Friday 29 October 2021

ஒரு கதை - சிறுகதை

ஜான் சர்ச்சுக்கு செல்லும் வழியை அந்த குளிர்ந்த தட்டையான் கற்கள் இடைவெளியற்று பதிக்கப்பட்ட நடைபாதையில் நடந்தவாறு அவனைக்கடந்து சென்ற ஒவ்வரிடமும் கேட்டு இடுங்கிய விரிந்த பாதையில் வலதும் இடமும் திரும்பி நடந்து சர்ச்சுக்கு வந்து சேர்ந்த போது மாலைச்சூரியன் அதன் மஞ்சள் படலத்தை தட்டையான கற்கோபுரத்தில் உருவாக்கியிருந்தது. அதில் பதிக்கப்பட்டிருந்த கண்ணாடி சாரளம் எதிர் சூரியனாக பிரதிபலித்தது. 


சர்ச்சைச்சுற்றி இருந்த பசும் புற்கள் நிரம்பிய கல்லறைகளில் பெரிதும் சிறிதுமாக கற்பலைகள் நிறுத்தப்பட்டு பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. அவன் கண்களை இறுக்க மூடி உள்ளெ செய்ய வேண்டியவற்றை ஒருமுறை தனக்குள் நிகழ்த்திக்கொண்டான். தான் செய்ய போவது யாருக்கும் தெரியக்கூடாது என்பதில் தெளிவாக பெரிய கருத்த மேல்கோட்டை இறுக்கி அணைத்து தன்னை தனக்குள் மறைத்துக்கொண்டான். 


மென் ஒளி நிரம்பிய கூடத்தினுள் புகுந்து அவனெதிரில் இடது , வலது மற்றும் மேலே கயிற்றால் கட்டி தொங்கவிடப்பட்ட சிலுவையில் ஏசு மாட்டிக்கொண்டிருந்தார். கீழே வலப்புற மூலையில் பாவ மன்னிப்பு தரும் பெட்டி போன்ற அறை தனியாக இருந்தது. 


ஆட்களற்ற கூடத்தில் மெழுகுவர்த்தி சுடர் அசைவுகள் பேசிக்கொண்டன. அதன் முன்னிருந்த பொன்னிற மேரி மாதாவின் கைகளில் குழந்தை ஏசு நிதானமான சிந்தனை ஒன்றில் லயித்திருந்தார். அங்கே சில நொடிகள் அவன் நின்றுவிட்டு பாவ மன்னிப்பு தரும் அறையினருகில் இருந்த பெஞ்சில் அமர்ந்து வழுவழுப்பான மரத்தரையை தலைகுனிந்து பார்த்துக்கொண்டிருந்தான். கூரையில் பறவைகளின் பழைய கூடுகள் தெரிந்தன. ஏசுவின் சிலுவைப்பாடுகள் வரையப்பட்ட கண்ணாடி சாளரங்கள் வழி வெளிச்சம் சாய்வான ஏணியைபோல தரையோடு சாய்ந்து நின்றன. நீண்ட வரிசையாக பெரிதும் சிறிதுமான குழாய்கள் கொண்ட பைப் ஆர்கன் துடைக்கப்ப்ட்டு சுத்தமாக இருந்தது. 


கைகளை பிசைந்தவாறு சாரளம் வழி வந்த ஒளியை நிமிர்ந்து பார்த்தான். அடர்ந்து வளர்ந்த தலைமுடி கற்றையொன்று முகத்தில் படிந்துபோயிருந்தது. உதடுகள் பிரார்த்தனை செய்வது போல  முணுமுணுத்தன. யாரும் தான் இங்கிருப்பதை கவனிக்கவில்லை என்பதை உணர்ந்ததும் எழுந்து ஓடிவிடலாமென்று எழுந்தான். அதற்குள் பாதிரியார் சாதாரண சட்டையும் பேண்டும் அணிந்து கட்டையாக வெட்டப்பட்ட பொன்னிற தலை முடியுடன் சர்ச்சுக்குள் வந்தது சரியாக இருக்கவும் தன் உடலை சாதாரணமாக்கி அதே பெஞ்சில் அமர்ந்து கொண்டான்.   


பாதிரியார் உள்ளெ சென்று நீண்ட வெள்ளை அங்கி அணிந்து கைகளை இரு பக்கமும் விரித்து உடையை சரி செய்யவும் , சிறகு முளைத்த பறவை போலிருந்தார்.


அவனருகே வந்து புன்னகையுடன் "உங்களுக்கு என்ன உதவி வேண்டும்? சாதாரண தினங்களில் இந்த நேரத்தில் மக்கள் வருவது குறைவு. இன்று குளிர் குறைவுதான். நீங்கள் இந்த கனத்த கோட்டை கழட்டிக்கொள்ளலாம்" 


"எனக்கு பாவ மன்னிப்பு வேண்டும்?"


"கண்டிப்பாக , கடவுள் எல்லோரையும் மன்னிப்பார். இதோ வருகிறேன்" என்று அங்கிருந்து நகர ஆரம்பித்தவர் நின்று "நீங்கள் கிறிஸ்துவை நம்புகிரீர்களா ?" என்றார்.


ஜான் பதில்சொல்லாமல் அமைதியாக இருக்கவும். அவர் மீண்டும் புன்னகைத்தவாறு அங்கிருந்து சென்றார். அறை வெப்பமாக இருந்தாலும் அவனுக்கு குளிருவதைப்போல் இருந்தது. பற்கள் நடுங்குவதை முயற்சி செய்து நிப்பாட்டினான். 


"இங்கு வந்து உட்கார்ந்துகொள்ளுங்கள்" எனும் குரல் அந்த சவப்பெட்டி போன்ற அறையின் மறுபுறத்திலிருந்து வந்தது. அதன் சிறு துளைகள் வழி ஜானை பாதிரியாரால் தெளிவாக பார்க்க முடியும் ஆனால் அவனால் அவரை பார்க்க முடியாது. துளைகளின் முன் முகத்தை வைத்து மண்டி போட்டு அமரும்படி இருந்தது அந்த அமைப்பு. அவன் அமர்ந்த பின் பாதிரிதார் "உம்" என்றார். கண்களை மூடிக்கொண்டு கதை போன்ற ஒன்றை வேகமாக்ச்சொல்ல  ஆரம்பித்தான். 


*


நான் இந்த வடகோடி நாட்டிற்கு வருவதற்கு மூன்று வருடங்களுக்கு முன் ஒரு வார காலம் ஒரு மனிதனுடன் தனியாக இருக்க வேண்டிய கட்டாயம் உண்டானது. அதோர் வெப்ப மண்டல நாட்டின் தென் கோடியில் கடல் அலைகளின் துமி தெறிக்கும் ஜன்னல்கள் கொண்ட  தனிமை படுத்தப்படும் சுவர்கள் பெயர்ந்த வெளிர் பச்சை அறை. பெருந்தொற்று ஆரம்பிக்கும் முன் கோவில் சிலைகளை பார்க்கச்சென்ற நான் அவனுடன் அடைக்கப்பட்டேன். 


பார்வை மட்டுமே தாண்டும் இரும்பு கம்பிகளால் ஆன பெரிய ஜன்னல்களுக்கு இந்தப்பக்கம் நான் அமைதியாக அடுத்த நாவலுக்கான தகவல்களை இணையம் வழி சேர்த்துக்கொண்டிருந்தேன். அலறும் ஊளையிடும் சத்ததுடன் அவனை நானிறுந்த அறையினுள் பிடித்து மூவர் தள்ளினர். வெண்மை அல்லது சிவப்பு என்பதை முற்றிலும் அறியாத கருந்தோல். முப்பது வயதுக்குள்ளிருக்கும். மொட்டையடிக்கப்பட்ட நீண்ட தலையில் ஒரு வாரத்திற்கான முடி இளம் புற்களென வளர்ந்திருந்தது. வளைந்த நீண்ட மூக்கும் பெரிய நீண்ட சலவைக்கல் போன்ற பற்கள் வாயிலிருந்து தென்னி எச்சில் வடிந்தது. உள்ளங்கையை இறுக்க மூடி எதையோ உடைக்கும் பாவனையில் ஆட்டிக்கொண்டிருந்தான். முதுகு வளைந்து கூன் விழ ஆரம்பித்திருந்தது.

கட்டமைப்பட்ட மொழியென்றறிய முடியாத சொற்களை திணறி கண்கள் வெளியே விழுந்துவிடும் வேகத்தில் இரைந்தான். ஒரு கணம் என்னைப்பார்த்து முறைத்ததும் நான் புன்னகைக்க முயன்றேன். என்னைக்கட்டிக்கொண்டு நிற்காத கண்ணீருடன் அழ ஆரம்பித்தான். புலம்பல் போல என்னிடம் சொல்லிக்கொண்டிருந்த வார்த்தைகள் எனக்கு புரியவில்லை. விலகி நின்று "என்ன விடச்சொல்லு" என்ற சொற்களின் ஒலிக்கேர்வை மட்டுமே புரிந்தது. கைகளை விரித்து புரியவில்லை என்றது அவனுக்கு புரிந்திருக்க வேண்டும் , திரும்பி அந்த அறையின் வாசலைப்பார்த்து அமர்ந்து கத்தி முடித்து அப்படியே கருவறை குழந்தை போன்ற முகத்துடன் சுருண்டு படுத்து தூங்கிப்போனான். மேரியின் கைகளிலிருக்கும் குழந்தை ஏசுவை நினைத்துக்கொண்டேன். 


சரியாக அவன் விட்ட மூச்சை மீண்டும் எடுக்க முடியாமல் பிணமாக எடுத்துச்செல்லப்படும் போது தூரமாய் நின்று உயிர் வெறும் ஓர் நீலப்பொட்டலமாக மாறிப்போனதை பார்த்துக்கொண்டிருந்தேன்.  நாங்கள் இருவரும் அங்கிருந்த நாட்களில் எனக்கு வேலையிருந்தது, அமைதியாக அமர்ந்து கற்பனை செய்ய ஏதுவான ஓர் வேலை. அவன் என்னிடம் பேச நினைத்தான். கடந்த காலத்தை , எதிர் கால கனவுகளை , வெற்றிகளை , தோல்விகளை , மரங்களை , பறவைகளை என்னிடம் சொல்லி சந்தோசப்படுத்தவும் சந்தோசப்படவும் முயன்றான். ஆங்கிலம் அவனுக்கு விளங்கவில்லை. நான் வாய் குவிப்பதை இமைக்காமல் கவனித்து புரிந்து கொள்வது போல தலையாட்டி மீண்டும் அவன் கதைகளை என்னிடம் சொல்ல ஆரம்பிப்பான். இது நாள் முழுவதும் நடந்தது. எனக்கு முடிக்க வேண்டிய வேலைகள் இருந்தன். அவனை ஒதுக்கினேன். முகம் கொடுக்காமல் மடிக்கணினியை பார்த்துக்கொண்டிருந்தேன். இரண்டாம் நாளுக்கு பிறகு அவன் என்னை புரிந்து கொண்டான். பேசாமல் ஜன்னலில் தெரியும் தென்னைமரமொன்றின் அசைவை பார்த்துக்கொண்டிருப்பான். 


நான் புன்னகைப்பதையும் நிறுத்திக்கொண்ட போது தள்ளித்தள்ளி அமர்வதையும் ஓர் அரவணைப்பாக எடுத்துக்கொண்டு என்னை பார்த்தக்கொண்டிருந்தான். நாளொன்றுக்கு நாற்பது தடவை என்னுடைய செல்போன் அலறிக்கொண்டிருக்க அச்சமயங்களில் கையை காதில் வைத்து சத்தமாக காற்றுடன் பேசிக்கொண்டிர்ந்தான். விளக்குள் அணைப்பதை அவன் விரும்பவில்லை. நான் விளக்கை அணைத்த பிறகு அவன் தூங்காமல் பயந்து விழித்தே கிடந்தது அடுத்த நாள் காலையில் கண்களில் தெரிந்தது


தவறுதலாக அறைக்குள் வந்துவிட்ட குஞ்சு வௌவாலைப்போல அந்த அறைக்குள் சுற்றிக்கொண்டேயிருந்தான் வெளியேறும் வழி தெரியாமல். சாப்பிடும் போதும் நான் தனியாகவே சாப்பிட்டேன்.  ஆறாவது நாள்  இரவன்று நான் தூங்கச்செல்லும் முன் என் கைகளிலிருந்த ஃபோன காட்டி "அம்மா அம்மா" என்றான். "மாமி , டு யூ வாண்ட் டு கால் யுவர் மாமி ?" என்றதற்கு "அம்மா அம்மா" என்றான். ஆனால் பேசவில்லை. அவன் கையை காதில் வைத்து என்னமோ பேச ஆரம்பித்தான். கண்ணீர் வழிந்தது. மீண்டும் ஜன்னல் பக்கம் போய் அந்த மரத்தை பார்த்தபடி அமர்ந்துவிட்டான். 


அடுத்த நாள் காலையில் நான் விழிக்கும் போது அன்னையின் அரவணைப்பில் குழந்தை தூங்குவதைப்போல அமைதியாக கிடந்தான். ஒற்றைக்கை காதில் ஃபோன் பேசும் பாவனையில் இருந்தது. நெஞ்சு ஏறி இறங்கவில்லை. உடல் அசைவின்றி உறைந்த ஏரியின் மேற்பரப்பை ஒத்திருந்தது. தொட்டுப்பார்த்தேன் தாங்க முடியாத குளிர்.



*


ஜானின் உடல் நடுங்கியது. அமர்ந்திருக்க முடியாமல் அப்படியே சரிந்து மரத்தரையில் தலை மோத விழுந்தான். பாதிரியார் அமைதியாக அவனை எழுப்பி உடகார வைத்து தட்டிக்கொடுத்து "இதில் நீங்கள் பாவமென்று எதும் செய்யவில்லையே ஜான். எதற்கு மன்னிப்பு ?" என்றார்


"செய்திருக்கிறேன். எனக்கு தண்டனை அல்லது மன்னிப்பு ஒரண்டிலொன்று வேண்டும்"


"இதையொரு பாவமாக நானும் ,  நீங்களும் கருதவில்லை அல்லவா?"


"இல்லை இது பாவம். அவனை அப்படியே விட்டுவிட்டது…."


"உங்களால் முடிந்ததை செய்திருக்கறீர்கள். இதில் நீங்கள் மகிழ்ச்சி கொள்ளவே வாய்ப்பிருக்கிறது. உங்களுக்கு தோன்றுவதே உங்களுக்கான பாவம் இல்லையா?" என்று ஜானின் கண்களை நோக்கி புன்னகைபடி தொடர்ந்தார் "ஒரு மனநோயாளிக்கு உங்களால் முடிந்ததை செய்திருக்கிறீர்கள்"


"செய்யக்கூடாததையும்"


"அவன் நோய்த்தொற்றால் இறந்தான். அதற்கு மேல் ஒன்றுமில்லை"


இருவரும் அமைதியாக கூடம் வெளிச்சம் குறைந்து வெற்றிடம் போல காட்சியளித்தது. 

மெழுகுவர்த்திகளும் அமைதியாக  வான் நோக்கி நின்றன.


பனி உடையும் சத்தம் போல ஜாம் பேச ஆரம்பித்தான் "நான் அவனை வைத்து ஓர் கதை எழுத நினைத்தேன். அவனைப்பார்த்த கணம் முதல் அவன் அடையாளங்கள கவனித்து ஓர் புனைவாக உருவாக்கிவிட எல்லா சாத்தியங்களையும் தயார் செய்து வைத்திருந்தேன். அவன் பிணம் என்னருகில் குளிர்ந்து கிடக்கும் போது நான் அதனை ஓர் உட்சபட்ச நாடகியத்தருணமாக கற்பனை செய்தேன். அதனை கண்டுகொண்டதற்காக பெருமையும் அடைந்தேன். வேறு யாருக்கும் கிடைக்காத அபூர்வமான தருணமல்லவா அது ? அந்த கதை இப்பொழுது வெளியாக பெரும் வரவேற்பை பெற்றது" என்றதும் ஜானின் கைகள் குளிரால் நடுங்க ஆரம்பித்தன. அவன் கைகளை பற்றிக்கொண்ட பாதிரியார் சிரித்தார். ஆனால் அவனுக்காக அனுதாபப்படவோ , சமாதானப்படுத்தவோ முயலவில்லை. 


அவர் எழுந்து பாவமன்னிப்பு அறைக்குள் சென்று அமர்ந்து கொண்டார். "வா , உன் பாவத்தை மீண்டும் இங்கிருந்து சொல். கடவுள் உன்னை மன்னிக்கட்டும்" என்றார். 


எதிர்ப்பு காட்டுவது போல எழுந்து "பாவத்தை தீர்மானிப்பதுதான் யார்?"


பாதிரியார் வாய்விட்டு சிரித்து "உங்களுக்கு என்னதான் வேண்டும்" என்றார்


"தெரியவில்லை" என்று விழித்தான். அழுதுவிடுவதைப்போல் இருந்தது அவன் முகம்.


ஜான் எழுந்து வேக வேகமாக சர்ச்சைவிட்டு வெளியேறினான். இரவு படர்ந்த சாலை அவனுக்காக மீண்டும் காத்திருந்தது. நாளை மீண்டும் வர வேண்டும் என நினைத்துக்கொண்டான்.


வீட்டின் படுக்கையறைக்குள் நுளைந்ததும் யாரோ தலையை கோடாரியால் பிளந்தது போல ஒரு காட்சி அவனுள் உருவானது. சர்ச்சில் மேரியின் கையிலிருந்த குழந்தை ஏசுவின் முக்ம் வேறொன்றாக இருந்தது.


நம்பிக்கை முற்றிலும் இழந்தவனாக மெத்தையில் படுத்து தூங்க முயற்சித்தான். அவன் கடவுளுக்கே பாவம் இழைத்திருக்கும் பட்சத்தில் கிடைக்கும் மன்னிப்பை நினைத்துக்கொண்டெ விழித்திருந்தான்.

Monday 11 October 2021

மயக்கு - சிறுகதை

 எனக்கு வெண்சிறுகுகள் மெல்ல முளைத்து வளர்ந்து நிலத்தின் மேலெழும்பி அப்பொழுதுதான் பறக்க ஆரம்பித்திருந்தேன். கால்களில் இருப்பை மறந்து அவற்றின் தனிமையையும் உணர்ந்து பறக்கையில் எனக்கு வருத்தமாக இருந்தது உண்மைதான். ஆனால் எதிர் காற்றிற்கு இறகுகள் மென் அலைகளென எழும்பி தழுவலாய் அடங்குகையில் நிலம் அதன் உண்மைத்தன்மையை இழந்து இன்னொன்றாய் மாறியது உச்சபட்சமான போதை தருவதாய் இருந்தது. நிலத்தில் பொருட்கள் அதன் தூல வடிவத்தை இழந்து பரிதாபகரமான பாவத்தை தன்னகத்தேயிருந்து வெளிக்கொண்டுவந்தது. என்னை தாங்க விரும்பாத இந்த நிலம் இத்துணை மொக்கை எனும் உணர்வு எனக்கு சிரிப்பாக இருந்தது.



மூளை வெடித்து சிதறிவிடும் என்ற கணத்தில் நான் கண்விழித்தும் ஆழுயர புற்களின் நடுவில் குளத்தின் ஆழத்தில் உறங்கிக்கிடக்கும் மீனைப்போல நினைவற்று நிமிர்ந்துகிடந்ததை ஆழ்ந்த பெருமூச்சொன்றுவிட்டு உணர்ந்தேன். கஞ்சா செய்த வேலை. நான் அப்பொழுது உறங்கியிருக்கவில்லை அதனால் கண்மூடி கிடக்கையில் மூளை தன்னால் இயன்றதை செய்திருக்கிறது. இருண்ட மேகமற்ற வானில் முகப்பருக்களென விண்மீன்கள் மினுங்கிக்கொண்டிருந்தன. உடல் வலுவுடன் இருந்ததை உணரவும் பசிக்க ஆரம்பித்ததும் எழுந்து நடந்தேன். வழிகள் தெரியாத நிலம் போல ஓர் வழியை உத்தேசித்து நடந்து சலித்து முன்னகர முயற்சிக்காமல் எம்பி குதித்து பார்க்கவும் கண்ணில்பட்ட ஓர் சிறிய ஓட்டுப்பணி விட்டின் திசையப்பார்த்து நடக்க ஆரம்பித்தேன். இடைக்கிடை குதித்து பார்த்து பாதையை சரிபார்த்துச்செல்லும் போது முன்பு கண்ட கறபனை இனிமையாக இருந்தது. சட்டை பேண்ட் பையில் தடவிப்பார்த்தும் கஞ்சா பிசுறுகள் கூட இல்லாதபட்சத்தில் வெறுமையுடன் அந்த வீடு நோக்கி நடந்தேன். காற்றில்லாமல் புளுக்கமாக உணர்ந்து சட்டையை கழட்டி இடுப்பில் கட்டிக்கொண்டதும் சுயநினைவு வந்தவனாக ராக்கோழிச்சத்தமும் சில்வண்டுகளின் சிறகடிப்பும் வெட்டுக்கிளிகளின் தாவலும் அந்த மங்கிய அமாவாசை ஒளியில் சத்தங்களாக மட்டுமே உணர முடிந்தது. 


புற்கள் சட்டையில்லாத மார்பில் தேய்த்து குருதிக்கோடுகளாக வெட்டிக்கிழித்தன. அந்த வீட்டு வாசலை அடையும் போது அங்கு மனிதர்கள் வாழ்கிறார்கள் என்பதற்கு அடையாளமாய் பழைய செருப்புகள் நிமிர்ந்தும் கவிழ்ந்தும் கிடந்ததன. வெளிச்சமில்லா உள்ளறையை ஜன்னல்கள் காட்டின. கதவை தட்டுவதற்கு முன் உள்ளெ ஜன்னல் வழி இரு கண்கள் மட்டும் தெரிந்தன. நான் விலகி திரும்பிக்கொண்டு கண்களை கசக்கி மீண்டும் பார்க்க ஜன்னலில் அந்த கண்கள் இல்லை. என் முன் நின்றது. சிவந்த அடர்ந்த தாடியில் மண் மடிந்து சடைபிடித்திருந்தது. நீலகருவிழியை சுற்றி செவ்வரிக்கோடுகள் நெளிந்தன. நீளமில்லாம்ல் சிரைக்கப்பட்டிருந்த தலைமுடியும் சிவப்பாக படிய வாரப்பட்டிருந்தது. அவன் சாம்பல் நிற மேல்கோட்டு கிழிந்து மண்ணிறத்தில் வெள்ளை உள்சட்டையுடன் தெரிந்தது. அவன் அங்குமிங்கும் பார்க்காமல் நேரடியாக என் கண்களை மட்டும் வெறித்தான். அவன் பேசுவான் என்பதே நம்பும்படியில்லை. உதடுகள் சாதாரணமாக பார்க்கக்கூட்டிய மாதிரியில்லாமல் தாடி மறைத்திருந்தது. நீண்ட கைகளை பேண்ட் பையில் நுளைத்தபடி நின்றான். நீண்ட விரிந்த நாசியின் கீழ் மீசை மயிர் அசைவதை வைத்தே அவன் உயிருடன் இருக்கிறான் என்பதை அடையாளம் காணமுடிந்தது. அவன் நின்ற தொனி அங்கே ஏன் வந்தாய் என்பது போல் இருக்கவும் நானே "சும்மா வார வழிக்கி வந்துட்டேன். வழி தப்பிட்டு" என்று சிரிக்க முயன்றேன். பீதியில் என் முகம் வெளுத்து கண்கள் விரிந்து தலை ஒரு பக்கமாக நடுங்கியது. 


அவன் "உள்ளெ வாருங்கள்" என்றதும் பயம் விலகி சிரிப்பு வந்தது. ஆனால் முகம் சிரிப்பை காட்டவில்லை. 


"இங்க ஒத்தைக்கா தாமசம்" எனும் போது நான் அங்கு பார்த்தது ஒரு பழைய நாற்காலி , பெஞ்ச் , வரைவதற்கான கேன்வாஸ் போர்டு , போர்டின் தலைமேல் தொங்கிய ஒற்றை சிம்மினி விளக்கு , ஆயில் கலர்கள் , சில அழுக்கடைந்த பிரஷ்கள் , வர்ணங்கள் குழைத்து காய்ந்து போன பேலட்."நீங்க வரைவீங்களொ" என்றதும் அவன் அந்த ஒற்றையறை வீட்டில் முன்னும் பின்னும் நடக்க ஆரம்பித்தான். அப்பொழுதுதான் கவனித்தேன் அவன் கைகள் இருக்க வேண்டிய இடம் சர்க்கார் ஆஸ்பத்தியில் கட்டப்படும் பேண்டேஜ் கட்டும் அதில் மஞ்சள் நிறத்தில் புண்ணும் மருந்தும் கலந்து புடைப்பாக இருந்தது. அந்த அறையில் பாதி அழுகிய பிணத்திலிருந்து கிளம்பும் வாடை அடித்தது. "சார் , என்னமோ மணமடிக்கே" என்றதற்கு அவன் பதில்சொல்லவில்லை. அவன் முகத்தில் சவக்களை படிந்திருந்திருப்பதாக நான் நினைக்கவும் என்னருகில் வந்து "இங்கு உட்கார்ந்து கொள்" என்று அந்த பழைய நாற்காலிய கண்களால் காட்டினான். அது போர்டிற்கு அருகில் வரைவதற்கு ஏதுவாக அமைந்திருந்தது. அப்பொழுதுதான் கவனித்தேன் அதில் ஏற்கனவே பாதி வரைந்து வைத்த ஓவியமொன்று அழுக்கும் தூசியும் அடைந்திருந்தது. 


"பாதிலையே நிக்கி. வரஞ்சி முடிக்கலையா?"


நடந்தவன் நின்று "இன்னும் வரைய வேண்டும். காலம் உதவவில்லை. நான் துரதிர்ஷ்டசாலி" 


"ஆளு இந்த ஊரு இல்ல போலியே"


"ஆமாம் ஸ்வீடன்"


"அது செரி , அடிச்சு விடும்வே. காசா பணமா"


"புரியவில்லை"


"உண்மையச்சொல்லும். எந்தூரு நீரு"


"ஊர்?" என்றவன் யோசித்து "சிக்டுனா"


"சிக்கனா?"


"இல்லை , சிக்டுனா"


"அப்பொ வெளி நாடுன்னு சொல்லு"


"ஆம் வடதுருவ நாடு"


"தமிழு ஒழுங்கா வராதோ?"


"வருகறதே"


"நான் பேசுத கணக்கா வராதா"


"தமிழா?"


"ஆமாடே"


"வரவில்லை"


"சாரமில்ல போட்டும். இங்க என்ன செய்யீரு. அதும் சுத்தி இடுகாடால இருக்கு"


"ஆமாம். அதுவே வசதியாக அமைந்துவிட்டது"


"சோறு திங்கதே இல்ல போல மூஞ்சிலாம் வெளுத்துபோச்சி"


"எனக்கு பசிப்பதில்லை"


"எனக்கு பசிக்கி , திங்க என்னமாம் இருக்கா?"


அவன் இல்லை என்பது புருவங்களை உயர்த்தி தலையசைத்தான். 


"எனக்கு உன் உதவி வேண்டும்"


"கடைக்கு போயி எதும் சாமானம் வாங்கிட்டு வரணுமா தொர?"  நான் துரை என்றதை  புன்னகையுடன் அனுமதித்தான்


"இதை நீ வரைந்து முடிக்க வேண்டும்" என்று அந்த பாதிவரைந்த ஓவியத்தை காட்டி "இங்கு ஆட்கள் வருவது குறைவு. நீ வந்தது நல்லதாக அமைந்தது. வா எழுந்திரு. அதை எடு" என்று தரையில் சிதறிக்கிடந்த பிரஷ்களை காண்பித்தான்


"ஆனா நீ ஆளு காலன் தொர. நானும் ஒரு பெயிண்டர்னு இந்த குண்டுவிழுந்த மூஞ்ச பாத்தே கண்டுபுடிச்சிட்ட"


"சீக்கிரம். நேரம் குறைவாக உள்ளது"


"வரஞ்சி மட்டும் என்னத்த சாதிக்க போற தொர. அமந்து இரியும்"


"நான் என் வாழ்நாளில் என் ஆன்மாவை கரைத்து வண்ணங்களாக்கி வரைய முயன்றது அதற்குள் இப்படியாகிவிட்டது"


"பயராதேயும். அதுக்கு முன்னால எனக்கு குடிக்க தண்ணியாவது எங்கருக்குண்ணு காட்டுவீரா?"


"இங்கெதுவுமில்லை. எல்லாம் செத்துவிட்டது"


"சவம் மாரி பேசாம ஒழுங்கா பேசு தொர"


"அந்த மூலையில் பானையிருக்கிறது. எடுத்துக்கொள்"


நான் போய் வந்து அமர்ந்தேன். அவன் என் கைகளை பார்த்து "பயனற்றவை ஆக்கிவிடாதெ" என்றான். கண்களில் குருதித்துளிகள் போல கண்ணீர் இரண்டு சொட்டு நிலத்தில் விழுந்து மறைந்து காணாமல் போனதும் "நிலம் உன் வெந்த குருதிக்குக்கூட காலம் குறைவாகவே கொடுக்கிறது"


"பினாத்தேயும் தொர"


"இதோ இங்கிருந்து ஆரம்பி" என்று அந்த ஓவியத்தில் வலது ஓர முனையில் தலையால் தட்டினான் 


நான் அந்த போர்டை தொட்டதும் தூசும் அழுக்கும் சிதை மேல் படிந்த சாம்பல் காற்றுக்கு பறப்பது போல அந்த பாதி ஓவியத்தை துல்லியமாக காட்டியது. 


"இங்ககையா தொர?" எனும் போது அவன் கண்கள் தூக்கில் இருக்கும் போது கைகளால் பிடிக்கப்பட்ட கயிறின் நம்பிக்கையுடனிருந்தது. 

என் கைகள் அந்த ஓவியத்தின் மேல் சரளமாக வழுக்கியது. பேலட்டில் வண்ணங்களை குளைத்து எடுக்கும் வேகம் எனக்கே ஆச்சரியமாக இருந்தது. மூலையிலிருந்து ஆரம்பித்து காட்டாறு கிடைத்த பாதைகளெல்லாம் உண்டு வளர்ந்து நீள்வது போல ஒவியம் வளர்ந்தது. அவன் அசைவற்று என் கைகளையே பார்த்துக்கொண்டிருந்தான். வலிக்க ஆரம்பித்த கையை எடுக்க நினைத்தும் முடியாமல் சன்னதம் வந்தது போல அது இயங்கிக்கொண்டிருந்தது. ஒருகணம் கண்களை மூடிக்கொண்டு கூட அதை என்னால் வரைய முடியும் போலிருந்தது. எவ்வளவு நேரம் சென்றிருக்கும் என்று அறியாமல் சென்ற காலம் ஓரிடத்தில் நின்றதும் என் கைகள் விடுபட்டு தொங்கின. 


"என்னவே மாயம் போட்டு விளையாடுகீரா. இந்த வீட்ட பாத்த உடனே எனக்கு உள்ள பயமுண்டு. ஆனா என்னமொ உன்ன பாத்ததும் ஒரு ஈர்ப்பு" 


அவன் சிரித்தான்.


நான் பதறி "கையி...கையி...எப்புடி உமக்கு கை மொளச்சுது." எனும் போது பயமிருந்தாதும் எழுந்து செல்ல மனமில்லை. அவன் முகம் சவக்களை நீங்கி உயிர்கொண்டிருந்தான்.


"நீ வரைந்தாய். வந்துவிட்டது" 


"தொர , நான் போட்டுமா. தல வலிக்கி"


"அங்கே பார்" என்று அந்த வீட்டின் இருண்ட பகுதியை காண்பித்தான். அங்கு அதே போல பாதி வரைந்த , வரையாத ஓவியங்கள் வரிசையாக நெருக்கி வைக்கப்பட்டிருந்தன. எனக்கு அவையனைத்தும் நெருக்கமானவையாக நான் ஏற்கனவே அறிந்தவையாக தோன்றியது. 


"என்னைய வச்சி என்னதா செய்ய உத்தேசம்"


"இதையனைத்தையும் நீ வரைய வேண்டும். உதவி செய்"


"கத கொள்ளாம். வயிறு பசிக்கே கொஞ்சம் எதாச்சும் கெடைக்குமான்னு பாத்தேன். உமக்க சோலிய எனக்க தலைல கட்டிராதேயும்"


"அவற்றை அருகில் சென்று பார் , பசியடங்கும்" என்று புன்னகைத்தான்


நான் எழுந்து விளக்கை எடுத்துக்கொண்டு ஒளியுடன் நடந்து அவற்றினருகில் சென்றேன். அவை நான் வரைந்தவை , பாதி விட்டவை என எல்லவற்றையும் என்னால் அடையாளம் காண முடிந்தது. விளக்கைத்திருப்பி சற்று முன்பு வரைந்த ஓவித்தை பார்த்தேன் அது பாதி வரைந்த நிலையிலேயே இருந்தது. பதற்றமாக வீட்டை சுற்றி ஒளியை விட்டேன் அவனை காணவில்லை. சலிப்பாக இருந்தது. விளக்கை தரையில் வைத்துவிட்டு கஞ்சா இருக்கிறதா என்று மீண்டும் சட்டை பேண்டில் துளாவினேன். சட்டையின் உள் பாக்கெட்டில் ஒரு பொட்டலம் கிடைத்தது. விளக்கை மாட்டிவிட்டு அந்த ஓவியத்தை பார்த்தவண்ணம் கண்டெடுத்த காகிதத்தில் உருட்டி பற்றவைத்தேன். அவனுருவம் நான் விட்ட புகைப்படலத்தில் துலங்கி வந்தது. அவன் என்னைப்போலவே இருந்தான். ஆனால் கைகளில்லை முகம் சவக்களையுடனிருந்தது. அதன்பிறகு எப்பொழுது உறங்கிப்போனேன் என்பது தெரியவில்லை.

Thursday 7 October 2021

அகவல் - சிறுகதை


கல்லூரியின் வாயிலில் வண்ணக்கொடிகள் காற்றில் படபடத்தபடி இருந்ததை பார்த்தவாறு நாங்கள் அங்கு நின்றிருந்தோம். முதலையின் வாய் போலவும் அதன் பற்கள் கொடிகள் போலவும் எனக்கு மட்டும் அந்த சமயத்தில் தோன்றியது முதல் நாள் கல்லூரிக்கு சென்ற நாளிலும் தோன்றியது. நாற்பது வயதில் இந்த கல்லூரியை விட்டு வெளிவந்து பதினெட்டு ஆண்டுகள் ஆகின்றன. பார்த்து சென்றதும் அதுவே கடைசி முறை. எங்களை வரவேற்க நின்ற மாணவர்களின் கண்களில் மகிழ்ச்சியும் ஏளனம் ஒருசேர தெரிவதாக எனக்கு தோன்றியதை நண்பர்கள் யாரும் அச்சமயம் ஒத்துக்கொள்ளவில்லை. முன் மண்டையில் ஒன்றுமில்லாமல் காதுகளை சுற்றி வளைத்து ஓர் வரைபடம் போல இருந்த காய்ந்த பயிர் போன்ற மயிரை தடவி விட்டுக்கொள்ளும் போது அந்த ஏளனப்பார்வையின் காரணம் புரிவதுபோலிருந்தது. நாங்கள் நடக்க ஆரம்பித்த பாதை நீண்டு சென்றது அதன் தொடக்கத்திலேயே அமர்ந்திருந்த பைத்தியம் போன்றிருந்த பிச்சைக்காரனின் முகம் பரிட்சயமாயிருந்தது. ஆம் அவரேதான். கல்லூரிக்கு எதிரில் டீக்கடை போட்டு பொளித்த மணியண்ணன். அந்த தாடிக்குள்ளும் கடைக்கு வருபவர்களை வரவேற்கும் அந்த சிரிப்பு ஒளிந்துகொள்ள முடியாமல் அடையாளம் காட்டியது. அவர் ஏன் அப்படியானார் என்பது தெரியவில்லை. ஆனால் கல்லூரி மாறியிருந்தது மட்டும் நம்பும்படி இருந்தது. அவர் கையில் நான் வைத்த ஐந்து ரூபாய் நாணயத்தின் மதிப்பை அவரால் உணரமுடியவில்லை. அதை வாயில் வைத்து சவைத்து சுவை பிடிக்காமல் மண்ணில் எறிந்துவிட்டார். 


எங்களை அது பாதித்தது ஆனால் அந்த அளவுக்கில்லை. "அது நம்ம மணியன்னன் தான?"


"ஆமா மச்சி அந்தாளுதான் , அந்த இளிப்பு தெரியலையா"


"உனக்கு முன்னாடியே தெரியுமா"


"தெரியும் , இங்க போன வருசம் வரும் போது அந்தாளொட வைஃப் இருந்தாங்க. என்னன்னு விசாரிக்க நேரமில்ல. வியாபாரம் போயி கடைசில இப்புடி ஆயிட்டாம்போல" என்று அவன் என்னைப்பார்த்தை பார்க்காதது போல தவிர்த்தேன். 


என் அமைதி அவர்களை தூண்டிவிட அனைத்து சாத்தியங்களையும் கொண்டிருந்தது. ஆனால் என்னால் அப்படி மட்டுமே இருக்க முடிந்தது. அவர்கள் என்னை சீண்ட நினைப்பது எனக்கு புரியாமலில்லை.


"உனக்க ஆள கடைசியா எப்போ பாத்த" என்ற கேள்வி கடைசியில் எனக்காய் வந்து விழுந்தது. அதற்கு அந்த சமயத்தில் பதில் சொல்லியாகவேண்டிய கட்டாயம் இல்லாத்தால் அந்த பாதை எங்களை கொண்டு சேர்த்த பழைய மாணவர்கள் கட்டிடத்தில் எங்களுக்காக ஒதுக்கப்பட்ட தரைத்தள அறையை விரும்பாமல் போய் சேர்ந்தோம். எங்கள் கல்லூரி அப்பொழுது இருந்ததைப்போல ஏறக்குறைய காட்டிற்குள்ளேயே இருந்தது. மான்கள் மயில்கள் அலைவதை விடுதியிலிருந்து காலையில் பார்க்கலாம். டிசம்பர் ஜனவரியில் பனியிறங்கி நிலத்தை மூடி ஒருவித போதை கொள்ளச்செய்யும். மயில்களில் அகவல் புணர்ச்சியின் கேவல் போல அந்த காலை நேரத்தில் ஒலிக்கும். அப்படியொரு காலையில் அங்கு வந்த ஆனந்தி என்னை கண்டு கொண்டாள். விளையாட்டு மைதானத்தின் மூலையில் மரங்கள் அடர்ந்த பகுதியில் பனி நீர் தாங்கி நிற்கும் இலைகளினடியில் மயிலின் கேவலில் மெய்யற்று இருக்கும் போது அவள் அங்கு வந்து சேர்ந்தாள்.


"குளுரலையா?" அவள் குரல் அதே மயிலின் அகவல் போல ஒலித்தது.


அங்கு யாரையும் நான் எதிர்பார்த்திருக்கவில்லை "இல்ல….சும்மா….இங்க நல்லாருக்கும்" குழறல் குரலில் சொன்ன போது காற்று சுழன்றடித்தலில் அவள் டென்னிஸுக்காக அணிந்திருந்த குட்டை ஆடை காற்றில் பறந்தது. அவள் குறுகி அதனை பிடித்துக்கொண்டே சிரித்தாள். என்னால் சிரிக்க முடியவில்லை. அன்று அதன் பிறகு கல்லூரி நாங்கள் நேரத்தில் பேசிக்கொள்ளவில்லை. 


பிறகு வந்த காலைப்பொழுதுகளில் அனேக நாட்களில் நான் அழைக்காமல் அவளே வந்தாள். அக்காலைகளை புதையல் போல என்னுள் யாருமறியாமல் நான் பதுக்கி வைத்துக்கொண்டேன். பொதுவாக கேள்விகள் இருப்பதில்லை அமைதியாக அமர்ந்திருப்போம். குளிர் காதையடைக்கும் உதடுகள் துடித்து நடுங்கும். சிரித்துக்கொள்வோம். அகவல் ஒன்றை தூரமாக கேட்டதும் பனி படர்ந்த தலையை தட்டிக்கொண்டே இருவரும் தனித்தனியாக செல்வோம். 


அன்றும் அப்படியே சென்றிருக்கலாம். ஆனால் நானோ அவளோ அந்த மயிலின் ஆகவலோ அப்படிச்செய்ய அனுமதிக்கவில்லை. எதையும் பகிர்ந்து கொள்ளாத நாங்கள் இருவரும் அதை மட்டும் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தோம். அன்றிலிருந்து. கேள்விகள்ற்ற புணர்தலில் மிச்சமிருப்பது அதன் இன்பம் மட்டுமே. நான் இன்புற்றேன். அவளும். ஆனால் அங்கு கேள்வி முளைத்தது. சாதரணமான கேள்விபோல நினைத்து கேட்கப்பட்டது அசுரத்தனமான விளைவுகளை அவளிடம் உருவாக்கியது "என்னை ஏன் பிடிச்சிருக்கு" என்ற போது அவள் என் மேல் அமர்ந்த நிலையில் இயங்க என் முதுகு புற்களில் படிந்த குளிரை உணர்ந்து சிலிர்த்து வளைந்து எழுந்தது. அவள் அசைவை நிறுத்தி மெல்ல இறங்கி உடைகளை அணிந்துகொள்ள ஆரம்பித்தாள். நான் அமைதியாக அவள் முகத்தையே பார்த்தபடி என்னுடையைதை அணிந்துகொண்டேன். என்றும் இனிமையாக நீர் நிறைந்து  இருக்கும் கண்கள் சுருங்கி யோசனைக்கான பாவனையில் எங்கோ பார்வையை நிறுத்தி நின்றது. வெயில் உறைக்க ஆரம்பிக்கும் கணத்தில் அவள் "எனக்கு தெரியல" எனும் போது கண்கள் இன்னும் கூர்மையாக அந்த பாவனையில் ஈடுபட்டன. எழுந்து சென்றுவிட்டாள். அதன் பிறகு அவள் காலைப்பொழுதை என்னுடன் களிக்க வரவில்லை. 


அவள் ஓர் கடிதம் போன்ற ஒன்றை எழுதி என் கையில் கல்லூரி சமயத்தில் கொடுத்தாள். அதனை மற்றவர்களும் பார்த்திருக்க வாய்ப்பிருந்தது. அப்பொழுதே அதை வாசிக்காமல் நான்காக எட்டாக பதினாறாக மடித்து ஒளித்து எடுக்க முடியாதபடி பேண்ட் பாக்கெட்டுக்குக் வைத்து விடுதிக்கு சென்றேன். அன்றிலிருந்து நண்பர்கள் அவளை என்னுடன் சேர்த்து வைத்து பேச ஆரம்பித்தனர்.


அதில் அவள் என்னை ஏன் பிடிக்கவில்லை என்று மட்டும் குறிப்பிட்டு இனிமேல் வரப்போவதில்லை என்றும் எழுதியிருந்தாள். 


"அந்த கேள்வியை நீ கேட்காமல் இருந்திருக்கலாம். உன்னை விரும்ப எனக்கு காரணங்கள் இல்லை. ஆனால் வெறுக்க காரணங்கள் நிறைய கைவசம் வந்தன. உன் முகம் உடல் கண்கள் தோளில் புடைத்த எலும்புகள் , தனிமை , அமைதி என எல்லாம் வெறுமையை , வெறுப்பை உண்டாக்கின. நான் இந்த அளவுக்கு உன்னை வெறுத்திருக்கிறேன் என்பது எனக்கே வினோதமாக இருந்தது. நீ அந்த கேள்வியை கேட்காமல் இருந்திருக்கலாம்". நான் தினம் காலையில் மைதானத்தை தாண்டி செல்வதும் நின்று போனது.


அதன் பிறகு நான் அவளை பார்க்கும் போது கார்த்திக்கின் கைகள் அவள் கைகளுக்குள் பாம்புகளைப்போல பிணைந்திருந்தன. அவளை நான் துளிகூட வெறுக்கவில்லை. அவள் அழுது புலம்ப என்னிடம் வரவேண்டுமென எதிர்பார்த்தேன். ஆனால் வரவில்லை. கற்பனையில் அவள் கண்களை துடைத்தபடி ஆழ்ந்த மயக்கத்தில் என் கால்களுக்கிடையில் கை சென்றது. நான் எண்ணியிருக்கவில்லை. கார்த்திக்குடனும் அவள் சேர்ந்திருக்கவில்லை. அந்த நான்கு வருடங்களில் இன்னும் இன்னும் என ஆண்கள் அவளுடன் அலைந்தனர். தூரத்திலிருந்து அவளை பார்ப்பதுடன் நான் விலகியிருந்தேன். என் நண்பர்கள் என்னுடன் வைத்து பேசியதை நிறுத்தி அதை மறந்தே போயினர். 


கல்லூரியின் இறுதியாண்டில் பிறகு எனக்கு வழியொன்றும் தெரியாமல்  பெண்கள் விடுதியில் மின் கம்பத்தின் கீழிருந்த சுவரில் கால்கள் விரித்து படுத்து கிடக்கும்படி வரைந்து பாகம் குறித்து தேவிடியாள் என்று அடையாளப்படுத்தி செல்லும் போது தூரமாய் அடி மரக்கிளையில் தெரிந்த இரு கண்கள் செம்புள்ளிகளென என்னை வெறித்தன. மின் கம்பத்தின் கீழ் ஓர் எறும்பைப்போல அங்கிருந்து விலகிச்செல்லும்போது அதன் அகவல் ஒலித்தது. 


அவளை அதன் பிறகு மொத்த கல்லூரியும் ஒற்றை மனித உடல் போல  தேவிடியாள் என்றது. அவளைப்பற்றிய பேச்சை நான் எங்கும் உணர்ந்தேன். கழிவறையில் அமர்ந்திருந்த இருவர் அதைப்பற்றி பேசுகையில் எனக்கு கடைசியாக அவள் என்னிடம் வந்துவிடுவாள் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் கல்லூரி முடியும் முன் அவள் மணியண்ணனுடன் சென்று விட்டாள். கல்லூரியை விட்டு சென்ற பிறகு அவளை நான் மறக்காமல் எங்கோ ஓர் அடியாளத்தில் ஒளித்து வைத்திருந்தேன். 


விழா முடிந்து கிளம்பும் போது நான் வரைந்து வைத்த சுவர் கண்ணில் பட்டது அது இன்னும் அழியாமல் அதன் தடங்களை தங்கவைத்து பதிந்திருந்தது. அது என் பிரம்மையாகக்கூட இருக்கலாம். ஆனால் அவளை போன மாதம் ஓர் விடுதியில் இன்னொரு ஆணுடன் பார்த்த போது அவள் அப்பொழுதாவது என்னிடம் வந்து அழுவாளென எதிர்பார்த்தேன். என்னை அவளுக்கு ஞாபகம் கூட இருந்ததாக தெரியவில்லை. அந்த சமயத்தில் அந்த மயலின் கேவல் மண்டைக்குள் ஒலித்தது. நான் காத்திருக்கிறேன். 

Sunday 3 October 2021

அமிர்தம் - சிறுகதை

நான் இன்று மாலை நடை சென்றிருக்கக்கூடாது. சிவந்த சூரியன் அழகர் மலையின் பின் பதுங்கி நின்று சாத்தானின் உதடுகளுடன் சிரித்ததை நான் உண்மையாகவே தவிர்த்திருக்கலாம். ஆனால் இந்த காலம் என்னை அங்கு கொண்டு சென்று சேர்த்துவிட்டது. இப்பொழுது எனக்கு தேவை உடனடியான மூளை அறுவை சிகிச்சை. அதன் மூலம் நான் கடந்த காலத்தை முற்றிலுமாக மறக்கடித்துவிடலாம் என்பதை முன்பே அறிந்திருந்தேன். சுவர்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டி வரிசையாக இருபக்கங்களிலும் இருந்த சின்னச்சின்ன வீடுகளின் வாசலில் பெண்கள் அமர்ந்து என்ன கதைகளையெல்லாமோ வாய் வலி தெரியாமல் பேசிக்கொண்டிருந்தனர். அவர்களின் முகம் ஒரே கணத்தில் நவரசங்களையும் புரியும் என்பது எனக்கு வியப்பாகவே இருந்தது. தினமும் காணும் ஓர் காட்சி தினமும் நம்மை குஷிப்படுத்தும் என்பதை நான் அங்கேயே கண்டேன். அந்த குழந்தைகள் அவை ஏன் அப்படி இருக்கவேண்டும்.


******


எங்களுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்திருந்தது. பெரிய கண்களை விரித்து இமை மூடாமல் சுற்றும் ஃபேனை பார்த்துக்கொண்டு கழுத்தின் வழி பால் வழிவது தெரியாமல் வாயால் சப்புக்கொட்டிக்கொண்டிருக்கும். அதன் கண்களில் ஒளிவட்டம் தெரிவதாக பக்கத்துவீட்டு அம்மா சொன்னாள். அவள் தெய்வத்துடன் பேசுவதாக என் மனைவியும் ஒத்துக்கொண்டதால் நானும் அதனி ஒத்துக்கொள்ள நேர்ந்தது. ஆனால் உண்மையாகவே அவன் கண்களி ஒளிவட்டம் தெரிந்தது. எனக்குள் சொல்லிக்கொண்டேன் “தெய்வக்குழந்தை”.என் மனைவி அவனுக்கு பெயர் தெரிவு செய்துகொண்டிருந்தாள். ஆதியும் அந்தமும் அற்ற சிவனுக்கு வைப்பதைவிட அதிக பெயர்களை வசம் வைத்து அதிலொன்றை தேர்வு செய்யும் இலகுவான வேலைடை எனக்குக்கொடுத்து ஒதுங்கிக்கொண்டாள். அப்பொழுது அவனுக்கு ஒருமாதம் முடிந்திருக்கவில்லை. அவனைத்தவிர மற்ற உயிர்கள் இல்லை என்ற உணர்வுடனேயே அவன் முன்பிருந்த உலகிலிருந்து வெளியே வந்து இப்பொழுதும் அதே நினைப்பிலிருந்தான். நாங்கள் நடப்பதும் அவன் முகத்தின் முன் எங்கள் பூதாகர முகத்திய காண்பிப்பதும் அவனை ஒன்றும் செய்யவில்லை. அவனுக்கான உலகில் அவன் ஓர் இசைக்கு இயங்க்குவது போல அழுவதும் உறங்குவதுமாக களித்தான். நாங்கள் வெறும் பணிவிடை செய்யும் இயந்திரங்களேன நினைத்துக்கொண்டான் போல.


******


அந்த மாலை இனிதாகவே ஆரம்பித்தது. குழந்தையை கைகளில் எடுத்து தலையைத்தாங்கி கால்களில் அமர்த்திக்கொண்டேன். அவன் என் விரலொன்றை பற்றிக்கொண்டான். அவன் சூட்டுடம்பு ஒருவிதமான போதை தருவதாக இருந்தது. அதில் பூமியிலிருந்து எடுத்து எதையும் கலக்கி உருவாக்காமல் வேறெங்கோ உருவாக்கிய மதுவொன்று வழிந்துகொண்டிருந்தது. அதனை சூடாக நான் உணர்ந்து கனிந்திருந்த கணத்தில் செந்நீலம் நிறைந்த வானில் சிறகின்றி தென்றல் மட்டும் வீச பறந்துகொண்டிருக்கையில் மேகங்களுக்கிடையில் ஒளிந்த திறப்பொன்றில் தொற்றிக்கொள்ள ஏதுவாக ஏணிபோன்ற அமைப்பொன்று நீண்டு கிடந்தது. அதில் தொற்றி ஏறி உள்நுளைந்து எழுகையில் முன் நின்ற அதியுயர வெண் தோரணவாயிலில் உச்சியில் என்னமோ எழுதியிருந்தது. ஆனால் அதனை உற்று அறிந்துகொள்ளும் முன் என் மனைவி அவனை எடுத்து அள்ளி அணைத்து என்னை அனியாயமாக அங்கிருந்து கீழிறக்கிவிட்ட்டாள். கோபமின்றி அவளுக்கு விடைசொல்லி வெளிவரும்போது வானம் நான் கண்ட அதே நிறத்திலிருந்தது என் அடிநாக்கில் அமிர்ந்தமாக இனித்தது. 


******


குழந்தை பிறக்கும் முன் நான் அவள் வயிற்றில் காதுவைக்கும் போது தவறாமல் தன் காதுகளின் இடத்தை சரியாக அறிந்து அதில் ஓர் உதைவிடுவான். “செரியான ஆளுதான் கேட்டியா” என்று மனைவியிடம் சொல்லும் போது அவள் உறங்கியிருந்தாள். இதனை இறக்கி வைத்தால் போதும் என்றிருந்தது அந்த பெண்ணுக்கு. மனம் திருந்தி குழந்தையாக சொன்னான் அவன். நான் மீண்டும் ஆக முடியாது ஆனால் குழந்தை ஒன்றுடன் வளரலாம் அது என்னை மனம் திரும்பியது போல் நடிக்கவைக்கும் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது. அதனால் அவனுடம் இன்னும் நெருக்கமாக என் வயிற்றினுள்ளூம் உணர்ந்தேன். அவன் துடிப்பதை ஒருமுறை மனைவியிடம் சொன்ன போது அவள் சிரிக்கவில்லை. என்னை ஓர் திருடனைப்போல பாவனையுடன் முகத்தை திருப்பிக்கொண்டு அந்த நாள் முழுவதும் பேசாமல் இருந்தாள். 


******


வானை வெறித்தவாறு எங்கள் தெருவை கடந்து சென்றேன். அடுத்த தெருவையும் கடந்து செல்லும் வழியில் தெரு மாற்றம் கண்டு ஒற்றையடி பாதையாக மாறியது. இருபக்கம் நாணற்புற்கள் என்னுயரத்திற்கு வளர்ந்து நின்றன. அதன் இருமுறமும் ஏரியின் நீ ததும்பி மென் அலைகளுடனும் அதன் சத்தத்துடமுன் வானை பிரதிபலித்து கிடந்தது. அந்த பாதை ஓர் பூங்க்காவின் வாசலில் போய் நின்றுவிட்டது. அதனுள் அரளியும் தெங்கும் நெட்டிலிங்கமும் பாதையின் இருபுறகும் வளர்ந்து நின்றது அங்கொன்றும் இங்கொன்றுமாய் மனிதர்கள் என்னமோ விளையாடியும் பேசியும் சிரித்தும் இருந்தது எனக்கு அப்போது மனதில் மதியவில்லை என்று நினைத்து முற்றிலும் தவறானது என்பதை இப்போது புரிந்துகொள்கிறேன். அங்குதான் அந்த குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர். மனம் திரும்பி நான் குழந்தையாக வேண்டுமா என்று நினைத்தும் அங்குதான்.


******


அவன் அதிகாலை மூன்று மணிக்கு பிறந்ததாக மருத்துவர்கள் சொன்னார்கள். அதில் என்றுமே நாம் நம்பச்சாத்தியமற்ற விசயமே அரங்கியிருக்கிறது. அவன் கைகளில் ஓர் எலிக்குஞ்சு போல் இருப்பதாக சொல்லியே அந்த நர்ஸ் சென்ற போது அவளை அறைந்து சென்னியை பேத்தாலென்ன என்றிருந்தது. ஆனால் அவன் மனித உயிர் போலில்லை என்பது அவன் அழுகையில் தெளிவாகவே தெரிந்தது. அழுகை நின்று அவன் என் கண்களை நேருக்கு நேர் பார்த்தான் வாய் ஒரமாக நெளிந்து சிரிப்பைபோன்ற ஓர் முகபாவனையை காட்டி அமைதியானான். அவனிடமிருந்து ஓர் கேள்வி வந்ததாகவே நான் அன்று எடுத்துக்கொண்டேன் “நான் உன்னை காப்பாற்ற வந்தவன். என்னில் நீ கரைவாயாக. செய்வாய் அல்லவா?”. அந்த கேள்விக்கு “ஆம்...ஆம்” என்று பதிலளிக்கும் போது அவ்வளவு சத்தமாக மற்றவர்களுக்கு கேட்டிருக்கும் என்று நான் நினைத்திருக்கவில்லை. அடுத்த அறையிலிருந்தவர்கள் “மண்டைக்கு வழியில்லாத கேசாருக்குமோ” என்றது கேட்கவும் அமையாக நாங்கள் இருந்த அறைக்குள் சென்று விட்டேன். அவளை ஸ்ட்ரச்சரில் வைத்து தள்ளிக்கொண்டு வந்ததும் “ஏன் இவ்வளவு சீக்கிரம் வந்தாய்” என்று கேட்க நினைத்து கேட்காமல் “வலிக்கா?” என்றதும் அவள் பதில்சொல்லாமல் கண்மூடி உறங்க முயன்றாள். அந்த சமயத்தில் குழந்தையின் முகத்தைக்கூட பார்க்கவில்லை. புண்ணியம் செய்யாதவள். தொட்டிலில் துணியை விரித்து அவனை கிடத்தும் முன் தூங்கிப்போய்விட்டான். அப்பொழுதும் என் நாக்கில் அமிர்ந்தம் இனித்தது. 


******


அந்த பூங்காவின் இடது மூலையில் நின்ற செம்பருத்டியின் பின்னால் ஐந்தாது சிறுவர்களின் தலைகள் தெரிந்தன.அவர்கள் மணலில் குத்தவைத்து வட்டமாக சுற்றி அமர்ந்திருந்தனர். பாம்புகளின் சத்தம் போலிருந்தது அவர்களின் பேச்சு. என்னால் நான் நின்ற இடத்திலிருந்து அவர்கள் பேசுவதை கேட்கமுடியவில்லை. மெல்ல அவர்களில் அருகில் சென்று அங்க்கிருந்த சாய்வு பெஞ்சில் அமர்ந்து எதிரில் தெரிந்த பூத்த பனையின் உச்சியை பார்த்து அமர்திருந்தாலும் காதுகள் அவர்கள் திசையிலிருந்தது.


“அவன கொன்றலாம் மக்கா” என்ற சிறுவனின் மழலை முதலில் விழுந்தது. நான் நகர்ந்து அவர்களருகில் செல்லாமல் சென்றேன்.


“கொல்லணும்….மண்டைல கல்ல போட்டு கண்ணு வெளீல வரணும்” என்றது இன்னொரு குரல்.


“நீ சொல்லு , உன்னையத்தான அடிச்சான்” 


“ஆமா அடிச்சான். இன்னா இங்கதான் ஆடிச்சான். வலிக்கி” என்று ஏனோ அழ ஆர்ரம்பித்தான்.


“பொட்ட மாரி அழாதலா” என்ற குரல் என்னை பயமுறுத்தியது


“இல்ல அழல” என்றவன் கண்களை சட்டையால் துடைத்துக்கொள்ளும் மொருமொருப்பு சத்தம் கேட்டது.


“இந்த கம்பு போதுமா” என்று கையில் எடுத்த குச்சியால் அடித்தால் வலிக்கும் என்பது கற்பனை கதைகளில் மட்டுமே நடக்கும். எனக்கு மூச்சை அடைப்பது போலிருந்தது. என் மகனை நினைத்துக்கொண்டேன். அவன் யார்? என்பது பயம் தரும் புரியாத கேள்வியாயிருந்தது இப்போது. எழுந்து சென்றுவிடமால் என்று நினைக்கும் கணம் அவர்களிலொருவன் என்ன கவனித்துவிட்டான். அவன் கண்கள் விரிந்து என்னைப்பார்த்தன. அது கடவுளால் படைக்கப்பட்ட நான் அறிந்த ஆனால் வெறுத்த ஒன்றைப்போல் இருந்தது. அழுகிய சிவந்த பழம் போல. கைகள் வியர்த்து பெஞ்சில் வழுக்கவும் நான் எழுந்து திரும்பிப்பார்க்காமல் சென்றுவிட்டேன். வானம் ரத்தச்சிவப்பாக மாறிக்கொண்டிருந்தது காற்று வேகமாக வீச என்னால் நடக்க முடியவில்லை. சீக்கிரம் சீக்கிரம் என்ற குரல் பின்னாலிருந்து தள்ளியது. ஓடினேன். 


தெருக்களைத்தாண்டி வீட்டை அடையும் போது மனைவி வாசலில் என்னமோ விற்றுக்கொண்டிருந்த ஒருத்தியிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்தாள். என்னைப்பார்த்ததும் “பிள்ள தனியாருக்கு” என்று மன்னிப்பை வேண்டுவது போலவும் அதே சமயம் கண்டிப்புடனும் சொன்னாள். ஆனால் அச்சமயம் எனக்கு அதெல்லாம் காதில் விழவில்லை. முன்னாலிருந்த அறைக்குள் அவன் தொட்டிலில் தொங்கிக்கொண்டிருந்தான். துணியை விலக்கிப்பார்க்க பயமாக இருந்தது, ஆனால் அதை தெரிந்து கொள்ளும் அவசரமும் என்னை நீரில் அமுக்கியது. பெருமூச்சொன்று விட்டுவிட்டு தொட்டிலைவிலக்கி பார்த்தேன். அதே அழுகிய சிவந்த கண்கள். உதடுகள் நெளிந்த சிரிப்பு. நடக்க முடியாததை நினைத்து அழ வேண்டும் போலிருந்தது. ஆனால் முடியவில்லை.  சேபா மெத்தையில் சாய்ந்து படுத்து உறங்க ஆரம்பிக்கும் கணம் நாக்கு கசந்தது அமிர்தம் என்பது உறைத்தது.