Friday 29 May 2020

போரும் வாழ்வும் ஓர் அவதானிப்பு 3 : நெப்போலியன்


ஒருவன் சாதாரண நிலையிலிருந்து உயர்ந்து அவனால் அடைய முடிந்த உச்சநிலையை அடையும் பொழுது அதும் அச்சமூகத்தின் ஒட்டுமொத்த மனதின் எழுச்சியிலிருந்து உருவாகிவருபவன் என்றால் அவன் அந்த சமூகத்தில் ஓர் ஆழ்ந்த அடையாளத்தை பதித்து விடுகிறான். நெப்போலியன் 17 மற்றும் 18-ஆம் நூற்றாண்டின் ஐரோப்பிய கூட்டுமனதின் எழுச்சியாக வந்தது அங்கிருந்த பெரும் படைப்பாளிகளின் படைப்புகளில் வருவதில் ஆச்சரியமில்லை. ஆனால் ரஷ்யாவின் இரு பெரும் படைப்பாளிகளான டாஸ்டாயும் தாஸ்தாவெஸ்கியும் இரு வேறு புள்ளிகளில் நெப்போலியனை அணுகுகிறார்கள்.

வரலாறு அதன் போக்கில் நகர்கிறது அதற்கு ஒரு சரியான வழிமுறைகளோ அல்லது முன்னே இழுத்து விடப்பட்ட ஆட்டு மந்தைகளின் நேர்க்கோட்டு பாதைகளோ இல்லை. அதன் சம்பவங்களின் தொடரானது நாம் நினைக்கும் ஓர் தனிமனிதனின்  சிந்தனை ஓட்டத்தாலில்லை. அதன் ஆதி அல்லது சக்தி  அறியமுடியாதது. அப்படியானால் பாதிக்குமேற்பட்ட பிரஞ்சுப்படைகளின் இறப்பிற்கும் , பிரஷ்யாவின் , ஆஸ்த்ரியாவின் தோல்விக்கு , மாஸ்கோ எரிக்கப்பட்டதற்கு காரணம் யார் ? , அந்த தனிமனிதன் இல்லையெனில்  அது எங்கிருந்து பிறக்கிறது. இந்த கேள்வியை நாம் கேட்டுக்கொண்டோமானால் நாம் டால்ஸ்டாயின் நெப்போலியனை நெருங்கி மற்ற வரலாற்று ஆராய்ச்சியாளர்களிடம் இருந்து விலகி உணர்ந்துகொள்ளலாம்.

இந்த அணுகுமுறையிலேயே டால்ஸ்டாய் நெப்போலியனை நெருங்குகிறார். முழுமையான தன் அகங்காரம் கொண்டவன் என்றொ , புரட்சியை உருவாக்கியவன் என்றோ , குன்றாத வீரன் என்றோ , ஐரோப்பாவின் ரட்சகர் என்றோ , சத்தியத்தை நிலைநாட்டவந்தவன் என்றொ அவர் நினைக்கவில்லை. அவன் ஒரு பிரபஞ்ச ஆலமரத்தின் காய்ந்து கொண்டிருக்கும் ஒரு பச்சை இலை என்ற அளவில் மட்டுமே சேர்த்துக்கொள்கிறார். அவர் நாவல் முழுக்க எழுப்பும்  கேள்விகள் நெப்போலியன் மீது உலகம் அப்பொழுது கொண்டிருந்த அனைத்து நம்பிக்கைகளையும் உடைக்கிறது. அல்லது டால்ஸ்டாயின் சித்தாந்தம் அதனை ஏற்க மறுக்கிறது.

நெப்போலியன் எனும் மாவீரன் என்ற கருத்திற்கு டால்ஸ்டாய் பின்வறுமாறு கூறுகிறார் , "போலந்திலும் பிரஷ்யாவிலும் தன் மாவீரத்தினால் வென்றவன் ஏன் ருஷ்யாவில் தோற்று பின்வாங்க வேண்டும் , எங்கே அந்த வீரம் எங்கு சென்றது மற்றும் பிரஞ்சு தேசத்தின் சமுதாய முன்னேறத்திற்காக தர்மத்தின் வழி உருவாகி வந்தவன் ஏன் மற்ற தேசங்களில் கொலைக்களங்களை உருவாக்க வேண்டும்". இவ்வாறு அடுக்கிக்கொண்டே போகும் அவர் நெப்போலியனை ஒரு சாதாரண சிப்பாய்க்கும் வித்தியாசம் இல்லை என்பதை நிறுவுகிறார். இந்த தகவல்கள் அனைத்தும் ஆசிரியர் நேரடியாகவே வாசகனுடன் பகிர்கிறார். ஒரு கட்டுரை வடிவத்தில் , இது நாவலுக்கு ஒரு தடை என்ற போதிலும் அனைத்து வரலாற்று ஆசிரியர்களின் நோக்கையும் விலக்கி ஒரு முழு புதிய பாதையை நம் முன் வைக்கின்றது. (காந்தி இந்த போக்கை முற்றிலும் உணர்ந்தவர் என்றே எண்ணத்தோன்றுகிறது. வரலாற்று ஓட்டத்தில் தன் நிலை என்ன என்பதை உணர்ந்த ஒரு தீர்க்கதரிசியாக அவர் எல்லா போராட்டங்களிலும் பங்காற்றியுள்ளார்)

நெப்போலியன் கூறும் உத்தரவுகள் பாராடினோவில் போர்க்களத்தை சென்று சேரும்பொழுது அவர் கூறியதற்கு நேர்மாறாக பிரகடனப்படுத்தப்படுகிறர்து. ஆனால் அதே ஆள் ஆஸ்டர்லிஜ்ஜில் கூறிய உத்தரவுகள் மூலமாகவே அவர்கள் வெற்றிபெற்றனர் எங்கின்றனர் சரித்திர ஆசிரியர்கள் இந்த முரண்பாடை ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார். இதில் எங்கு நெப்போலியனின் மாவீரம் உள்ளது என்பதே அவரின் கேள்வி.

நீட்சேவின் அதிமனிதன் என்னும் கருதுகோள் அவருக்கு ஒரு நிரூபிக்கமுடியாத உண்மையே. ஒரு தனிமனிதன் மொத்த வரலாற்றின் ஓட்டத்தை கைகொள்வான் என்பது ஒரு குழந்தை வேண்டுமானால் நம்பும் ஆனால் நான் அதற்கு ஆளில்லை என்பது போல கூறுகிறார் டால்ஸ்டாய்.

தாஸ்தாவெஸ்கியின் ரஸ்கோல்நிகாவை நாம் இங்கு கருத்தில் கொள்ள வேண்டும். அவன் செய்யும் குற்றம் கொலை , அதன் நோக்கம் என்று அவன் தன்னை அறிவுறுத்திக்கொள்வது "அவள் ஒன்றிற்கும் உதவாத பேன் போன்றவள். அவளால் இந்த உலகத்திற்கு தொல்லை மட்டுமே. ஒரு நல்ல செயலுக்காக அவளை நான் கொன்றேன் இதில் என்ன தவறிருக்கிறது" இதற்கு அவனுக்கு  உந்து சக்தியாக இருப்பது நெப்போலியன் எனும் கருதுகோள். அவனின் மாவீரம் ,  செய்த போர் , கொன்றோளித்த மக்கள் எல்லாமே ஒரு நல்ல செயலை , ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்குவதற்காகவே. இதை அவன் பலமாக நம்புகிறான். அதுவே அவனை கொலை செய்ய தைரியப்படுத்துகிறது , மனசாட்சியும் அதை ஏற்றுக்கொள்கிறது.

இதை நாம் உலகின் அனைத்து மாவீரர்களின் ரத்தக்கறைக்கு சமானப்படுத்த முடியும். ஸ்டாலின் ,  மாவோ , ஹிட்லர் என்று அனைவரும் விரும்பியது ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்குவது என்பதுதான். ஆனால் அவர்கள் கைகள் ரத்தக்கறைகளுடன் இருக்கின்றன. ஒரு வேளை நெப்போலியன்  , ஸ்டாலின் , ஹிட்லர் அனைவருக்கும் ஒரு சிறு தருணம் , தன் மனசாட்சியைத்திறக்கும் சோனியா போன்றோரு பேரொளி கைகளில் கிடைத்திருந்தால் அவர்கள் தங்கள் அகங்காரக்கண்கள் குருடாக மனம் திறந்த்திருக்குமா! என்று எத்தனிக்கிறார்.

தாஸ்தாவெஸ்கி நீட்சேயின் அதிமனிதன் என்னும் கருத்தை நம்புகிறார். ஆனால் அதன் மற்றோருபக்கத்தைப்பார்க்கும் பொழுது அது அழுக்கடைந்து பிணவாடையுடன் கிடக்கின்றது. அந்த மனிதனுக்கு நான் ஒரு ஒளியைக்கொடுத்தால் என்னவாகும் என்று எண்ணிப்பார்க்கிறார்.

Wednesday 27 May 2020

போரும் வாழ்வும் ஓர் அவதானிப்பு 2 : தந்தையை கடத்துதல்


மரபென்பதை நாம் வரையறுக்க முயலும் போதோ அல்லது வரலாறு என்பதை நாம் எழுத நினைக்கும்போதோ நாம் முன்னோர்களை தேடிச்செல்கிறோம். அப்படி நாம் தேடிச்செல்லும் போது முதலில் கண்டடைவது நம் பெற்றொர்களையே அங்
கிருந்து தான் நாம் நம் வந்தவழியை பின்னோக்கி பார்க்கமுடியும். நான் எப்படிப்பட்டவானாக இப்பொழுது உருவாகியிருக்கிறேன் என்று நோக்கும் பொழுது என் தந்தையின் பயம் , கோபம்  , அனைத்தையும் உடனே நம்பும் தன்மை சகித்தல்  போன்ற சிலகுணங்கள் அதும் அச்சுபிசகாமல் அப்படியே இருப்பதைக்காண முடிகிறது. இத்தனைக்கும் என் அன்னை நான் ஒருபொழுதும் என் தந்தையைப்போல் வரக்கூடாது என்றே கூறியிருக்கிறாள் நானும் அதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்துள்ளேன். ஆனால் என் இருபத்தெட்டுவயதில் நான் அடையக்கூடாதென்று நினைத்த இடத்தயே வந்து சேர்ந்துள்ளேன்.

ஓடைகள் இணைந்து ஒரு சிறு பாசிபிடித்த பழங்கால குளத்தில் தங்குவது போல் நான் அங்கு சென்று தங்கியிருக்கிறேன். போரும் வாழ்வும் நாவலில் வரும் தந்தைகள் தன் குழந்தைகள் மீது அவர்களின் ரேகைகளை பதித்துவிடுகிறார்கள். அது சிலசமயம் அழியாமல் இருக்கிறது அல்லது அதன் நேரெதிர்திசையில் வளர்ந்து சென்றடைகிறது.

வயோதிக பால்கோன்ஸ்கியின் குணங்கள் மேரி , ஆன்ட்ரூ ஆகிய இருவருக்கும் கடத்தப்படுகிறது. மேரி அவளின் தந்தையிடம் இருந்து விலகி வர நினைக்கிறாள். அவரின் கோபம் ஒருவரையும் மதிக்காத தன்மை , தன் கருத்தை ஒப்புக்கொள்ளவைத்தல் என்ற அனைத்திற்கும் எதிர் தரப்பாக ஆன்மீக வழியில் அனைவரையும் நேசிக்கவும் பிரார்த்திக்கவும் , சன்யாசம் செல்லவும் நினைக்கிறாள். அவளின் வீட்டிலுள்ள அடிமைகள் அனைவரும் அவளிடன் சகஜமாக பழகுமாறு ஓர் சூழ்நிலையை உருவாக்குகிறாள். ஆனால் அதற்கு நேர்மாறாக ஆன்ட்ரூவின் மகன் நிக்கலஸிடம் அவன் சரியாக படிக்காமல் பராக்கு புத்தியுடன் இருப்பதற்காக அவனை அடித்து துன்புறுத்தவும் வெறுப்பது போல காட்டிக்கொள்ளவும் செய்கிறாள். இது அவளிடன் தன் தந்தையின் குணங்கள் மாறாமல் அப்படியே இருப்பதைக்காட்டுகிறது. அதற்காக குற்றவுணர்ச்சியடைகிறாள்.

வயோதிக பால்கோன்ஸ்கி இறப்பின் பொழுது தன் இளமைகாலங்களை நினைத்துப்பார்க்கிறார். அது தன் போர் திறனை , ஆழுமையை பற்றியதாக இருக்கிறது, இதனை ஆன்ட்ரூவின் போர் சார்ந்த எண்ணங்களையும் அதில் தான் செய்ய வேண்டிய அசாத்தியங்களையும் தொடர்புபடுத்தலாம். தன் தந்தையின் கீழ் வேலை செய்யும் பொழுது அவர் நெப்போலியன் ருஷ்யாவிற்குள் நுழைந்ததை சுட்டிக்காட்டும் பொழுது தன்னை அவமதிப்பதாகவும்  கேலிசெய்வதாகாவும் அவர் போல் ஆகவவில்லை என்று குத்திக்காட்டுவது போலவும் உணர்கிறான்.

மாஸ்கோ கவர்னரிடம் வயோதியக பால்கோன்ஸ்கி கொடுத்த கடிதத்துடன்  செல்கிறான் வேலைகாரன் அல்பாட்டிச். அவனைச்சுற்றி பெண்கள் அவன் செல்வதினால் பிரஞ்சுக்காரரர்களிடன் அகப்பட்டுக்கொள்ளுவான் எனும்பொழுது "ஓ பெண்கள் பெண்கள் , சகித்துக்கொள்ள முடியாதவர்கள்" என்று சலித்துக்கொண்டு வயோதிகர் சொல்வது போலவே சொல்லிச்செல்கிறான். மொத்தமாகவே அவரை அவன் பிரதியெடுத்துக்கொள்கிறான். தெய்வங்கள் மனிதர்களில் சன்னதம் கொள்வது போல. அவர் அல்பாட்டிச்சை ஆட்டிவைக்கிறார்.

அடுத்த தலைமுறையில் வரும் ஆன்ட்ரூவின் மகன் நிக்கலஸ் தன் தந்தையின் பெயரைக்காப்பாற்றுவதாகவும் அவரைப்போலவே அவன் ஆகப்போகவதாகவும் சத்தியம் செய்கிறான்.

ஆனால் இவற்றிற்கு விதிவிலக்காக இருப்பவன் நிக்கலஸ் ராஸ்டோவ். தன் வியாபாரம் அறியாத , சோம்பேறியான , அனைவரையும் நம்பும் , ஏமாறும் தந்தை மொத்த சொத்தையும் இழந்து குடும்பம் கடனால் சரிந்து நிற்கும் பொழுது நிக்கலஸின் மனைவி மூலம் கிடைத்த நிலத்தில் கடுமையாக உழைக்கிறான். விவசாயிகளை நம்பும் அவன் வீட்டு வேலைகார அடிமைகளை ராணுவத்துக்கு அளிக்க தாயாராக இருக்கிறான்.ஆனால் விவசாயிகளை மதித்து அவர்களில் ஒருவனாக ஆகிறான். விவசாயத்தின் நுட்பங்கள் அறிந்து அவர்களை சரியாக வழிநடத்துகிறான். சொத்துகளை அதிகரிக்கிறான். தன் தந்தையின் கடன்கள் அனைத்தையும் அடைக்கிறான். தந்தையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட மகனாகவே அவன் வருகிறான். அவரின் ரேகைகளை வலுவாக அவன் அழித்துவிடுகிறான்.

தந்தையின் நிழல் படியாதவர்கள் எவரும் இருப்பதில்லை. அது இருளிலும் மந்தமாக நம் கூடே வருவது. 

Monday 25 May 2020

போரும் வாழ்வும் ஓர் அவதானிப்பு 1 : உயிர்த்தெழுதல்

நம் இறப்பிற்கு பின் நம் சிந்தனைகள் என்னவாகும் , அதற்கு அர்த்தமென்ன. அவை வந்து சென்ற பின் நம்மில் நடக்கவிருந்த மாற்றங்கள் தடைபட்டு காலம் ஒரு புள்ளியில் சுவற்றில் முட்டி நிற்கிறது. அதனை நாம் கண்டுபிடிக்க இறந்தவர்களை உயிர்த்தெழச்செய்வதெ ஒரே வழி. அப்படி இறந்து உயிர்த்தெழுந்து வந்தவரில் முதன்மையானவர் கிறிஸ்து. அவர் இறப்பிற்கு பின் அந்த சாவின் நொடியில் அறிந்தவற்றை நம் முன் கொண்டு வந்து சமர்ப்பிக்கிறார். கசண்டாஸ்கி நம் முன் காட்டுவது அதுவே. சிலுவையில் தொங்கும் அவன் அந்த அரைவினாடியில் சாத்தானிடம் கையகப்படுத்தப்பட்டு மீண்டும் வந்து நிற்கிறான். நம்மிடம் கூற ஆயிரம் கதைககளுடன். டால்ஸ்டாய் அவரது படைப்புகளில் இந்த உயிர்த்தெழுதலை முக்கியமான கதாபாத்திரங்களுக்கு ஒரு உத்தியாகவே பயன்படுத்துகிறார். ஆன்ட்ரூ  இரண்டு முறை உயிர்த்தெழுந்து வருகிறான். ஒவ்வொருமுறையும் அவன் நம்மிடன் ஒரு உச்ச நிலையை சாவின் விளிம்பில் அடைந்ததை கடத்துகிறான். நட்டாஷா தான் செய்த தவறுக்காக விஷமருந்தி அதே போல சாவின் விளிம்பிற்கு செல்கிறாள். அன்னா கரீனினாவின் அன்னாவும் அதே நிலையையே அடைகிறாள். இதுவே சாவிற்கு பிறகான வாழ்க்கை

ஆன்ட்ரூவின் உயிர்த்தெழுதல் : 


வாழ்க்கையில் தான் செய்ய நினைத்ததை அவன் இந்த பிரபஞ்சத்தில் இருப்பதற்கான காரணத்தை செய்ய முடியாமல் இருக்கும் ஒருவன் தான் குடும்பம் என்ற ஒரு சிறையில் இருப்பதாக உருவகித்துக்கொள்கிறான். பியரிடம் நாவலின் தொடக்கத்தில் பேசும் பொழுது அவன் கூறுவது அதையே. பியரை அந்த சிறைக்குள் செல்லவேண்டாம் என்று அவன் எச்சரிக்கவும் செய்கிறான். ஆனால் அதிர்ஷ்டவசமாக இருவரும் சென்று அடைவது இறுதியில் அந்த குடும்பத்திடமே. அந்த செயல் மூலம் தனக்கு பேரும் புகழும் தனக்கான ஒரு இடமும் கிடைக்கும் என்பதை அவன் கற்பனை செய்து கொள்கிறான். 

மொத்த போரின் திசையை தான் மாற்றப்போவதாகவும் அதற்காவே தான் போரில் பங்கேற்பதாகவும் அவன் நினைத்துக்கொள்கிறான். அதற்காக குட்டுஜோவிடன் தான் ஆஸ்திரியாவின் துரோகச்செய்தியை குடுத்து அதன் மூலம் அதன் மொத்த புகழையையும் அடைய நினைக்கிறான். போரின் மொத்த உருவமும் அதில் தன் பங்கும் அவருக்கு கிடைக்கப்போகும் பதக்கங்களுமே அவன் கண்முன் அச்சமயத்தில் வருகின்றது மாற்றாக ருஷ்யாவின் மதிப்போ வீரர்களின் உயிரோ அல்ல. ஆனால் அவன் அந்த செய்தியைக்கொண்டு போய் கொடுக்கும் பொழுது அதற்கு எந்தவிதமான மதிப்பும் இல்லாமல் குட்டுஜோவ் அதனை அப்படியே விட்டுவிட்டு சாதாரண விஷயங்களை பற்றி பேச ஆரம்பிக்கிறார்.

ஆஸ்டலிட்ஜ்ஜில் தான் கொடியோடு முன் சென்று போரிடுவதும் அந்த ஒரே நோக்கத்திற்காகவே நான் , என் பெருமை , என் பதக்கங்கள். அதை நான் அடைவேன் ருஷ்யாவை காப்பாற்றுபவன் நானே!

ஆனால் எல்லாவற்றிற்கும் மாறாக அவன்  சேறு நிறைந்த மூடு பனியாலான அந்த நிலத்தில் குண்டு பட்டு வீழ்ந்து கிடக்கையில் , வானத்து மேகங்கள் தன் மாயஜாலத்தைக்காட்டுகின்றன. அதுவே அவனின் முதல் சாவின் விளிம்பு. அவன் அகங்காரத்தின் மறுபக்கத்தில் திறந்திருப்பது மொத்த பிரபஞ்சத்தின் பேரழகு. அத்தனை அழகை தன் மொத்த அகங்காரத்தில் மேல் விரிந்திருக்கும் அழகை அவன் காண்கிறான். அவை அமைதியாக பவித்ரமாக அந்த நாளை அவனுக்கு கொடுக்கிறது. ராபர்ட் ஃப்ரோஸ்டின் இந்தக்கவிதையை நினைத்துக்கொள்கிறேன்.

"The way a crow
Shook down on me
The dust of snow
From a hemlock tree

Has given my heart
A change of mood
And saved some part
Of a day I had rued."

இது ஒரு சிறு திறப்பாகவே அவன் வாழ்வில் அந்த நொடியில் சாவின் முன் அகங்காரம் அடங்க கிடக்கிறான். நெப்போலியன் அவனை ஒரு வீரமுள்ள அதிகாரியாக விமர்சிக்கிறான்.இந்த நொடியில் அவன் இறந்திருந்தால் அவன் சாவிற்கான மதிப்பு வாசகர்களுக்கு உச்சநிலையிலேயே இருந்திருக்கும். ஆனால் டால்ஸ்டாய் ஆன்ட்ரூவை உயிர்த்தெழ வைக்கிறார்.

யதார்த்தத்தில் ஒரு மனிதனை ஒரு சிறந்த பரிசுத்தமான கணம் முற்றிலும் மாற்றி அவனை வேறு ஒருவனாக  கட்டமைப்பது என்பது நடக்காதது என்பதை டால்ஸ்டாய் பலமாக நம்புகிறார்.

அவர் இறந்ததாக வந்த செய்திகளின் நடுவே பால்ட்ஹில்ஸில் பால்கோன்ஸ்கியின் குடும்பம் வாழ்ந்து வருகிறது. அவருடைய குழந்தை பிறக்கும் அந்த நாளில் அவர் மீண்டும் வருகிறார். அங்கு அவர் வாழ்ந்த காலத்தில் போர் முனையில் அவர் கண்ட அந்த பெரும் அழகை  நினைத்துக்கூட பார்ப்பதில்லை. அது அவருக்கு தோன்றிய எண்ணம் தானா என்று வாசகர்களுக்கு தோன்றுமளவுக்கே இருக்கிறார்.

லிசா இறந்ததும் அவருக்கு வருவது குற்றவுணர்ச்சியின் பெரும் நிழல் மட்டுமே . தன்னை ஏன் கைவிட்டீர் என்று லிசா கேட்பது போலவே அவருக்கு அந்த கல்லறையின் முன் நிற்கையில் தோன்றுகிறது. அந்த குற்றவுணர்ச்சி அவரின் குழந்தையை பேணிப்பாதுகாப்பது அதன் பின் அதனை நல்ல முறையில் வளர்ப்பதுமே தன் லட்சியமென நினைக்க வைக்கிறது. அவர் மீண்டும் குடுப்பத்திற்கே வந்து சேர்கிறார். முதல் சாவு அவரை குடும்பத்தில்  இணைக்கிறது. 

நான் வாழ்கிறேன் யாருக்கும் துன்பம் கொடுக்காமல் , அதுவே சிறந்த வாழ்க்கை. தான் ,  குடும்பம் என்று குறுகிய வட்டத்திற்காக வாழ்வதே சந்தோஷமான வாழ்க்கை. அண்டை அயலார் , நாடு , தேசபக்தி என்பதெல்லாம் ஏதும் இல்லை. என்று பியரிடம் கூறிகிறான்

தனது தந்தை ஒரு திருடனை தூக்கில் போட்டிருந்தாலும் தன் தந்தையின் மனநிலைக்காகவே வருத்தப்படுவேன் என்றும் அந்த கொலைக்காக நான் குற்றயுணர்ச்சி அடைவதில்லை என்றும் கூறுகிறான். இந்த மனநிலையை அவனின் குடும்பம் சார்ந்த குற்ற உணர்ச்சியிலிருந்தும். தன் தந்தையின் நிலையிலிருந்துமே அடைகிறான். அடிமைகளை விடுவிப்பதும் கூட தான் என் தந்தையைப்போல ஆகிவிடக்கூடாது என்பதற்காவே எங்கிறான் (அடிமைகளின் சொந்தகாரர்களே அந்த அடிமைகளால் கஷ்டப்படுகிறார்கள் என்பது ஆன்ட்ரூவின் கருத்து. அதாவது அண்டை அயலாரை நேசிக்கவும் முடியாமல் சவுக்கால் அடித்து அதற்கு மானசீகமாக வருத்தப்படும் பிரபுக்கள்). 

ஆனால் விசித்திரமான விஷயம் என்னவென்றால் , அவர் வாழ்ந்து வந்த இடத்திற்கு போனபார்ட் வந்தாலும் தான் ராணுவத்தில் சேர்வதில்லை என்று கூறிய ஆன்ட்ரூ மீண்டும் தன் போர் சம்பந்தமான காரியங்களில் முழு நேரத்தையும் செலவளிக்கிறான் அதற்கான சட்டங்களை இயற்றுகிறான். அதன் மூலம் மீண்டும் ராணுவத்தில் தன் நிலையை உறுதிசெய்ய நினைக்கிறான்.

தன் முதல் சாவின் பிறகு பழைய வாழ்க்கைக்கு  (குற்றவுணர்ச்சியும் , செயலற்ற தன்மையும் கடந்த வாழ்க்கை) இரு விஷயங்கள் மூலமாக ஆன்ட்ரூவால் செல்ல முடிகிறது. பியரின் எதிர்காலத்தின் மீதான மற்றும் கடவுளின் மீதான நம்பிக்கையின் அவனுக்கு வாழ்தலின் அன்பு செய்தலின் எல்லாவற்றிற்கும் மேலிருக்கும் கடவுளின் மேல் நம்பிக்கைக்கொள்ள வைக்கின்றது அவன் மீண்டும் அந்த பரந்த பவித்ரமான வானத்தை ஆஸ்டர்லிஜ்ஜில் பார்த்த அதே வானத்தை உணர்கிறான். 

மனிதனை நடத்துவது அல்லது இயக்கும் அந்த பெரும் சக்தி எது ? செயல் என்பது மட்டுமே. செயலற்ற அனைத்தும் உயிரற்றவையாகவே கருதப்படுகிறது. அதன் மூலம் அவை அடைவது அதை நான் செய்தேன் என்ற அகங்காரம். அதுவே ஆன்ட்ரூவையும் இயக்கிவந்தது. செயலற்ற பட்டுப்போன ஓக் மரம் போன்ற அவன் நட்டாஷாவின் வீட்டை விட்டு திரும்பியதும் தன்னுள் இருக்கும் வசந்தகால மலர்களைக் கண்டுகொள்கிறான்.  பியர் தன் சொத்துகள் அனைத்தையும் நல்லது செய்கிறேன் என்று வீணாக்கியபொழுது  (பியர் முழுக்க முழுக்க ஒரு சோம்பேறி), ஆன்ட்ரூ அதனை செய்தார் முறைப்படி திட்டமிட்டு அடிமைகள் விடுவிக்கப்பட்டனர் அவர்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டன.  

மீண்டும் ஒரு ராஜ தந்திரிக்கான எல்லா தகுதிகளும் தனக்கு இருப்பதாக நினைக்கிறான். அந்த போரில் ருஷ்யா தோற்றதற்கு காரணம் சரியான போர் சட்டங்கள் இல்லாததே காரணம் என்று அவன் நம்புகிறான். அதனை சரி செய்து தன்னை நிலை நிறுத்திக்கொள்ள அவன் இருவரை சந்திக்க நேரிடுகிறது. ஸ்பெரான்ஸ்கி உள்நாடு மந்திரி மற்றும் அராக்சீவ். அரக்சீவை சந்திக்கும் அந்த தருணம் எய்டன் பக்கிகாமை சந்திக்கும் (வெள்ளையானை - ஜெயமோகன்) தருணத்தை நினைவுறித்தியது. ஆன்ட்ரூ அவரை சந்திக்கும் பொழுது தான் காத்திருக்க வைக்கப்பட்டதையும் அவமதிக்கப்பட்டதையும் நினைத்து வருத்தமடைகிறார். ஆனால் ஸ்பெரான்ஸ்கி அவரை ஈர்த்துக்கொள்கிறார். ஒரு கட்டத்தில் ஆன்ட்ரூ அவரைப்போலவே ஆக வேண்டும் அதுதான் உயர்ந்த லட்சியமாக இருக்கமுடியும் என்று கற்பனை செய்கிறான். ஆனால் அவர் சாதரண நேரத்தில் அந்த மிடுக்கும் அறிவாற்றலும் அற்றவராக தோன்றும் பொழுது அவரை வெறுக்கிறான். நான் நினைத்த மனிதன் இவர் அல்ல என்றே நினைக்கிறான்.அவன் இன்னதாக ஆகவேண்டும் என்று நினைத்த எண்ணம் மீண்டும் தலைதூக்கியது.

இரண்டாவதாக அவன் உயிர்த்தெழுவது பாராடினோ போரின் பிறகு. வெளிநாட்டிற்கு சென்று வந்த பொழுது நட்டாஷா தனக்கான நிச்சயதார்த்த பந்தத்தில் இருந்து விலகியதாகவும் அனடொலுடன் அவள் செல்ல முற்பட்டதும் அவனுக்கு தெரிகிறது. அவன் துருக்கி போர் முனைக்கு செல்ல நினைக்கிறான் அங்கு குராகினை டூயலுக்கு அழைப்பது வரை கற்பனை செய்கிறான். இந்த முறை அவன் போருக்கு செல்ல நினைப்பது குராகினை பழிவாங்குவது என்ற ஒற்றை நோக்கமே.

தன்னை பாராடினோ போர் முனையில் ஒரு சிறிய படையின் தலைவனாக இருக்க அனுமதிக்குமாறு குட்டுஜோவுடன் கேட்கிறான். போர் அடுத்த நொடிக்கான ஆச்சரியத்தை ஒளித்து வைத்துள்ளது. அதன் வழி தன் படைவீரர்களுடன் இயங்கும் ஆன்ட்ரூ , பழைய பிரச்சனைகள் அனைத்தையும் மறக்கிறான்.  ஆனால் போரின் முந்திய இரவு வரும் கனவில் இனிமையான நட்டாஷாவை காண்கிறான் குராகின் இன்னும் உயிரோடு இருப்பதை நினைத்ததும் தன்னைச்சுற்றி நெருப்பு பிடித்ததைப்போல எழுகிறான்.

அன்று பியருடன் நடக்கும் பேச்சு நாவலின் ஒரு உச்சகட்டம். கொலை செய்வதே போர் , போர் அற்பர்களும் சோம்பேறிகளும் பொழுதுபோக்கிற்காக செய்யும் வேலை என்று கூறும் அவன் , அதில் தான் ஒரு பகுதி என்பதை அவன் அறிந்தே இயங்குவது போலுள்ளது.  கொலைகளுக்காக ஆலயங்களில் செய்யப்படும் பூஜைகள் அவனை அலைக்களிக்கின்றன. தான் நல்லது எது கெட்டது என்பதை அறிந்துகொண்டதாகவும் அதனால் இதற்கு மேல் வாழ்வதற்கு அறிந்துகொள்வதற்கு ஏதுமில்லை என்கிறான். ஆனால் தன் குடும்பம் துரத்தப்பட்டதையும் தந்தை இறந்ததையும் நினைக்கும் பொழுது அவன் பிரஞ்சுக்கைதிகளை கொல்லவேண்டும் எங்கிறான். கூடவே குராகினும் கொல்லப்பட வேண்டியவனே.

போரின் ஆரம்பத்தில் பீரங்கிக்குண்டில் அடிபட்டு ஆன்ட்ரூ வீழ்கிறான். அவனைச்சுற்றி அந்த மாமிசப்பிண்டங்கள் அவனும் அதில் ஒன்றாய். இங்கு அவன் சாவின் விளிம்பில் இருக்கையில் அவன் அருகில் வருவது அனடோல். அவனுக்காக வருந்தும் ஆன்ட்ரூ "நேசிப்பவர்களையும் வெறுப்பாவர்களையும் ஒன்று போல் நாம் நேசிப்போம்" என்ற கிறிஸ்துவின் வரியைச்சொல்லி மூர்ச்சையாகிறான். (ஆன்ட்ரூவும் அனடோலும் காயம்பட்டு கிடக்கும் இடம் விரான்ஸ்கியும் கரீனனும் அன்னா இறக்கும் தருவாயில் சேர்ந்து இருக்கும் இடம் போன்றது) 

மீண்டும் பிழைக்கும் ஆன்ட்ரூ நட்டாஷா , மேரியுடன் தன் கடைசி நாட்களை கழிக்கிறான். தன் ஒளியென நினைக்கும் நட்டாஷா அவன் அருகில் இருக்கும் பொழுது அதற்காக சந்தோஷமடைகிறான்.  மேரி அழும்பொழுது அவளின் துக்கத்தை புரிந்துகொள்ளுகிறான்.

அவனில் இறப்பின் அறிகுறி தோன்றுவதற்கு முந்தைய நாள் வரும் கேள்வி "அன்பு என்றால் என்ன ? , வாழ்க்கையும் மரணமும் அன்பினால் இயங்குவதாக  , அன்பெனும் பிரபஞ்சத்தில் தான் தன்னை இணைத்துக்கொள்ள போவதாக நினைக்கிறான். "ஆகாயத்து பறவைகள் விதைப்பதுமில்லை அறுவடை செய்வதுமில்லை" என்கிறான். அங்கு அழுவதற்கு எதுமில்லை!. ஆனால் அதுவெறும் கனவு வெளியாகவே இருக்கின்றது. இறப்பதற்கு முன் ஆன்ட்ரூவின் பார்வை "தான் இன்னும் செய்ய எதும் உள்ளதா" என்பது போலிருப்பதாக அந்த அறையில் இருப்பவர்களுக்கு தெரிகிறது.

கடைசியில் அந்த மரணம் அவனை பற்றிக்கொள்கிறது. ஆன்ட்ரூவின் இறப்பும் உயிர்த்தெழுதலையும் பின்வருமாறு கூறலாம் ,  

"தான் எனும் அகங்காரத்தில் இருந்து , குடும்பம் , தன்னை வெறுப்பவர்கள் என்று அனைவரையும் நேசித்து பின் அன்பெனும் பிரபஞ்சத்தில் துளியென கலந்து கிறிஸ்துவின் கைகளுக்கிடையில் இருக்கும் தவறவிடப்பட்ட ஆடாகிறான். அதனால்தான் சாகும் பொழுதும் தான் அறியமுடியாத ஒன்று இன்னும் எஞ்சியிருப்பதாகவே நினைக்கிறான்"

அவன் தவறவிடப்பட்ட ஆடு.

நட்டாஷா உயிர்த்தெழுதல் :




பின் தொடரும் நிழலின் குரல் நாவலில் ஜெயமோகன் இப்படி சொல்கிறார் " டால்ஸ்டாயில் தேவதைகள் பெண்களாகிறார்கள் ,  தஸ்தாவஸ்கியில் பெண்கள் தேவதைகளாகிறார்கள்". இந்த கருத்தை ஒட்டியே நான் நட்டாஷாவை அணுக முயல்கிறேன்.

நட்டாஷா கதாபாத்திரமானது பெண்களின் சபலம் , மற்றவர்களை ஈர்த்தல் (வழிய விடுதல்) , காதல் , அன்பு எனும் குணங்களின் வழியே இறுதியில் தன் பூரணத்தன்மையை அடைகிறது. இது ஏற்கனவே ஆசிரியர் அன்னா கரீனினாவின் அன்னா மூலம் முயன்ற ஒரு கதாபாத்திரமே. அன்னா ஒரு கட்டத்தில் நின்று விடுகிறாள். ஆனால் நட்டாஷா அதனை தாண்டி ஓர் முழுமை நிலையை அடைகிறாள். ஆனால் இருவருக்கும் இருக்கும் முக்கியமான வித்தியாசம் அன்னாவிற்கு ஒரு குழந்தை இருக்கின்றது ஆனால் நட்டாஷா திருமணத்திற்காக காத்திருக்கும் ஒரு கன்னி.

நட்டாஷாவை ஒளியின் வடிவமாகவே பியரும் , ஆன்ட்ரூவும் , டெனைசாவும் காண்கின்றனர். அவள் பூரண அழகுடையவள். வசந்த கால செடி போன்றவள். சிறு காற்றிற்குக்கூட ஓரிடமென்றில்லாமல் ஆடுபபள். மகிழ்ச்சி ஒன்றையே தன்னகத்தே கொண்டவள் அவளை சுற்றியிருக்கும் அனைவரும் அதனை அடைவர். அதற்காக எங்கும் பாராட்டப்படுபவள்.

சிறுமியாக அவள் போரிஸை காதலிப்பதாக நம்புகிறாள். ஆனால் அது தன்னை என்றும் கட்டுப்படுத்தாது , நான் சுதந்திரமானவள் என்பதை சோனியாவிடம் கூறுகிறாள். மாறாக சோனியா தன் காதலை கூறும் பொழுது அது அசாதாரணமாக அவளுக்கு இருக்கின்றது. அவளுக்கு அழியாத மாறாத காதல் என்பதில் அர்த்தமிருப்பதாக தெரியவில்லை.

நட்டாஷா பூரணமான அழகுடையவள். அந்த அழகு அவளையறியாமல் மற்றவர்களை தன் பக்கம் ஈர்க்கும்படி செய்கிறது. டெனைசாவ் தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்கும் பொழுது அவளுக்கு அது வெறும் கிளுகிளுப்பாகவே இருக்கின்றது. அதற்காவே அவள் ஆண்களை ஈர்க்க நினைக்கிறாள். பியரிடமும் அவள் அதையே செய்கிறாள். நட்டாஷாவுக்கும் அவள் அம்மாவிற்கும் இருக்கும் உறவு இங்கே கருத்தில்கொள்ளப்பட-வேண்டும். தன் அந்தரங்களை அம்மாவிடம் மட்டுமே பகிர்ந்துகொள்கிறாள்.
அவள் அம்மாவும் அதே போன்றதொரு மனநிலையில் தன் குட்டிக்காலத்தில்  இருந்திருக்கலாம்.

சக்ரவர்த்தியுடனான நடன அரங்கில் ஒருவரும் கண்டுகொள்ளாமல் இருக்கும் நிலையில் அவள் அழுதே விடுகிறாள். (கிட்டி அன்னாவை பார்த்து அடையும் அதே போன்றொதொரு பதற்றம்) ஆன்ட்ரூ அவளை அங்கு பூரண அழகென உணர்கிறான். அவளை ஆட ஆன்ட்ரூ அழைப்பதில் இருந்தே அவர்கள் இருவரின் காதல் தொடங்கிவிட்டது. தன்னை காப்பாற்றிய தன் மரியாதையை நிலை நிறுத்திய ஒரு ஆணிடம் பெண் தன்னை சமர்ப்பிப்பது போல. ஆன்ட்ரூ தன் காதலை தெரிவித்ததும் அவள் அதனை தன் காலமில்லாத காதலாக உணர்கிறாள். ஆன்ட்ரூ வெளிநாடு சென்று ஒரு வருடத்தில் வருவதாகவும் அவர்களின் நிச்சயதார்த்தம் ரகசியம் , அவள் அவனுக்காக காத்திருக்க வேண்டாம் , இன்னொரு ஆணை இந்த இடைவெளியில் விரும்பினால் அவனையே விவாகம் செய்துகொள்ளலாம் என்றும் கூறி செல்கிறான். அந்த காலமில்லா காதலினால் தான் காத்திருப்பதாக நட்டாஷா அவனிடன் நம்பிக்கை கூறுகிறாள். ஆனால் அது சாத்தியமா என்பதில் அவளுக்கும் சந்தேகம் இருந்திருக்கும்.

ஆன்ட்ரூ கூறிய காலத்தில் வராததால் அவள் வருத்தத்தில் இருக்கிறாள் (இந்த அத்தியாயத்தை டால்ஸ்டாய் "நட்டாஷாவின் காதல் ஏக்கம்" என்றே தலைப்பிடுகிறார்) அனடோல் தன் அழகை பூஜிப்பதும் , தன் காதலை ஏற்றுக்கொள்ளுமாறும் கெஞ்சுகிறான். அவன் அழகில் அந்த சபலத்தில் அவர்கள் இருவரும் முத்தமிடுகின்றனர். தான் தவறு இழைத்ததுபோல குற்றவுணர்ச்சி அடைகிறாள். பின் அது தவறில்லை என்று தன்னை நம்பவைத்துக்கொண்டாள்.

இந்த நிலையில் அனடோலுடன் விவாகம் செய்து கொண்டு வெளி நாடு செல்ல முயன்று கடைசி தருணத்தில் அது இல்லாமலாகிறது. அவமானம் ,  குற்றவுணர்ச்சியில் விஷம் குடிக்கிறாள். ஆன்ட்ரூவுடனான அவள் உருவகித்த காலமில்லா காதல் அவளை வதைக்கிறது. தன் மகிழ்ச்சியனைத்தும் இழந்த நிலையில் சாவின் விளிம்பிற்கு செல்கிறாள். .
பியர் அவளின் மாஸ்கோ வீட்டில் அவளிடம் "நீ பரிசுத்தமானவள் , களங்கமற்றவள். நான் விவாகம் செய்யாமல் இருந்திருந்தால் உன்னை" என்று அதனை முடிக்காமல் நிறுத்தி வெளியேறிவிடுகிறான். அதன் பிறகே அவள் சரியாகிவருகிறாள். அவள் எதிர்பார்த்தது ஆன்ட்ரூவின் மன்னிப்பு ஆனால் பியரின் அந்த வார்த்தைகள் மற்றும் அவனின் காதல் அவளை மீண்டும் உயிர்பெற்றெள செய்கிறது.

மாஸ்கோ எரிக்கப்பட்ட பின்பு ராஸ்டோவ்கள் அதனை விட்டு செல்கையில். காயமடைந்த இனி பிழைபதற்கில்லாத நிலைமையில் ஆன்ட்ரூ அவளுடன் பயணம் செய்கிறான். அவள் அவன் இருக்கும் இடத்தை அறிந்து அவனை தேற்ற முயற்சிக்கிறாள். அங்கும் அவள் அவனுக்கு ஒளியின் வடிவமாகவே தெரிகிறாள். ஆன்ட்ரூ இறந்த பின்பு தனக்கு காதல் அன்பு என்பது இனிமேல் இல்லை என்று உணர்கிறாள்.

நட்டாஷா குற்றமும் தண்டனையும் சோனியா போல ஆகியிருக்கலாம் ஒரு வேளை ஆன்ட்ரூ படுக்கையைலேயே கிடந்திருந்தால். ஆனால் அவன் இறந்துவிட்டான். நட்டாஷாவின் வாழ்க்கை பிறகு இருக்கும் மகிழ்ச்சியில் நுழைகிறது. பியர் தன் காதலை போருக்கு பின் வெளிப்படுத்தியதும். அவனை விவாகம் செய்து கொள்கிறாள் , குழந்தைகள் பெறுகிறாள். தாதி வேண்டாம் என்று அவளே தாய்ப்பால் கொடுக்கிறாள் கணவன் வீட்டில் இல்லைவென்றால் தவிக்கிறாள். அவன் தன் கைக்குளேயே வைக்க நினைக்கிறாள். இவையனைத்தையும் செய்பவள் காதலில் நம்பிக்கையில்லாத , காதலை நம்பிய , பின் சபலப்பட்ட நட்டாஷாதான்.

நட்டாஷாவின் அம்மா நாவலின் இறுதியில் சொல்கிறாள் " எனக்கு முன்பே தெரியும் அவள் விவாகம் செய்துகொள்வாள். அவள் ஆசைப்பட்டது ஒரு கணவனையே". ஒரு ருஷ்ய பெண்ணின் மகிழ்ச்சியான வாழ்வு அதுவே நட்டாஷா ஆசைப்பட்டது.

மகிழ்ச்சியான் குடும்பங்களில் தேவதைகள் வாழ்கிறார்கள். நட்டாஷா அங்கு வாழ்ந்தாள் மகிழ்ச்சியாக!