பழைய மொழி என்று பிரஸ்தாபிக்கும் எண்ணம் வந்தது கேவலம்தான்.

பங்களாதேஷ் என்றதும் கேட்க வேண்டும் என்று வைத்திருந்த கேள்வியைக்கேட்டுத்தான் ஆக வேண்டும் "பிரம்மபுத்திரா உங்களூரில் ஓடுகிறதா" 

"ஆம் நீளமான அகலமாக நதி , வளம் கொடுப்பவள். ஆற்றின் கரையோரமாக இருந்தது எங்கள் கிராமம். விவசாய நிலம் ஆற்றங்கரையிலிருந்து தூரத்திலிருந்தது" கண்கள் எங்கோ கனவில் மிதந்து கரைசேர விரும்பா ஒற்றைப்படகேன அலைகின்றன. சிந்திக்கும் போது வரும் எழுத்து எழுத நினைக்கும்பொழுது வந்து தொலைப்பதில்லை.

"ஊருக்கு செல்வதுண்டா"

"இல்லை அங்கு எதுமில்லை"

"வருடத்திற்கு ஒருமுறை ஊருக்கு செல்வது நல்ல அனுபவமில்லையா. வெளிநாட்டிலிருந்து வரும் மிடுக்குடன் செல்லலாமில்லையா"

அவன் சிரித்துக்கொண்டான். பதில் பேசவில்லை.

"அடுத்த மாதம் நான் செல்கிறேன். நண்பர்கள் காத்திருக்கிறார்கள். உறவினர்களும்" என்று பாட்டிலை கைகளில் காட்டினேன்.

அதற்கும் சிரித்தான். அதே அமைதி

"சரி , பிறகு சந்திக்கலாம். தாக்" என்றான்

நானும் "தாக்ஸமீகேன்" என்று நன்றி கூறினேன்.

தென் கிழக்காக செல்கிறான். இங்கிருந்து அதே திசையில் பிரம்ம புத்திரா ஓடுகிறது. அட கைகளை காற்றில் ஆற்றலை போல நெளிக்கிறான்.

நல்ல ஊர்க்கதை ஒன்று எழுதலாம் , ஓடு ஓடு.

Saturday 1 August 2020

வசந்தகாலம்

குளிர்காலம் , பறவைகள் செல்கின்றன இடம்விட்டு
காலம் மெல்லவே கடக்கின்றது
முட்டைகள் உடைபட்டு குஞ்சுகள் புணர்திருக்கும்
குஞ்சுகளைத்தேடி வரும் அன்னை 
உலகின் மறு எல்லையில் மீண்டும் சந்திக்கின்றன
அன்னைகள் குஞ்சுகள் புணர
மீண்டும் அடுத்த ஜென்மத்தின் வலசை
ஓர் வசந்தகாலம்