Monday 28 December 2020

இருள்

தினமும் மாலை வீடு திரும்புகையில் வரும் குறுகுறுப்பு

காலையில் செய்து முடித்த அலுவல் வேலை 

அப்பா அம்மாவிற்கு வாங்கிய மாத்திரைகள்

அணைத்து இறுக்கும் மனைவி

மதியம் தின்ற பாறை துண்டு மீன்

அடிக்கும் உச்சி வெயில் 

குளிர்ந்தணைக்கு உச்சி நிலா

ஆடும் அணில் வால்

வெயிலில் காயும் நீர் காக்கை

கை கால் மூட்டு வலி

நிற்காமல் ஓடும் கடிகாரம்

செருப்பிலெழும் செம்புழுதி

அனைத்தையும் உண்டு விழுங்கும் குழந்தை 

உருவமற்று ஒரு முறையும் செதுக்கிய உருவத்துடன் மறுமுறையும் அலையும் மேகங்கள்

இவையனைத்தும் ஓர் இருண்ட அறையில் வடிவ பேதமற்று நிற்கையில் கைகொண்டு நான் அளைந்து எடுக்க ஒன்றுமில்லை

வெறும் இருள் தேவையற்ற பொருளற்ற இருள் அறிந்து கொள்ள முடியா இருள்

வெளிச்சம் வந்தது மீண்டும் காலையில் மேற்சொன்ன அனைத்தும் உயிர் பெற்றன அர்த்த பூஷ்டியுடன் 

Thursday 24 December 2020

தளிர்

 தளிர் பாதங்கள் நடந்து நடந்து தோய்ந்திருக்கின்றன.


பாலையின் வெம்மையில் அவை பிளவுண்டு மணல் புகுந்து தவிக்கின்றன


அவை நீர் நிறைந்த தடாகமொன்றை தேடியலையும் பாலைப்பாம்பென தடங்களுடன் ஊர்கின்றன 


முந்தெய காலத்து தளிர் பாதங்கள்.


எங்கு சென்றால் அந்த விடாய் தீர்ந்து குளிர்ந்து அந்த பிளவுகள் மூடுமென அவனுக்கும் தெரியவில்லை


பாதைகள் சிக்குண்டு கிடக்கின்றன


நெடுந்தொலைவில் தெரிந்த பொன் கூடாரத்தை நோக்கி நடந்தன தளிர் பாதங்கள்


விடாய் தீரும் எத்தனிப்பில் நடை ஓட்டமாக பாதங்கள் புடதியில் மணலை வாரியடித்தன


வழியில் முன்பே எரிந்து கருத்த எலும்புகளின் நுனிகள் பதைப்பைக்கொடுத்தன


இப்பொழுது மிக அருகில் தெரிந்தது உயர்ந்த பொன் கூடாரமான நெருப்பு நா


நாவின் இரட்டை பிளவுகள் ஆசைந்து துடித்து கொஞ்சலுடன் அழைத்தன அவன் பெயர் சொல்லி


"மண்ணில்  மரியாளின் உதிரத்தில் விந்துவேறி பிறந்த என் மகனே வா என்னருகில்...."


நிற்காமல் ஓடி மறுபக்கம் வருகையில் முழு நிர்வாணமாக நின்றான்.


அந்த தடாகம் இன்னும் வெகு தூரத்தில் விடாய் தீர்க்க அவன் வருவானென எண்ணி கண்ணீர் வடித்தது.