Friday 29 October 2021

ஒரு கதை - சிறுகதை

ஜான் சர்ச்சுக்கு செல்லும் வழியை அந்த குளிர்ந்த தட்டையான் கற்கள் இடைவெளியற்று பதிக்கப்பட்ட நடைபாதையில் நடந்தவாறு அவனைக்கடந்து சென்ற ஒவ்வரிடமும் கேட்டு இடுங்கிய விரிந்த பாதையில் வலதும் இடமும் திரும்பி நடந்து சர்ச்சுக்கு வந்து சேர்ந்த போது மாலைச்சூரியன் அதன் மஞ்சள் படலத்தை தட்டையான கற்கோபுரத்தில் உருவாக்கியிருந்தது. அதில் பதிக்கப்பட்டிருந்த கண்ணாடி சாரளம் எதிர் சூரியனாக பிரதிபலித்தது. 


சர்ச்சைச்சுற்றி இருந்த பசும் புற்கள் நிரம்பிய கல்லறைகளில் பெரிதும் சிறிதுமாக கற்பலைகள் நிறுத்தப்பட்டு பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. அவன் கண்களை இறுக்க மூடி உள்ளெ செய்ய வேண்டியவற்றை ஒருமுறை தனக்குள் நிகழ்த்திக்கொண்டான். தான் செய்ய போவது யாருக்கும் தெரியக்கூடாது என்பதில் தெளிவாக பெரிய கருத்த மேல்கோட்டை இறுக்கி அணைத்து தன்னை தனக்குள் மறைத்துக்கொண்டான். 


மென் ஒளி நிரம்பிய கூடத்தினுள் புகுந்து அவனெதிரில் இடது , வலது மற்றும் மேலே கயிற்றால் கட்டி தொங்கவிடப்பட்ட சிலுவையில் ஏசு மாட்டிக்கொண்டிருந்தார். கீழே வலப்புற மூலையில் பாவ மன்னிப்பு தரும் பெட்டி போன்ற அறை தனியாக இருந்தது. 


ஆட்களற்ற கூடத்தில் மெழுகுவர்த்தி சுடர் அசைவுகள் பேசிக்கொண்டன. அதன் முன்னிருந்த பொன்னிற மேரி மாதாவின் கைகளில் குழந்தை ஏசு நிதானமான சிந்தனை ஒன்றில் லயித்திருந்தார். அங்கே சில நொடிகள் அவன் நின்றுவிட்டு பாவ மன்னிப்பு தரும் அறையினருகில் இருந்த பெஞ்சில் அமர்ந்து வழுவழுப்பான மரத்தரையை தலைகுனிந்து பார்த்துக்கொண்டிருந்தான். கூரையில் பறவைகளின் பழைய கூடுகள் தெரிந்தன. ஏசுவின் சிலுவைப்பாடுகள் வரையப்பட்ட கண்ணாடி சாளரங்கள் வழி வெளிச்சம் சாய்வான ஏணியைபோல தரையோடு சாய்ந்து நின்றன. நீண்ட வரிசையாக பெரிதும் சிறிதுமான குழாய்கள் கொண்ட பைப் ஆர்கன் துடைக்கப்ப்ட்டு சுத்தமாக இருந்தது. 


கைகளை பிசைந்தவாறு சாரளம் வழி வந்த ஒளியை நிமிர்ந்து பார்த்தான். அடர்ந்து வளர்ந்த தலைமுடி கற்றையொன்று முகத்தில் படிந்துபோயிருந்தது. உதடுகள் பிரார்த்தனை செய்வது போல  முணுமுணுத்தன. யாரும் தான் இங்கிருப்பதை கவனிக்கவில்லை என்பதை உணர்ந்ததும் எழுந்து ஓடிவிடலாமென்று எழுந்தான். அதற்குள் பாதிரியார் சாதாரண சட்டையும் பேண்டும் அணிந்து கட்டையாக வெட்டப்பட்ட பொன்னிற தலை முடியுடன் சர்ச்சுக்குள் வந்தது சரியாக இருக்கவும் தன் உடலை சாதாரணமாக்கி அதே பெஞ்சில் அமர்ந்து கொண்டான்.   


பாதிரியார் உள்ளெ சென்று நீண்ட வெள்ளை அங்கி அணிந்து கைகளை இரு பக்கமும் விரித்து உடையை சரி செய்யவும் , சிறகு முளைத்த பறவை போலிருந்தார்.


அவனருகே வந்து புன்னகையுடன் "உங்களுக்கு என்ன உதவி வேண்டும்? சாதாரண தினங்களில் இந்த நேரத்தில் மக்கள் வருவது குறைவு. இன்று குளிர் குறைவுதான். நீங்கள் இந்த கனத்த கோட்டை கழட்டிக்கொள்ளலாம்" 


"எனக்கு பாவ மன்னிப்பு வேண்டும்?"


"கண்டிப்பாக , கடவுள் எல்லோரையும் மன்னிப்பார். இதோ வருகிறேன்" என்று அங்கிருந்து நகர ஆரம்பித்தவர் நின்று "நீங்கள் கிறிஸ்துவை நம்புகிரீர்களா ?" என்றார்.


ஜான் பதில்சொல்லாமல் அமைதியாக இருக்கவும். அவர் மீண்டும் புன்னகைத்தவாறு அங்கிருந்து சென்றார். அறை வெப்பமாக இருந்தாலும் அவனுக்கு குளிருவதைப்போல் இருந்தது. பற்கள் நடுங்குவதை முயற்சி செய்து நிப்பாட்டினான். 


"இங்கு வந்து உட்கார்ந்துகொள்ளுங்கள்" எனும் குரல் அந்த சவப்பெட்டி போன்ற அறையின் மறுபுறத்திலிருந்து வந்தது. அதன் சிறு துளைகள் வழி ஜானை பாதிரியாரால் தெளிவாக பார்க்க முடியும் ஆனால் அவனால் அவரை பார்க்க முடியாது. துளைகளின் முன் முகத்தை வைத்து மண்டி போட்டு அமரும்படி இருந்தது அந்த அமைப்பு. அவன் அமர்ந்த பின் பாதிரிதார் "உம்" என்றார். கண்களை மூடிக்கொண்டு கதை போன்ற ஒன்றை வேகமாக்ச்சொல்ல  ஆரம்பித்தான். 


*


நான் இந்த வடகோடி நாட்டிற்கு வருவதற்கு மூன்று வருடங்களுக்கு முன் ஒரு வார காலம் ஒரு மனிதனுடன் தனியாக இருக்க வேண்டிய கட்டாயம் உண்டானது. அதோர் வெப்ப மண்டல நாட்டின் தென் கோடியில் கடல் அலைகளின் துமி தெறிக்கும் ஜன்னல்கள் கொண்ட  தனிமை படுத்தப்படும் சுவர்கள் பெயர்ந்த வெளிர் பச்சை அறை. பெருந்தொற்று ஆரம்பிக்கும் முன் கோவில் சிலைகளை பார்க்கச்சென்ற நான் அவனுடன் அடைக்கப்பட்டேன். 


பார்வை மட்டுமே தாண்டும் இரும்பு கம்பிகளால் ஆன பெரிய ஜன்னல்களுக்கு இந்தப்பக்கம் நான் அமைதியாக அடுத்த நாவலுக்கான தகவல்களை இணையம் வழி சேர்த்துக்கொண்டிருந்தேன். அலறும் ஊளையிடும் சத்ததுடன் அவனை நானிறுந்த அறையினுள் பிடித்து மூவர் தள்ளினர். வெண்மை அல்லது சிவப்பு என்பதை முற்றிலும் அறியாத கருந்தோல். முப்பது வயதுக்குள்ளிருக்கும். மொட்டையடிக்கப்பட்ட நீண்ட தலையில் ஒரு வாரத்திற்கான முடி இளம் புற்களென வளர்ந்திருந்தது. வளைந்த நீண்ட மூக்கும் பெரிய நீண்ட சலவைக்கல் போன்ற பற்கள் வாயிலிருந்து தென்னி எச்சில் வடிந்தது. உள்ளங்கையை இறுக்க மூடி எதையோ உடைக்கும் பாவனையில் ஆட்டிக்கொண்டிருந்தான். முதுகு வளைந்து கூன் விழ ஆரம்பித்திருந்தது.

கட்டமைப்பட்ட மொழியென்றறிய முடியாத சொற்களை திணறி கண்கள் வெளியே விழுந்துவிடும் வேகத்தில் இரைந்தான். ஒரு கணம் என்னைப்பார்த்து முறைத்ததும் நான் புன்னகைக்க முயன்றேன். என்னைக்கட்டிக்கொண்டு நிற்காத கண்ணீருடன் அழ ஆரம்பித்தான். புலம்பல் போல என்னிடம் சொல்லிக்கொண்டிருந்த வார்த்தைகள் எனக்கு புரியவில்லை. விலகி நின்று "என்ன விடச்சொல்லு" என்ற சொற்களின் ஒலிக்கேர்வை மட்டுமே புரிந்தது. கைகளை விரித்து புரியவில்லை என்றது அவனுக்கு புரிந்திருக்க வேண்டும் , திரும்பி அந்த அறையின் வாசலைப்பார்த்து அமர்ந்து கத்தி முடித்து அப்படியே கருவறை குழந்தை போன்ற முகத்துடன் சுருண்டு படுத்து தூங்கிப்போனான். மேரியின் கைகளிலிருக்கும் குழந்தை ஏசுவை நினைத்துக்கொண்டேன். 


சரியாக அவன் விட்ட மூச்சை மீண்டும் எடுக்க முடியாமல் பிணமாக எடுத்துச்செல்லப்படும் போது தூரமாய் நின்று உயிர் வெறும் ஓர் நீலப்பொட்டலமாக மாறிப்போனதை பார்த்துக்கொண்டிருந்தேன்.  நாங்கள் இருவரும் அங்கிருந்த நாட்களில் எனக்கு வேலையிருந்தது, அமைதியாக அமர்ந்து கற்பனை செய்ய ஏதுவான ஓர் வேலை. அவன் என்னிடம் பேச நினைத்தான். கடந்த காலத்தை , எதிர் கால கனவுகளை , வெற்றிகளை , தோல்விகளை , மரங்களை , பறவைகளை என்னிடம் சொல்லி சந்தோசப்படுத்தவும் சந்தோசப்படவும் முயன்றான். ஆங்கிலம் அவனுக்கு விளங்கவில்லை. நான் வாய் குவிப்பதை இமைக்காமல் கவனித்து புரிந்து கொள்வது போல தலையாட்டி மீண்டும் அவன் கதைகளை என்னிடம் சொல்ல ஆரம்பிப்பான். இது நாள் முழுவதும் நடந்தது. எனக்கு முடிக்க வேண்டிய வேலைகள் இருந்தன். அவனை ஒதுக்கினேன். முகம் கொடுக்காமல் மடிக்கணினியை பார்த்துக்கொண்டிருந்தேன். இரண்டாம் நாளுக்கு பிறகு அவன் என்னை புரிந்து கொண்டான். பேசாமல் ஜன்னலில் தெரியும் தென்னைமரமொன்றின் அசைவை பார்த்துக்கொண்டிருப்பான். 


நான் புன்னகைப்பதையும் நிறுத்திக்கொண்ட போது தள்ளித்தள்ளி அமர்வதையும் ஓர் அரவணைப்பாக எடுத்துக்கொண்டு என்னை பார்த்தக்கொண்டிருந்தான். நாளொன்றுக்கு நாற்பது தடவை என்னுடைய செல்போன் அலறிக்கொண்டிருக்க அச்சமயங்களில் கையை காதில் வைத்து சத்தமாக காற்றுடன் பேசிக்கொண்டிர்ந்தான். விளக்குள் அணைப்பதை அவன் விரும்பவில்லை. நான் விளக்கை அணைத்த பிறகு அவன் தூங்காமல் பயந்து விழித்தே கிடந்தது அடுத்த நாள் காலையில் கண்களில் தெரிந்தது


தவறுதலாக அறைக்குள் வந்துவிட்ட குஞ்சு வௌவாலைப்போல அந்த அறைக்குள் சுற்றிக்கொண்டேயிருந்தான் வெளியேறும் வழி தெரியாமல். சாப்பிடும் போதும் நான் தனியாகவே சாப்பிட்டேன்.  ஆறாவது நாள்  இரவன்று நான் தூங்கச்செல்லும் முன் என் கைகளிலிருந்த ஃபோன காட்டி "அம்மா அம்மா" என்றான். "மாமி , டு யூ வாண்ட் டு கால் யுவர் மாமி ?" என்றதற்கு "அம்மா அம்மா" என்றான். ஆனால் பேசவில்லை. அவன் கையை காதில் வைத்து என்னமோ பேச ஆரம்பித்தான். கண்ணீர் வழிந்தது. மீண்டும் ஜன்னல் பக்கம் போய் அந்த மரத்தை பார்த்தபடி அமர்ந்துவிட்டான். 


அடுத்த நாள் காலையில் நான் விழிக்கும் போது அன்னையின் அரவணைப்பில் குழந்தை தூங்குவதைப்போல அமைதியாக கிடந்தான். ஒற்றைக்கை காதில் ஃபோன் பேசும் பாவனையில் இருந்தது. நெஞ்சு ஏறி இறங்கவில்லை. உடல் அசைவின்றி உறைந்த ஏரியின் மேற்பரப்பை ஒத்திருந்தது. தொட்டுப்பார்த்தேன் தாங்க முடியாத குளிர்.



*


ஜானின் உடல் நடுங்கியது. அமர்ந்திருக்க முடியாமல் அப்படியே சரிந்து மரத்தரையில் தலை மோத விழுந்தான். பாதிரியார் அமைதியாக அவனை எழுப்பி உடகார வைத்து தட்டிக்கொடுத்து "இதில் நீங்கள் பாவமென்று எதும் செய்யவில்லையே ஜான். எதற்கு மன்னிப்பு ?" என்றார்


"செய்திருக்கிறேன். எனக்கு தண்டனை அல்லது மன்னிப்பு ஒரண்டிலொன்று வேண்டும்"


"இதையொரு பாவமாக நானும் ,  நீங்களும் கருதவில்லை அல்லவா?"


"இல்லை இது பாவம். அவனை அப்படியே விட்டுவிட்டது…."


"உங்களால் முடிந்ததை செய்திருக்கறீர்கள். இதில் நீங்கள் மகிழ்ச்சி கொள்ளவே வாய்ப்பிருக்கிறது. உங்களுக்கு தோன்றுவதே உங்களுக்கான பாவம் இல்லையா?" என்று ஜானின் கண்களை நோக்கி புன்னகைபடி தொடர்ந்தார் "ஒரு மனநோயாளிக்கு உங்களால் முடிந்ததை செய்திருக்கிறீர்கள்"


"செய்யக்கூடாததையும்"


"அவன் நோய்த்தொற்றால் இறந்தான். அதற்கு மேல் ஒன்றுமில்லை"


இருவரும் அமைதியாக கூடம் வெளிச்சம் குறைந்து வெற்றிடம் போல காட்சியளித்தது. 

மெழுகுவர்த்திகளும் அமைதியாக  வான் நோக்கி நின்றன.


பனி உடையும் சத்தம் போல ஜாம் பேச ஆரம்பித்தான் "நான் அவனை வைத்து ஓர் கதை எழுத நினைத்தேன். அவனைப்பார்த்த கணம் முதல் அவன் அடையாளங்கள கவனித்து ஓர் புனைவாக உருவாக்கிவிட எல்லா சாத்தியங்களையும் தயார் செய்து வைத்திருந்தேன். அவன் பிணம் என்னருகில் குளிர்ந்து கிடக்கும் போது நான் அதனை ஓர் உட்சபட்ச நாடகியத்தருணமாக கற்பனை செய்தேன். அதனை கண்டுகொண்டதற்காக பெருமையும் அடைந்தேன். வேறு யாருக்கும் கிடைக்காத அபூர்வமான தருணமல்லவா அது ? அந்த கதை இப்பொழுது வெளியாக பெரும் வரவேற்பை பெற்றது" என்றதும் ஜானின் கைகள் குளிரால் நடுங்க ஆரம்பித்தன. அவன் கைகளை பற்றிக்கொண்ட பாதிரியார் சிரித்தார். ஆனால் அவனுக்காக அனுதாபப்படவோ , சமாதானப்படுத்தவோ முயலவில்லை. 


அவர் எழுந்து பாவமன்னிப்பு அறைக்குள் சென்று அமர்ந்து கொண்டார். "வா , உன் பாவத்தை மீண்டும் இங்கிருந்து சொல். கடவுள் உன்னை மன்னிக்கட்டும்" என்றார். 


எதிர்ப்பு காட்டுவது போல எழுந்து "பாவத்தை தீர்மானிப்பதுதான் யார்?"


பாதிரியார் வாய்விட்டு சிரித்து "உங்களுக்கு என்னதான் வேண்டும்" என்றார்


"தெரியவில்லை" என்று விழித்தான். அழுதுவிடுவதைப்போல் இருந்தது அவன் முகம்.


ஜான் எழுந்து வேக வேகமாக சர்ச்சைவிட்டு வெளியேறினான். இரவு படர்ந்த சாலை அவனுக்காக மீண்டும் காத்திருந்தது. நாளை மீண்டும் வர வேண்டும் என நினைத்துக்கொண்டான்.


வீட்டின் படுக்கையறைக்குள் நுளைந்ததும் யாரோ தலையை கோடாரியால் பிளந்தது போல ஒரு காட்சி அவனுள் உருவானது. சர்ச்சில் மேரியின் கையிலிருந்த குழந்தை ஏசுவின் முக்ம் வேறொன்றாக இருந்தது.


நம்பிக்கை முற்றிலும் இழந்தவனாக மெத்தையில் படுத்து தூங்க முயற்சித்தான். அவன் கடவுளுக்கே பாவம் இழைத்திருக்கும் பட்சத்தில் கிடைக்கும் மன்னிப்பை நினைத்துக்கொண்டெ விழித்திருந்தான்.

Monday 11 October 2021

மயக்கு - சிறுகதை

 எனக்கு வெண்சிறுகுகள் மெல்ல முளைத்து வளர்ந்து நிலத்தின் மேலெழும்பி அப்பொழுதுதான் பறக்க ஆரம்பித்திருந்தேன். கால்களில் இருப்பை மறந்து அவற்றின் தனிமையையும் உணர்ந்து பறக்கையில் எனக்கு வருத்தமாக இருந்தது உண்மைதான். ஆனால் எதிர் காற்றிற்கு இறகுகள் மென் அலைகளென எழும்பி தழுவலாய் அடங்குகையில் நிலம் அதன் உண்மைத்தன்மையை இழந்து இன்னொன்றாய் மாறியது உச்சபட்சமான போதை தருவதாய் இருந்தது. நிலத்தில் பொருட்கள் அதன் தூல வடிவத்தை இழந்து பரிதாபகரமான பாவத்தை தன்னகத்தேயிருந்து வெளிக்கொண்டுவந்தது. என்னை தாங்க விரும்பாத இந்த நிலம் இத்துணை மொக்கை எனும் உணர்வு எனக்கு சிரிப்பாக இருந்தது.



மூளை வெடித்து சிதறிவிடும் என்ற கணத்தில் நான் கண்விழித்தும் ஆழுயர புற்களின் நடுவில் குளத்தின் ஆழத்தில் உறங்கிக்கிடக்கும் மீனைப்போல நினைவற்று நிமிர்ந்துகிடந்ததை ஆழ்ந்த பெருமூச்சொன்றுவிட்டு உணர்ந்தேன். கஞ்சா செய்த வேலை. நான் அப்பொழுது உறங்கியிருக்கவில்லை அதனால் கண்மூடி கிடக்கையில் மூளை தன்னால் இயன்றதை செய்திருக்கிறது. இருண்ட மேகமற்ற வானில் முகப்பருக்களென விண்மீன்கள் மினுங்கிக்கொண்டிருந்தன. உடல் வலுவுடன் இருந்ததை உணரவும் பசிக்க ஆரம்பித்ததும் எழுந்து நடந்தேன். வழிகள் தெரியாத நிலம் போல ஓர் வழியை உத்தேசித்து நடந்து சலித்து முன்னகர முயற்சிக்காமல் எம்பி குதித்து பார்க்கவும் கண்ணில்பட்ட ஓர் சிறிய ஓட்டுப்பணி விட்டின் திசையப்பார்த்து நடக்க ஆரம்பித்தேன். இடைக்கிடை குதித்து பார்த்து பாதையை சரிபார்த்துச்செல்லும் போது முன்பு கண்ட கறபனை இனிமையாக இருந்தது. சட்டை பேண்ட் பையில் தடவிப்பார்த்தும் கஞ்சா பிசுறுகள் கூட இல்லாதபட்சத்தில் வெறுமையுடன் அந்த வீடு நோக்கி நடந்தேன். காற்றில்லாமல் புளுக்கமாக உணர்ந்து சட்டையை கழட்டி இடுப்பில் கட்டிக்கொண்டதும் சுயநினைவு வந்தவனாக ராக்கோழிச்சத்தமும் சில்வண்டுகளின் சிறகடிப்பும் வெட்டுக்கிளிகளின் தாவலும் அந்த மங்கிய அமாவாசை ஒளியில் சத்தங்களாக மட்டுமே உணர முடிந்தது. 


புற்கள் சட்டையில்லாத மார்பில் தேய்த்து குருதிக்கோடுகளாக வெட்டிக்கிழித்தன. அந்த வீட்டு வாசலை அடையும் போது அங்கு மனிதர்கள் வாழ்கிறார்கள் என்பதற்கு அடையாளமாய் பழைய செருப்புகள் நிமிர்ந்தும் கவிழ்ந்தும் கிடந்ததன. வெளிச்சமில்லா உள்ளறையை ஜன்னல்கள் காட்டின. கதவை தட்டுவதற்கு முன் உள்ளெ ஜன்னல் வழி இரு கண்கள் மட்டும் தெரிந்தன. நான் விலகி திரும்பிக்கொண்டு கண்களை கசக்கி மீண்டும் பார்க்க ஜன்னலில் அந்த கண்கள் இல்லை. என் முன் நின்றது. சிவந்த அடர்ந்த தாடியில் மண் மடிந்து சடைபிடித்திருந்தது. நீலகருவிழியை சுற்றி செவ்வரிக்கோடுகள் நெளிந்தன. நீளமில்லாம்ல் சிரைக்கப்பட்டிருந்த தலைமுடியும் சிவப்பாக படிய வாரப்பட்டிருந்தது. அவன் சாம்பல் நிற மேல்கோட்டு கிழிந்து மண்ணிறத்தில் வெள்ளை உள்சட்டையுடன் தெரிந்தது. அவன் அங்குமிங்கும் பார்க்காமல் நேரடியாக என் கண்களை மட்டும் வெறித்தான். அவன் பேசுவான் என்பதே நம்பும்படியில்லை. உதடுகள் சாதாரணமாக பார்க்கக்கூட்டிய மாதிரியில்லாமல் தாடி மறைத்திருந்தது. நீண்ட கைகளை பேண்ட் பையில் நுளைத்தபடி நின்றான். நீண்ட விரிந்த நாசியின் கீழ் மீசை மயிர் அசைவதை வைத்தே அவன் உயிருடன் இருக்கிறான் என்பதை அடையாளம் காணமுடிந்தது. அவன் நின்ற தொனி அங்கே ஏன் வந்தாய் என்பது போல் இருக்கவும் நானே "சும்மா வார வழிக்கி வந்துட்டேன். வழி தப்பிட்டு" என்று சிரிக்க முயன்றேன். பீதியில் என் முகம் வெளுத்து கண்கள் விரிந்து தலை ஒரு பக்கமாக நடுங்கியது. 


அவன் "உள்ளெ வாருங்கள்" என்றதும் பயம் விலகி சிரிப்பு வந்தது. ஆனால் முகம் சிரிப்பை காட்டவில்லை. 


"இங்க ஒத்தைக்கா தாமசம்" எனும் போது நான் அங்கு பார்த்தது ஒரு பழைய நாற்காலி , பெஞ்ச் , வரைவதற்கான கேன்வாஸ் போர்டு , போர்டின் தலைமேல் தொங்கிய ஒற்றை சிம்மினி விளக்கு , ஆயில் கலர்கள் , சில அழுக்கடைந்த பிரஷ்கள் , வர்ணங்கள் குழைத்து காய்ந்து போன பேலட்."நீங்க வரைவீங்களொ" என்றதும் அவன் அந்த ஒற்றையறை வீட்டில் முன்னும் பின்னும் நடக்க ஆரம்பித்தான். அப்பொழுதுதான் கவனித்தேன் அவன் கைகள் இருக்க வேண்டிய இடம் சர்க்கார் ஆஸ்பத்தியில் கட்டப்படும் பேண்டேஜ் கட்டும் அதில் மஞ்சள் நிறத்தில் புண்ணும் மருந்தும் கலந்து புடைப்பாக இருந்தது. அந்த அறையில் பாதி அழுகிய பிணத்திலிருந்து கிளம்பும் வாடை அடித்தது. "சார் , என்னமோ மணமடிக்கே" என்றதற்கு அவன் பதில்சொல்லவில்லை. அவன் முகத்தில் சவக்களை படிந்திருந்திருப்பதாக நான் நினைக்கவும் என்னருகில் வந்து "இங்கு உட்கார்ந்து கொள்" என்று அந்த பழைய நாற்காலிய கண்களால் காட்டினான். அது போர்டிற்கு அருகில் வரைவதற்கு ஏதுவாக அமைந்திருந்தது. அப்பொழுதுதான் கவனித்தேன் அதில் ஏற்கனவே பாதி வரைந்து வைத்த ஓவியமொன்று அழுக்கும் தூசியும் அடைந்திருந்தது. 


"பாதிலையே நிக்கி. வரஞ்சி முடிக்கலையா?"


நடந்தவன் நின்று "இன்னும் வரைய வேண்டும். காலம் உதவவில்லை. நான் துரதிர்ஷ்டசாலி" 


"ஆளு இந்த ஊரு இல்ல போலியே"


"ஆமாம் ஸ்வீடன்"


"அது செரி , அடிச்சு விடும்வே. காசா பணமா"


"புரியவில்லை"


"உண்மையச்சொல்லும். எந்தூரு நீரு"


"ஊர்?" என்றவன் யோசித்து "சிக்டுனா"


"சிக்கனா?"


"இல்லை , சிக்டுனா"


"அப்பொ வெளி நாடுன்னு சொல்லு"


"ஆம் வடதுருவ நாடு"


"தமிழு ஒழுங்கா வராதோ?"


"வருகறதே"


"நான் பேசுத கணக்கா வராதா"


"தமிழா?"


"ஆமாடே"


"வரவில்லை"


"சாரமில்ல போட்டும். இங்க என்ன செய்யீரு. அதும் சுத்தி இடுகாடால இருக்கு"


"ஆமாம். அதுவே வசதியாக அமைந்துவிட்டது"


"சோறு திங்கதே இல்ல போல மூஞ்சிலாம் வெளுத்துபோச்சி"


"எனக்கு பசிப்பதில்லை"


"எனக்கு பசிக்கி , திங்க என்னமாம் இருக்கா?"


அவன் இல்லை என்பது புருவங்களை உயர்த்தி தலையசைத்தான். 


"எனக்கு உன் உதவி வேண்டும்"


"கடைக்கு போயி எதும் சாமானம் வாங்கிட்டு வரணுமா தொர?"  நான் துரை என்றதை  புன்னகையுடன் அனுமதித்தான்


"இதை நீ வரைந்து முடிக்க வேண்டும்" என்று அந்த பாதிவரைந்த ஓவியத்தை காட்டி "இங்கு ஆட்கள் வருவது குறைவு. நீ வந்தது நல்லதாக அமைந்தது. வா எழுந்திரு. அதை எடு" என்று தரையில் சிதறிக்கிடந்த பிரஷ்களை காண்பித்தான்


"ஆனா நீ ஆளு காலன் தொர. நானும் ஒரு பெயிண்டர்னு இந்த குண்டுவிழுந்த மூஞ்ச பாத்தே கண்டுபுடிச்சிட்ட"


"சீக்கிரம். நேரம் குறைவாக உள்ளது"


"வரஞ்சி மட்டும் என்னத்த சாதிக்க போற தொர. அமந்து இரியும்"


"நான் என் வாழ்நாளில் என் ஆன்மாவை கரைத்து வண்ணங்களாக்கி வரைய முயன்றது அதற்குள் இப்படியாகிவிட்டது"


"பயராதேயும். அதுக்கு முன்னால எனக்கு குடிக்க தண்ணியாவது எங்கருக்குண்ணு காட்டுவீரா?"


"இங்கெதுவுமில்லை. எல்லாம் செத்துவிட்டது"


"சவம் மாரி பேசாம ஒழுங்கா பேசு தொர"


"அந்த மூலையில் பானையிருக்கிறது. எடுத்துக்கொள்"


நான் போய் வந்து அமர்ந்தேன். அவன் என் கைகளை பார்த்து "பயனற்றவை ஆக்கிவிடாதெ" என்றான். கண்களில் குருதித்துளிகள் போல கண்ணீர் இரண்டு சொட்டு நிலத்தில் விழுந்து மறைந்து காணாமல் போனதும் "நிலம் உன் வெந்த குருதிக்குக்கூட காலம் குறைவாகவே கொடுக்கிறது"


"பினாத்தேயும் தொர"


"இதோ இங்கிருந்து ஆரம்பி" என்று அந்த ஓவியத்தில் வலது ஓர முனையில் தலையால் தட்டினான் 


நான் அந்த போர்டை தொட்டதும் தூசும் அழுக்கும் சிதை மேல் படிந்த சாம்பல் காற்றுக்கு பறப்பது போல அந்த பாதி ஓவியத்தை துல்லியமாக காட்டியது. 


"இங்ககையா தொர?" எனும் போது அவன் கண்கள் தூக்கில் இருக்கும் போது கைகளால் பிடிக்கப்பட்ட கயிறின் நம்பிக்கையுடனிருந்தது. 

என் கைகள் அந்த ஓவியத்தின் மேல் சரளமாக வழுக்கியது. பேலட்டில் வண்ணங்களை குளைத்து எடுக்கும் வேகம் எனக்கே ஆச்சரியமாக இருந்தது. மூலையிலிருந்து ஆரம்பித்து காட்டாறு கிடைத்த பாதைகளெல்லாம் உண்டு வளர்ந்து நீள்வது போல ஒவியம் வளர்ந்தது. அவன் அசைவற்று என் கைகளையே பார்த்துக்கொண்டிருந்தான். வலிக்க ஆரம்பித்த கையை எடுக்க நினைத்தும் முடியாமல் சன்னதம் வந்தது போல அது இயங்கிக்கொண்டிருந்தது. ஒருகணம் கண்களை மூடிக்கொண்டு கூட அதை என்னால் வரைய முடியும் போலிருந்தது. எவ்வளவு நேரம் சென்றிருக்கும் என்று அறியாமல் சென்ற காலம் ஓரிடத்தில் நின்றதும் என் கைகள் விடுபட்டு தொங்கின. 


"என்னவே மாயம் போட்டு விளையாடுகீரா. இந்த வீட்ட பாத்த உடனே எனக்கு உள்ள பயமுண்டு. ஆனா என்னமொ உன்ன பாத்ததும் ஒரு ஈர்ப்பு" 


அவன் சிரித்தான்.


நான் பதறி "கையி...கையி...எப்புடி உமக்கு கை மொளச்சுது." எனும் போது பயமிருந்தாதும் எழுந்து செல்ல மனமில்லை. அவன் முகம் சவக்களை நீங்கி உயிர்கொண்டிருந்தான்.


"நீ வரைந்தாய். வந்துவிட்டது" 


"தொர , நான் போட்டுமா. தல வலிக்கி"


"அங்கே பார்" என்று அந்த வீட்டின் இருண்ட பகுதியை காண்பித்தான். அங்கு அதே போல பாதி வரைந்த , வரையாத ஓவியங்கள் வரிசையாக நெருக்கி வைக்கப்பட்டிருந்தன. எனக்கு அவையனைத்தும் நெருக்கமானவையாக நான் ஏற்கனவே அறிந்தவையாக தோன்றியது. 


"என்னைய வச்சி என்னதா செய்ய உத்தேசம்"


"இதையனைத்தையும் நீ வரைய வேண்டும். உதவி செய்"


"கத கொள்ளாம். வயிறு பசிக்கே கொஞ்சம் எதாச்சும் கெடைக்குமான்னு பாத்தேன். உமக்க சோலிய எனக்க தலைல கட்டிராதேயும்"


"அவற்றை அருகில் சென்று பார் , பசியடங்கும்" என்று புன்னகைத்தான்


நான் எழுந்து விளக்கை எடுத்துக்கொண்டு ஒளியுடன் நடந்து அவற்றினருகில் சென்றேன். அவை நான் வரைந்தவை , பாதி விட்டவை என எல்லவற்றையும் என்னால் அடையாளம் காண முடிந்தது. விளக்கைத்திருப்பி சற்று முன்பு வரைந்த ஓவித்தை பார்த்தேன் அது பாதி வரைந்த நிலையிலேயே இருந்தது. பதற்றமாக வீட்டை சுற்றி ஒளியை விட்டேன் அவனை காணவில்லை. சலிப்பாக இருந்தது. விளக்கை தரையில் வைத்துவிட்டு கஞ்சா இருக்கிறதா என்று மீண்டும் சட்டை பேண்டில் துளாவினேன். சட்டையின் உள் பாக்கெட்டில் ஒரு பொட்டலம் கிடைத்தது. விளக்கை மாட்டிவிட்டு அந்த ஓவியத்தை பார்த்தவண்ணம் கண்டெடுத்த காகிதத்தில் உருட்டி பற்றவைத்தேன். அவனுருவம் நான் விட்ட புகைப்படலத்தில் துலங்கி வந்தது. அவன் என்னைப்போலவே இருந்தான். ஆனால் கைகளில்லை முகம் சவக்களையுடனிருந்தது. அதன்பிறகு எப்பொழுது உறங்கிப்போனேன் என்பது தெரியவில்லை.

Thursday 7 October 2021

அகவல் - சிறுகதை


கல்லூரியின் வாயிலில் வண்ணக்கொடிகள் காற்றில் படபடத்தபடி இருந்ததை பார்த்தவாறு நாங்கள் அங்கு நின்றிருந்தோம். முதலையின் வாய் போலவும் அதன் பற்கள் கொடிகள் போலவும் எனக்கு மட்டும் அந்த சமயத்தில் தோன்றியது முதல் நாள் கல்லூரிக்கு சென்ற நாளிலும் தோன்றியது. நாற்பது வயதில் இந்த கல்லூரியை விட்டு வெளிவந்து பதினெட்டு ஆண்டுகள் ஆகின்றன. பார்த்து சென்றதும் அதுவே கடைசி முறை. எங்களை வரவேற்க நின்ற மாணவர்களின் கண்களில் மகிழ்ச்சியும் ஏளனம் ஒருசேர தெரிவதாக எனக்கு தோன்றியதை நண்பர்கள் யாரும் அச்சமயம் ஒத்துக்கொள்ளவில்லை. முன் மண்டையில் ஒன்றுமில்லாமல் காதுகளை சுற்றி வளைத்து ஓர் வரைபடம் போல இருந்த காய்ந்த பயிர் போன்ற மயிரை தடவி விட்டுக்கொள்ளும் போது அந்த ஏளனப்பார்வையின் காரணம் புரிவதுபோலிருந்தது. நாங்கள் நடக்க ஆரம்பித்த பாதை நீண்டு சென்றது அதன் தொடக்கத்திலேயே அமர்ந்திருந்த பைத்தியம் போன்றிருந்த பிச்சைக்காரனின் முகம் பரிட்சயமாயிருந்தது. ஆம் அவரேதான். கல்லூரிக்கு எதிரில் டீக்கடை போட்டு பொளித்த மணியண்ணன். அந்த தாடிக்குள்ளும் கடைக்கு வருபவர்களை வரவேற்கும் அந்த சிரிப்பு ஒளிந்துகொள்ள முடியாமல் அடையாளம் காட்டியது. அவர் ஏன் அப்படியானார் என்பது தெரியவில்லை. ஆனால் கல்லூரி மாறியிருந்தது மட்டும் நம்பும்படி இருந்தது. அவர் கையில் நான் வைத்த ஐந்து ரூபாய் நாணயத்தின் மதிப்பை அவரால் உணரமுடியவில்லை. அதை வாயில் வைத்து சவைத்து சுவை பிடிக்காமல் மண்ணில் எறிந்துவிட்டார். 


எங்களை அது பாதித்தது ஆனால் அந்த அளவுக்கில்லை. "அது நம்ம மணியன்னன் தான?"


"ஆமா மச்சி அந்தாளுதான் , அந்த இளிப்பு தெரியலையா"


"உனக்கு முன்னாடியே தெரியுமா"


"தெரியும் , இங்க போன வருசம் வரும் போது அந்தாளொட வைஃப் இருந்தாங்க. என்னன்னு விசாரிக்க நேரமில்ல. வியாபாரம் போயி கடைசில இப்புடி ஆயிட்டாம்போல" என்று அவன் என்னைப்பார்த்தை பார்க்காதது போல தவிர்த்தேன். 


என் அமைதி அவர்களை தூண்டிவிட அனைத்து சாத்தியங்களையும் கொண்டிருந்தது. ஆனால் என்னால் அப்படி மட்டுமே இருக்க முடிந்தது. அவர்கள் என்னை சீண்ட நினைப்பது எனக்கு புரியாமலில்லை.


"உனக்க ஆள கடைசியா எப்போ பாத்த" என்ற கேள்வி கடைசியில் எனக்காய் வந்து விழுந்தது. அதற்கு அந்த சமயத்தில் பதில் சொல்லியாகவேண்டிய கட்டாயம் இல்லாத்தால் அந்த பாதை எங்களை கொண்டு சேர்த்த பழைய மாணவர்கள் கட்டிடத்தில் எங்களுக்காக ஒதுக்கப்பட்ட தரைத்தள அறையை விரும்பாமல் போய் சேர்ந்தோம். எங்கள் கல்லூரி அப்பொழுது இருந்ததைப்போல ஏறக்குறைய காட்டிற்குள்ளேயே இருந்தது. மான்கள் மயில்கள் அலைவதை விடுதியிலிருந்து காலையில் பார்க்கலாம். டிசம்பர் ஜனவரியில் பனியிறங்கி நிலத்தை மூடி ஒருவித போதை கொள்ளச்செய்யும். மயில்களில் அகவல் புணர்ச்சியின் கேவல் போல அந்த காலை நேரத்தில் ஒலிக்கும். அப்படியொரு காலையில் அங்கு வந்த ஆனந்தி என்னை கண்டு கொண்டாள். விளையாட்டு மைதானத்தின் மூலையில் மரங்கள் அடர்ந்த பகுதியில் பனி நீர் தாங்கி நிற்கும் இலைகளினடியில் மயிலின் கேவலில் மெய்யற்று இருக்கும் போது அவள் அங்கு வந்து சேர்ந்தாள்.


"குளுரலையா?" அவள் குரல் அதே மயிலின் அகவல் போல ஒலித்தது.


அங்கு யாரையும் நான் எதிர்பார்த்திருக்கவில்லை "இல்ல….சும்மா….இங்க நல்லாருக்கும்" குழறல் குரலில் சொன்ன போது காற்று சுழன்றடித்தலில் அவள் டென்னிஸுக்காக அணிந்திருந்த குட்டை ஆடை காற்றில் பறந்தது. அவள் குறுகி அதனை பிடித்துக்கொண்டே சிரித்தாள். என்னால் சிரிக்க முடியவில்லை. அன்று அதன் பிறகு கல்லூரி நாங்கள் நேரத்தில் பேசிக்கொள்ளவில்லை. 


பிறகு வந்த காலைப்பொழுதுகளில் அனேக நாட்களில் நான் அழைக்காமல் அவளே வந்தாள். அக்காலைகளை புதையல் போல என்னுள் யாருமறியாமல் நான் பதுக்கி வைத்துக்கொண்டேன். பொதுவாக கேள்விகள் இருப்பதில்லை அமைதியாக அமர்ந்திருப்போம். குளிர் காதையடைக்கும் உதடுகள் துடித்து நடுங்கும். சிரித்துக்கொள்வோம். அகவல் ஒன்றை தூரமாக கேட்டதும் பனி படர்ந்த தலையை தட்டிக்கொண்டே இருவரும் தனித்தனியாக செல்வோம். 


அன்றும் அப்படியே சென்றிருக்கலாம். ஆனால் நானோ அவளோ அந்த மயிலின் ஆகவலோ அப்படிச்செய்ய அனுமதிக்கவில்லை. எதையும் பகிர்ந்து கொள்ளாத நாங்கள் இருவரும் அதை மட்டும் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தோம். அன்றிலிருந்து. கேள்விகள்ற்ற புணர்தலில் மிச்சமிருப்பது அதன் இன்பம் மட்டுமே. நான் இன்புற்றேன். அவளும். ஆனால் அங்கு கேள்வி முளைத்தது. சாதரணமான கேள்விபோல நினைத்து கேட்கப்பட்டது அசுரத்தனமான விளைவுகளை அவளிடம் உருவாக்கியது "என்னை ஏன் பிடிச்சிருக்கு" என்ற போது அவள் என் மேல் அமர்ந்த நிலையில் இயங்க என் முதுகு புற்களில் படிந்த குளிரை உணர்ந்து சிலிர்த்து வளைந்து எழுந்தது. அவள் அசைவை நிறுத்தி மெல்ல இறங்கி உடைகளை அணிந்துகொள்ள ஆரம்பித்தாள். நான் அமைதியாக அவள் முகத்தையே பார்த்தபடி என்னுடையைதை அணிந்துகொண்டேன். என்றும் இனிமையாக நீர் நிறைந்து  இருக்கும் கண்கள் சுருங்கி யோசனைக்கான பாவனையில் எங்கோ பார்வையை நிறுத்தி நின்றது. வெயில் உறைக்க ஆரம்பிக்கும் கணத்தில் அவள் "எனக்கு தெரியல" எனும் போது கண்கள் இன்னும் கூர்மையாக அந்த பாவனையில் ஈடுபட்டன. எழுந்து சென்றுவிட்டாள். அதன் பிறகு அவள் காலைப்பொழுதை என்னுடன் களிக்க வரவில்லை. 


அவள் ஓர் கடிதம் போன்ற ஒன்றை எழுதி என் கையில் கல்லூரி சமயத்தில் கொடுத்தாள். அதனை மற்றவர்களும் பார்த்திருக்க வாய்ப்பிருந்தது. அப்பொழுதே அதை வாசிக்காமல் நான்காக எட்டாக பதினாறாக மடித்து ஒளித்து எடுக்க முடியாதபடி பேண்ட் பாக்கெட்டுக்குக் வைத்து விடுதிக்கு சென்றேன். அன்றிலிருந்து நண்பர்கள் அவளை என்னுடன் சேர்த்து வைத்து பேச ஆரம்பித்தனர்.


அதில் அவள் என்னை ஏன் பிடிக்கவில்லை என்று மட்டும் குறிப்பிட்டு இனிமேல் வரப்போவதில்லை என்றும் எழுதியிருந்தாள். 


"அந்த கேள்வியை நீ கேட்காமல் இருந்திருக்கலாம். உன்னை விரும்ப எனக்கு காரணங்கள் இல்லை. ஆனால் வெறுக்க காரணங்கள் நிறைய கைவசம் வந்தன. உன் முகம் உடல் கண்கள் தோளில் புடைத்த எலும்புகள் , தனிமை , அமைதி என எல்லாம் வெறுமையை , வெறுப்பை உண்டாக்கின. நான் இந்த அளவுக்கு உன்னை வெறுத்திருக்கிறேன் என்பது எனக்கே வினோதமாக இருந்தது. நீ அந்த கேள்வியை கேட்காமல் இருந்திருக்கலாம்". நான் தினம் காலையில் மைதானத்தை தாண்டி செல்வதும் நின்று போனது.


அதன் பிறகு நான் அவளை பார்க்கும் போது கார்த்திக்கின் கைகள் அவள் கைகளுக்குள் பாம்புகளைப்போல பிணைந்திருந்தன. அவளை நான் துளிகூட வெறுக்கவில்லை. அவள் அழுது புலம்ப என்னிடம் வரவேண்டுமென எதிர்பார்த்தேன். ஆனால் வரவில்லை. கற்பனையில் அவள் கண்களை துடைத்தபடி ஆழ்ந்த மயக்கத்தில் என் கால்களுக்கிடையில் கை சென்றது. நான் எண்ணியிருக்கவில்லை. கார்த்திக்குடனும் அவள் சேர்ந்திருக்கவில்லை. அந்த நான்கு வருடங்களில் இன்னும் இன்னும் என ஆண்கள் அவளுடன் அலைந்தனர். தூரத்திலிருந்து அவளை பார்ப்பதுடன் நான் விலகியிருந்தேன். என் நண்பர்கள் என்னுடன் வைத்து பேசியதை நிறுத்தி அதை மறந்தே போயினர். 


கல்லூரியின் இறுதியாண்டில் பிறகு எனக்கு வழியொன்றும் தெரியாமல்  பெண்கள் விடுதியில் மின் கம்பத்தின் கீழிருந்த சுவரில் கால்கள் விரித்து படுத்து கிடக்கும்படி வரைந்து பாகம் குறித்து தேவிடியாள் என்று அடையாளப்படுத்தி செல்லும் போது தூரமாய் அடி மரக்கிளையில் தெரிந்த இரு கண்கள் செம்புள்ளிகளென என்னை வெறித்தன. மின் கம்பத்தின் கீழ் ஓர் எறும்பைப்போல அங்கிருந்து விலகிச்செல்லும்போது அதன் அகவல் ஒலித்தது. 


அவளை அதன் பிறகு மொத்த கல்லூரியும் ஒற்றை மனித உடல் போல  தேவிடியாள் என்றது. அவளைப்பற்றிய பேச்சை நான் எங்கும் உணர்ந்தேன். கழிவறையில் அமர்ந்திருந்த இருவர் அதைப்பற்றி பேசுகையில் எனக்கு கடைசியாக அவள் என்னிடம் வந்துவிடுவாள் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் கல்லூரி முடியும் முன் அவள் மணியண்ணனுடன் சென்று விட்டாள். கல்லூரியை விட்டு சென்ற பிறகு அவளை நான் மறக்காமல் எங்கோ ஓர் அடியாளத்தில் ஒளித்து வைத்திருந்தேன். 


விழா முடிந்து கிளம்பும் போது நான் வரைந்து வைத்த சுவர் கண்ணில் பட்டது அது இன்னும் அழியாமல் அதன் தடங்களை தங்கவைத்து பதிந்திருந்தது. அது என் பிரம்மையாகக்கூட இருக்கலாம். ஆனால் அவளை போன மாதம் ஓர் விடுதியில் இன்னொரு ஆணுடன் பார்த்த போது அவள் அப்பொழுதாவது என்னிடம் வந்து அழுவாளென எதிர்பார்த்தேன். என்னை அவளுக்கு ஞாபகம் கூட இருந்ததாக தெரியவில்லை. அந்த சமயத்தில் அந்த மயலின் கேவல் மண்டைக்குள் ஒலித்தது. நான் காத்திருக்கிறேன். 

Sunday 3 October 2021

அமிர்தம் - சிறுகதை

நான் இன்று மாலை நடை சென்றிருக்கக்கூடாது. சிவந்த சூரியன் அழகர் மலையின் பின் பதுங்கி நின்று சாத்தானின் உதடுகளுடன் சிரித்ததை நான் உண்மையாகவே தவிர்த்திருக்கலாம். ஆனால் இந்த காலம் என்னை அங்கு கொண்டு சென்று சேர்த்துவிட்டது. இப்பொழுது எனக்கு தேவை உடனடியான மூளை அறுவை சிகிச்சை. அதன் மூலம் நான் கடந்த காலத்தை முற்றிலுமாக மறக்கடித்துவிடலாம் என்பதை முன்பே அறிந்திருந்தேன். சுவர்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டி வரிசையாக இருபக்கங்களிலும் இருந்த சின்னச்சின்ன வீடுகளின் வாசலில் பெண்கள் அமர்ந்து என்ன கதைகளையெல்லாமோ வாய் வலி தெரியாமல் பேசிக்கொண்டிருந்தனர். அவர்களின் முகம் ஒரே கணத்தில் நவரசங்களையும் புரியும் என்பது எனக்கு வியப்பாகவே இருந்தது. தினமும் காணும் ஓர் காட்சி தினமும் நம்மை குஷிப்படுத்தும் என்பதை நான் அங்கேயே கண்டேன். அந்த குழந்தைகள் அவை ஏன் அப்படி இருக்கவேண்டும்.


******


எங்களுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்திருந்தது. பெரிய கண்களை விரித்து இமை மூடாமல் சுற்றும் ஃபேனை பார்த்துக்கொண்டு கழுத்தின் வழி பால் வழிவது தெரியாமல் வாயால் சப்புக்கொட்டிக்கொண்டிருக்கும். அதன் கண்களில் ஒளிவட்டம் தெரிவதாக பக்கத்துவீட்டு அம்மா சொன்னாள். அவள் தெய்வத்துடன் பேசுவதாக என் மனைவியும் ஒத்துக்கொண்டதால் நானும் அதனி ஒத்துக்கொள்ள நேர்ந்தது. ஆனால் உண்மையாகவே அவன் கண்களி ஒளிவட்டம் தெரிந்தது. எனக்குள் சொல்லிக்கொண்டேன் “தெய்வக்குழந்தை”.என் மனைவி அவனுக்கு பெயர் தெரிவு செய்துகொண்டிருந்தாள். ஆதியும் அந்தமும் அற்ற சிவனுக்கு வைப்பதைவிட அதிக பெயர்களை வசம் வைத்து அதிலொன்றை தேர்வு செய்யும் இலகுவான வேலைடை எனக்குக்கொடுத்து ஒதுங்கிக்கொண்டாள். அப்பொழுது அவனுக்கு ஒருமாதம் முடிந்திருக்கவில்லை. அவனைத்தவிர மற்ற உயிர்கள் இல்லை என்ற உணர்வுடனேயே அவன் முன்பிருந்த உலகிலிருந்து வெளியே வந்து இப்பொழுதும் அதே நினைப்பிலிருந்தான். நாங்கள் நடப்பதும் அவன் முகத்தின் முன் எங்கள் பூதாகர முகத்திய காண்பிப்பதும் அவனை ஒன்றும் செய்யவில்லை. அவனுக்கான உலகில் அவன் ஓர் இசைக்கு இயங்க்குவது போல அழுவதும் உறங்குவதுமாக களித்தான். நாங்கள் வெறும் பணிவிடை செய்யும் இயந்திரங்களேன நினைத்துக்கொண்டான் போல.


******


அந்த மாலை இனிதாகவே ஆரம்பித்தது. குழந்தையை கைகளில் எடுத்து தலையைத்தாங்கி கால்களில் அமர்த்திக்கொண்டேன். அவன் என் விரலொன்றை பற்றிக்கொண்டான். அவன் சூட்டுடம்பு ஒருவிதமான போதை தருவதாக இருந்தது. அதில் பூமியிலிருந்து எடுத்து எதையும் கலக்கி உருவாக்காமல் வேறெங்கோ உருவாக்கிய மதுவொன்று வழிந்துகொண்டிருந்தது. அதனை சூடாக நான் உணர்ந்து கனிந்திருந்த கணத்தில் செந்நீலம் நிறைந்த வானில் சிறகின்றி தென்றல் மட்டும் வீச பறந்துகொண்டிருக்கையில் மேகங்களுக்கிடையில் ஒளிந்த திறப்பொன்றில் தொற்றிக்கொள்ள ஏதுவாக ஏணிபோன்ற அமைப்பொன்று நீண்டு கிடந்தது. அதில் தொற்றி ஏறி உள்நுளைந்து எழுகையில் முன் நின்ற அதியுயர வெண் தோரணவாயிலில் உச்சியில் என்னமோ எழுதியிருந்தது. ஆனால் அதனை உற்று அறிந்துகொள்ளும் முன் என் மனைவி அவனை எடுத்து அள்ளி அணைத்து என்னை அனியாயமாக அங்கிருந்து கீழிறக்கிவிட்ட்டாள். கோபமின்றி அவளுக்கு விடைசொல்லி வெளிவரும்போது வானம் நான் கண்ட அதே நிறத்திலிருந்தது என் அடிநாக்கில் அமிர்ந்தமாக இனித்தது. 


******


குழந்தை பிறக்கும் முன் நான் அவள் வயிற்றில் காதுவைக்கும் போது தவறாமல் தன் காதுகளின் இடத்தை சரியாக அறிந்து அதில் ஓர் உதைவிடுவான். “செரியான ஆளுதான் கேட்டியா” என்று மனைவியிடம் சொல்லும் போது அவள் உறங்கியிருந்தாள். இதனை இறக்கி வைத்தால் போதும் என்றிருந்தது அந்த பெண்ணுக்கு. மனம் திருந்தி குழந்தையாக சொன்னான் அவன். நான் மீண்டும் ஆக முடியாது ஆனால் குழந்தை ஒன்றுடன் வளரலாம் அது என்னை மனம் திரும்பியது போல் நடிக்கவைக்கும் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது. அதனால் அவனுடம் இன்னும் நெருக்கமாக என் வயிற்றினுள்ளூம் உணர்ந்தேன். அவன் துடிப்பதை ஒருமுறை மனைவியிடம் சொன்ன போது அவள் சிரிக்கவில்லை. என்னை ஓர் திருடனைப்போல பாவனையுடன் முகத்தை திருப்பிக்கொண்டு அந்த நாள் முழுவதும் பேசாமல் இருந்தாள். 


******


வானை வெறித்தவாறு எங்கள் தெருவை கடந்து சென்றேன். அடுத்த தெருவையும் கடந்து செல்லும் வழியில் தெரு மாற்றம் கண்டு ஒற்றையடி பாதையாக மாறியது. இருபக்கம் நாணற்புற்கள் என்னுயரத்திற்கு வளர்ந்து நின்றன. அதன் இருமுறமும் ஏரியின் நீ ததும்பி மென் அலைகளுடனும் அதன் சத்தத்துடமுன் வானை பிரதிபலித்து கிடந்தது. அந்த பாதை ஓர் பூங்க்காவின் வாசலில் போய் நின்றுவிட்டது. அதனுள் அரளியும் தெங்கும் நெட்டிலிங்கமும் பாதையின் இருபுறகும் வளர்ந்து நின்றது அங்கொன்றும் இங்கொன்றுமாய் மனிதர்கள் என்னமோ விளையாடியும் பேசியும் சிரித்தும் இருந்தது எனக்கு அப்போது மனதில் மதியவில்லை என்று நினைத்து முற்றிலும் தவறானது என்பதை இப்போது புரிந்துகொள்கிறேன். அங்குதான் அந்த குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர். மனம் திரும்பி நான் குழந்தையாக வேண்டுமா என்று நினைத்தும் அங்குதான்.


******


அவன் அதிகாலை மூன்று மணிக்கு பிறந்ததாக மருத்துவர்கள் சொன்னார்கள். அதில் என்றுமே நாம் நம்பச்சாத்தியமற்ற விசயமே அரங்கியிருக்கிறது. அவன் கைகளில் ஓர் எலிக்குஞ்சு போல் இருப்பதாக சொல்லியே அந்த நர்ஸ் சென்ற போது அவளை அறைந்து சென்னியை பேத்தாலென்ன என்றிருந்தது. ஆனால் அவன் மனித உயிர் போலில்லை என்பது அவன் அழுகையில் தெளிவாகவே தெரிந்தது. அழுகை நின்று அவன் என் கண்களை நேருக்கு நேர் பார்த்தான் வாய் ஒரமாக நெளிந்து சிரிப்பைபோன்ற ஓர் முகபாவனையை காட்டி அமைதியானான். அவனிடமிருந்து ஓர் கேள்வி வந்ததாகவே நான் அன்று எடுத்துக்கொண்டேன் “நான் உன்னை காப்பாற்ற வந்தவன். என்னில் நீ கரைவாயாக. செய்வாய் அல்லவா?”. அந்த கேள்விக்கு “ஆம்...ஆம்” என்று பதிலளிக்கும் போது அவ்வளவு சத்தமாக மற்றவர்களுக்கு கேட்டிருக்கும் என்று நான் நினைத்திருக்கவில்லை. அடுத்த அறையிலிருந்தவர்கள் “மண்டைக்கு வழியில்லாத கேசாருக்குமோ” என்றது கேட்கவும் அமையாக நாங்கள் இருந்த அறைக்குள் சென்று விட்டேன். அவளை ஸ்ட்ரச்சரில் வைத்து தள்ளிக்கொண்டு வந்ததும் “ஏன் இவ்வளவு சீக்கிரம் வந்தாய்” என்று கேட்க நினைத்து கேட்காமல் “வலிக்கா?” என்றதும் அவள் பதில்சொல்லாமல் கண்மூடி உறங்க முயன்றாள். அந்த சமயத்தில் குழந்தையின் முகத்தைக்கூட பார்க்கவில்லை. புண்ணியம் செய்யாதவள். தொட்டிலில் துணியை விரித்து அவனை கிடத்தும் முன் தூங்கிப்போய்விட்டான். அப்பொழுதும் என் நாக்கில் அமிர்ந்தம் இனித்தது. 


******


அந்த பூங்காவின் இடது மூலையில் நின்ற செம்பருத்டியின் பின்னால் ஐந்தாது சிறுவர்களின் தலைகள் தெரிந்தன.அவர்கள் மணலில் குத்தவைத்து வட்டமாக சுற்றி அமர்ந்திருந்தனர். பாம்புகளின் சத்தம் போலிருந்தது அவர்களின் பேச்சு. என்னால் நான் நின்ற இடத்திலிருந்து அவர்கள் பேசுவதை கேட்கமுடியவில்லை. மெல்ல அவர்களில் அருகில் சென்று அங்க்கிருந்த சாய்வு பெஞ்சில் அமர்ந்து எதிரில் தெரிந்த பூத்த பனையின் உச்சியை பார்த்து அமர்திருந்தாலும் காதுகள் அவர்கள் திசையிலிருந்தது.


“அவன கொன்றலாம் மக்கா” என்ற சிறுவனின் மழலை முதலில் விழுந்தது. நான் நகர்ந்து அவர்களருகில் செல்லாமல் சென்றேன்.


“கொல்லணும்….மண்டைல கல்ல போட்டு கண்ணு வெளீல வரணும்” என்றது இன்னொரு குரல்.


“நீ சொல்லு , உன்னையத்தான அடிச்சான்” 


“ஆமா அடிச்சான். இன்னா இங்கதான் ஆடிச்சான். வலிக்கி” என்று ஏனோ அழ ஆர்ரம்பித்தான்.


“பொட்ட மாரி அழாதலா” என்ற குரல் என்னை பயமுறுத்தியது


“இல்ல அழல” என்றவன் கண்களை சட்டையால் துடைத்துக்கொள்ளும் மொருமொருப்பு சத்தம் கேட்டது.


“இந்த கம்பு போதுமா” என்று கையில் எடுத்த குச்சியால் அடித்தால் வலிக்கும் என்பது கற்பனை கதைகளில் மட்டுமே நடக்கும். எனக்கு மூச்சை அடைப்பது போலிருந்தது. என் மகனை நினைத்துக்கொண்டேன். அவன் யார்? என்பது பயம் தரும் புரியாத கேள்வியாயிருந்தது இப்போது. எழுந்து சென்றுவிடமால் என்று நினைக்கும் கணம் அவர்களிலொருவன் என்ன கவனித்துவிட்டான். அவன் கண்கள் விரிந்து என்னைப்பார்த்தன. அது கடவுளால் படைக்கப்பட்ட நான் அறிந்த ஆனால் வெறுத்த ஒன்றைப்போல் இருந்தது. அழுகிய சிவந்த பழம் போல. கைகள் வியர்த்து பெஞ்சில் வழுக்கவும் நான் எழுந்து திரும்பிப்பார்க்காமல் சென்றுவிட்டேன். வானம் ரத்தச்சிவப்பாக மாறிக்கொண்டிருந்தது காற்று வேகமாக வீச என்னால் நடக்க முடியவில்லை. சீக்கிரம் சீக்கிரம் என்ற குரல் பின்னாலிருந்து தள்ளியது. ஓடினேன். 


தெருக்களைத்தாண்டி வீட்டை அடையும் போது மனைவி வாசலில் என்னமோ விற்றுக்கொண்டிருந்த ஒருத்தியிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்தாள். என்னைப்பார்த்ததும் “பிள்ள தனியாருக்கு” என்று மன்னிப்பை வேண்டுவது போலவும் அதே சமயம் கண்டிப்புடனும் சொன்னாள். ஆனால் அச்சமயம் எனக்கு அதெல்லாம் காதில் விழவில்லை. முன்னாலிருந்த அறைக்குள் அவன் தொட்டிலில் தொங்கிக்கொண்டிருந்தான். துணியை விலக்கிப்பார்க்க பயமாக இருந்தது, ஆனால் அதை தெரிந்து கொள்ளும் அவசரமும் என்னை நீரில் அமுக்கியது. பெருமூச்சொன்று விட்டுவிட்டு தொட்டிலைவிலக்கி பார்த்தேன். அதே அழுகிய சிவந்த கண்கள். உதடுகள் நெளிந்த சிரிப்பு. நடக்க முடியாததை நினைத்து அழ வேண்டும் போலிருந்தது. ஆனால் முடியவில்லை.  சேபா மெத்தையில் சாய்ந்து படுத்து உறங்க ஆரம்பிக்கும் கணம் நாக்கு கசந்தது அமிர்தம் என்பது உறைத்தது. 

Saturday 25 September 2021

ஒளிரும் கூழாங்கல் - சிறுகதை

மலையடிவார செக்போஸ்டில்  ஜீப் மறிக்கப்பட்டபோது முன் சீட்டில்  அமர்திருந்த கண்ணன் நெற்றியில் பெருகி வந்த வியர்வையை வடித்துவிட்டு ஜன்னலின் வெளியே  மலையின் உச்சியை பார்க்க முயன்றான். எழுந்து நின்ற மலையின் உச்சி தெரியாமல் சூரியனின் செஞ்சூட்டு கதிர்கள் முகத்தில் அறையவும் தலையை ஜீப்புக்குள் நுளைத்துக்கொண்டான். தோள் தொட்டு நெருங்கி அமர்ந்திருந்த  மெலிந்த சதையற்ற எலும்புக் கிழவர் பழுத்த உயிரற்ற கண்களை சுருக்கி "வெக்க என்னமா அடிக்கி செய்" என்று சட்டையை உதறி கழுத்துக்குள் காற்றடித்து அவனைப்பார்த்து சிரித்தார்.  வலப்பக்கமிருந்த பெண்ணிடம் பற்களில்லாமல் உள்பக்கமாய் மடிந்திருந்த உதடுகளை விரித்து என்னமோ சொல்ல வாய் திறக்கவும் அவளின் வெளித்தள்ளி முறைத்த கண்களைக் கண்டு மருண்டு வெளியே பார்ப்பதாய் பாவனை காட்டி அவளிடமிருந்து சற்றே விலகி அமர்ந்துகொண்டார்.


கண்ணன் பேருக்கு சிரித்து மீண்டும் வெளியே பார்க்க ஆரம்பித்தான்.  கிழவர் பேச்சுக்கொடுக்க நினைத்து "தம்பி நாரோயிலோ" என அவன் முகத்தையே பார்த்தபடியிருந்தார். அவன் "இல்ல வெளியூரு" என்றதும் "கள்ளம்…நாரோலியிலுன்னு மூஞ்சில எழுதி ஒட்டிருக்கே" என்று சிரித்தார். அதற்கு என்ன பதி செல்வதென தெரியாமல் வளைந்து மலையேறி செல்ல ஆரம்பித்த பாதையின் இருபுறமும் வளர்ந்திருந்த மரங்களை அவை காற்றில் உதிர்த்த நீள் இலைகளின் சுழிவை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். கிழவர் மறுபடியும் அந்த பெண்ணை இடித்தபடி நெருங்கி அமர்ந்து நெளிந்தார்.


உருளைக் கற்களை தரையில் போட்டு மேடு பள்ளமாக்கப்பட்ட சாலை வண்டியிலிருந்த அனைவரையும் குலுக்கியெடுத்து. சக்கரத்தில் பிதுங்கிய பொடிக்கற்கள் தெறித்து பக்கவாட்டு பள்ளத்தாக்கில் விழுந்து தடமின்றி மறைவதை தானே விழுவதாக கற்பனை செய்த போது அசைந்து கொடுத்த கிழவர் என்னமோ கேட்க கண்ணன் கண்மூடி பதில் சொல்லாமலிருக்கவும் அவர் அந்தக் குலுக்கத்திலும் எப்படியோ தூங்க முயல்வது போல கண்களை மூடிக்கொண்டார். சுழன்று மேலேறிச்சென்ற சாலை ஓரிடத்தில் சமதளமாகி நேராக ஓட ஆரம்பித்ததும் இருபக்கமும் அடுக்கி வைக்கப்பட்ட நெளியும் பச்சை ஆபரணமென தேயிலைச்செடிகள் வரிசையாக வெண் பனிக்குள் நீரில் அமிழ்ந்த நிலையிலிருந்தன. 


தேயிலையின் மருந்து வாடை வந்ததும்  மூச்சை நெஞ்சுக்குள் இழுத்துவிட்டதில் உடல் சமநிலைக்கு வந்து உயிர் மீண்டதைப்போலிருந்தது. சதைகள் அடித்துக்கொள்ளும் ஓர் ஒலி அவன் பார்த்துக்கொண்டிருந்த காட்சியிலிருந்து விலக்கியது. "கிழட்டுநாயே , வயசாச்சேன்னு கிட்ட அமுந்து இருந்தா நீ பாவாடைக்குள்ளா நோண்டுவியா" என்றவள் நிறுத்தாமல் செவிட்டில் மேலும் இரண்டடி அடித்து "எலும்பெடுத்த நாயி , தூக்கி பிடிச்சிட்டு வந்துட்டான் சவம்" என்றவள் அங்கு இடம் அமைத்துக் கொடுத்த ட்ரைவரையும் அடிக்க கை ஓங்கினாள். அதிலிருந்த பொறுமை அவனை தெரிந்தவனாய் காட்டியது. வண்டி முன்னோக்கிச்செல்ல செல்ல எதுவுமே நடக்காதது போன்ற பாவனையை எல்லாரும் ஏற்றுக்கொண்டு அமைதியாக இருந்தனர்.


குறுகிய கிளைகள் கொண்ட சில்வர் ஓக் மரத்தில் கொண்டை குருவியொன்று வந்தமர்ந்த வேகத்தில் பறந்து மற்றொன்றில் அமர்ந்து “க்ரீட்…க்ரீட்” என்றது.  அந்த பறவையை அவன் நண்பன் ஆனந்தன் முதல் முறை அங்கு வந்திருந்த போது  “பலவட்டற பறவ , ஒழுங்கா மனுசன் வெளிக்கி போக முடியுதா” என அடையாளப்படுத்தியிருந்தான். 


வண்டி நின்றதும் எல்லோரும் இறங்கி விட கிழவர் அவனை அணுகி பற்களில்லா வாயில் எச்சில் தெறிக்க குழறி "இதே அந்த ட்ரைவர் கை வைக்கட்டும் சத்தமில்லாம கண்ணு சொருகி கெடப்பா. தேவிடிச்சி. எனக்கிட்ட ஞாயம் பேச வந்துட்டா..தூ" என்று அவன் பதிலை எதிர்பார்க்காமல் கையிலிருந்த சாக்குடன் வளைந்த முதுகை தாங்கிப்பிடித்தபடி நடக்க ஆரம்பித்தார். 


கண்ணன் அமைதியாக ட்ரைவரிடம் “அக்காமேடு” என்றதும் வேண்டா வெறுப்பாக வண்டி முக்கி கரும்புகையிட்டு தார் சாலையிலியிருந்து மண் சாலையிலேறியது. அந்த சாலை முட்டி நின்ற இடத்தில் முழுதாய் வளர்ந்த தனித்த மிளா, கழுத்தில் சிலிர்த்து நின்ற சாம்பல்  மயிர்ப்பிசிறுடன், இலையென நரம்புகள் புடைத்த காதுகள் துடிதுடிக்க அவர்களை ஒரு முறை பார்த்துவிட்டு பின் கண்டுகொள்ளாமல் குறுவால் சுழல இடப்பக்க சரிவுக்குள் மறைந்தது. அவனை இறக்கிவிட்டு வண்டி சென்றதும் காட்டின் இரையும் அமைதியில் தனியாக நின்றான். வலப்பக்கமாய் மேலேறிச்சென்ற ஒற்றையடி மண் பாதையில் தனியாக நடக்க ஆரம்பித்தான். பாதையின் மேல் வளைந்து நின்ற இருபக்க மரக்கிளைகள் கவிந்து இறந்த விலங்கின் விலா எலும்புக்கூடு போலிருந்தது. மேலேறிச் செல்லச்செல்ல சுவாசம் தடைபட்டு உடலே இதயமென துடித்து மேற்கொண்டு நடக்கவிடாமல் தடுத்ததும் அங்கிருந்த கருத்த பெருங்கண் போன்ற குழிகொண்ட அடிமரத்தின் சாய்ந்துகொண்டான். பெருமூச்சுவிட்டு திரண்டு வந்த எச்சிலை துப்பி தலை தூக்கி பார்த்ததும் தெரிந்த மரப்புடைப்புகள் இரண்டும் , எதிரிலிருந்த நீண்ட கிளையொன்றை பார்த்து சிலிர்த்து நின்றது தெரிந்தது. அவை ஞாபகத்தட்டில் இடறிய ஓர் நினவை மேலே கொண்டு வந்தது. கண்களை மூடிக்கொண்டான்.


*


"கண்ணா , இந்தா மொலையும் கொலையுமா ஒண்ணு , எதுத்தால குஞ்ச புடிச்சிட்டு இன்னொண்ணு" என்று அந்த மரங்களை கருணா சுட்டிக்காட்டி இடுப்பில் கைவைத்து மூச்சு வாங்க நின்றான். மலை ஏறியதின் தடம் அவர்களின் ஒவ்வொருவரின் உடலில் தெளிவாகத் தெரிந்தது.


முலைகளெனன பெருத்து நின்ற மரத்தின் பொருமலில் ஆனந்தனும் , மாரியும் தொங்கினர் , எதிரேயிருந்த மரத்தின் கீழே புடைத்து நீண்டு நின்ற குறி போன்ற கிளையில் கருணா தொங்கி அதனை ஆட்டியபடி "இந்தா வாரார் ஐயப்பா , அந்தா வாரார் ஐயப்பா. ஆடி வாரார் ஐயப்பா.. , ஓடி வாரார் ஐயப்பா..." எனப் பற்களை காட்டி சிரித்தபடி பாடினான்.


ஈரம் தோய்ந்த வழுவழுப்பான பாதையில் நின்றிருந்த கண்ணன் இதனை பார்த்தபடி களைப்பு நீங்க சிரித்து , ஓரமாக அமர்ந்து தோள் பையை திறக்க ஆரம்பித்தான் "இங்கையே சோத்த தின்னுட்டு கெளம்பீறுவோம்" என்றதும் மற்றவர்கள் அவனருகில் வந்து அமர்ந்து கொண்டனர்.


"ரொம்ப நாளாவே இந்த மாரி ஷோ பத்தூட்டெ சாப்புடணும்னு ஆச" என்ற கருணா இரு மரங்களையும் பார்த்தபடி ஏற்கனவே பிசைந்து வைத்திருந்த சோற்றை வாயில் திணித்து "கருத்த குஞ்சொண்ணு குலுங்குது , குலுங்குது" என்று கைகளை மேலும் கீழும் ஆட்டியபடி பாடினான்.


ஆனந்தன் "பெருத்த மொல ரெண்டு குகுங்குது , குலுங்குது" என்றதும் மாரி எழுந்து நின்று அவன் மார்பில் கைகளை வைத்து உடலை குலுக்கி ஆடினான்.  


"எனக்கெல்லாம் சோறு திங்குத இடத்துலையே டெய்லி ஷோதான் நடக்கு. போர்வைய போத்தி படுத்துட்டு எங்க வீட்டு அடுக்களைல பாத்துட்டுத்தான் இருக்கேன். அடுப்புத் திண்டுக்குமேல சித்தியும் சித்தப்பாவும் உருண்டு நெளியத பாக்காம இப்பொல்லாம் ஒறக்கமே வாரதில்ல. அதுக்குன்னு டெய்லியுமா யம்மா!" என்று பெருமூச்சு விட்டான் ஆனந்தன்


"உனக்க அப்பனும் அம்மையும் செய்யதையும் ஒளிஞ்சி நிண்ணு பாக்க வேண்டியதான ?" மூச்சு வாங்கியபடி கத்திய கண்ணனின் பேச்சை மாற்ற "லேய் கண்ணா , நீதாம்ல கோம்பையனா இருக்க. மாரியெல்லாம் அதுல கரகண்ட்டுட்டான். போன வாரம் கூட ஒருத்திய சைக்கிள்ள வச்சு நம்ம காலேஜ் தெர்மல் லேபுக்கு பொறத்தால இருக்க முக்குக்குள்ள கூட்டிட்டு போனான் தெரியுமா?" என்றான் கருணா.


"நீ பாத்தியாக்கும் , சும்மா படம் போடத கேட்டியா" கண்ணனின் குரல் மாறியிருந்தது.


"அவன் முஞ்ச பாரு , வெக்கமாம். சீ" என்று கையில் கிடைத்த சிறு கல்லெடுத்து மாரியின் மேலெறிந்தான்.


"அதெல்லாம் சொகம்" என்று மாரி கண்களை மூடி "சொகங்கண்ட நாயிதான் எத்தன கடி பட்டாலும் பொட்டைக்கி பொறந்தால தெருத்தெருவா அலையுமாம்" என்றான்.


கண்ணனைத் தவிர அனைவரும் அதனை ஆமோதிப்பது வாயில் திணித்திருந்த பருக்கைகள் தெறிக்க சிரித்தபடி தலையாட்டினர். மாரி நாயைப்போல தலைதூக்கி அடித்தொண்டையில் ஊளையிட்டான்.


"பத்து பொட்டைக்கி பொறத்தால போனாலும் ஒரு ஓட்ட தானே. எழுவது ஓட்டையா இருக்கு ?" என்ற கண்ணனின் முகம் சுருங்கியிருந்தது


"வெப்ராளப்படாதடே , உனக்கு எங்கன , எந்த ஓட்டைல சொருவனும்னே தெரியாது. பொறவு இங்க என்ன வியாக்கியானம் பேச வந்துட்ட. போ , போயி அந்த மரத்த பாத்து கைல புடிச்சிட்டு வா" என இளித்தான் ஆனந்தன். அவர்கள் சிரித்த ஒலி காட்டின் ஒலிகளுக்கிடையில் இலையசைவென இயல்பாக ஒலிக்க கண்ணன் அமைதியாக தலை குனிந்தவாறு அந்த இரு மரங்களையும் ஓரக்கண்களால் பார்த்துக்கொண்டிருந்தான்.


தின்று முடித்து ஒருவருக்கொருவர்  பேசிச்சிரித்து மேடேறி நின்றதும் அவர்கள் கால்களினடியில் சுழன்ற கோரைப்புற்கள் ஈரம் தாங்கி காற்றின் இசைவுக்கு ஏற்றபடி சுழன்றாடடி , நெளிந்தலைந்தன. கீழே வளைகோடென நீண்டு கிடந்த நதியின் கரையில் ஒன்றிரண்டு வீடுகள் பறவையின் எச்சம் போல் ஒட்டியிருந்தன.


அதுவரை அமைதியாக வந்த கண்ணன் கருணாவை நெருங்கி "உண்மையாவே ஆனந்தன் நெறைய பிள்ளைகள ஓத்துட்டானா ?" என்றதும் கருணா சிரிப்பை அடக்கியபடி "அவன் கிழிச்சான். இப்புடிச்சொன்னா ஒரு இதுன்னு சொல்லிட்டு திரியான் சவம். பிள்ளைகள்ட பேசவே வழிகெடயாது நாயிக்கி , இதுல பெரிய மனுசம் மாரி பேச்சு பேசுகான்"


"அப்போ , நீ ஓத்துருக்கியா ?" என்ற கேள்விக்கு  கருணா வாய்திறக்காமல் உதட்டின் ஓரம் வளைய ஒற்றைப்புருவம் உயர்த்தி புன்னகைத்தான். 


கெண்டைச்சதைகள் வலியெடுக்க இறங்கிய பள்ளத்தாக்கில் தெளிந்து ஓடிய நதியின் கரையில் அவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த வீட்டில் போய்ச் சேர்ந்தவுடன் மற்றவர்கள் படுத்துவிட புடைத்து நின்ற பாறை முகடுகளின் முகம் மட்டும் உயர்த்தி மூச்சுவாங்க அனுமதித்த நதியின் கரை நோக்கி காரணமற்ற எக்கத்துடன் கண்ணன் நடந்தான்.


புற்கள் செறிந்த கரையில் முட்டுமடக்கி அமர்ந்து மலையின் விளிம்புகளை பார்த்தபடி இருக்கையில் இடுப்புவரை நீரில் முங்கி எதிர் கரையில் தனியாய் குளித்துக்கொண்டிருந்த பெண்ணை முதலில் ஓர் அடர்ந்த நிழலென , தன் கற்பனையென நினைத்து உற்றுப்பார்த்தான்.. 


அவள் மலைப்பெண்களை போல் கருப்பில்லாமல் சிவப்பாய் பெயர் தெரியாமல் முன்பு தின்ற பழத்தின் நடுப்பகுதியின் நிறமாயிருந்தாள். உடுத்தியிருந்த சேலையில் அப்படியே மூழ்கி ஒரு முறை எழுந்ததும் வெயில் அடையும் மஞ்சள் ஒளிக்கதிர்கள் அவளுடம்பில் படிந்த நீர்த்துளிகளில் தெறித்து சிதறி உருவாக்கியிருந்த மாயமொன்றை கண்டு நிலைதப்பி உடல் நடுங்க நின்றான். நேரடியாக இல்லாமல் மலைகளை கவனிப்பதைப்போல பாவனை செய்து ஒரு கணம் அவளைக் கண்டதும் திரும்பிக்கொண்டான்.


நீரில் இறங்கியதும்  மூச்சு முட்டுவது போல உணர்ந்தவன் , நீரில் மூழ்கி சுற்றியிருந்த நடுங்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் உயர்ந்த  உடலில் வெம்மையை தணிக்க முயன்றான்.  நீரின் குழுமை தறிகொட்டுப்போன எண்ணங்களை ஒரு புள்ளியில் குவித்தது. தலைக்கு மேல் முன்னும் பின்னும் உயர்ந்து  விளிம்புகளில் மஞ்சளும் உடலில் கருநீலமும் கொண்ட மலைகள் அவர்கள் இருவரையும் கண்டும் காணதாய் இருப்பதாக உணர்ந்து வெட்கி உடலைக் குறுக்கிக் கொண்டான். அவளும் அவன் எண்ணங்களை அறிந்தவள் போல நீரையள்ளி முகத்தில் தெறித்தும் வாயிலள்ளி பீச்சியும் விளையாடினாள். பொன் கதிர்கள் விலகி இருள் சூழ்ந்ததும் எந்த கணத்தில் என தெரியாத ஓர் கணத்தில் வானில் தாரகைகள் நிரம்பி சிமிட்டி அவர்களுக்கான விண் சமைத்தன. அவள் இருளிலும் அந்த பழம் போலவே ஒளிர்ந்தாள். கால்களுக்கடியில் பெரிய பல உருவ கூழாங்கற்கள் மேடு பள்ளங்களை உருவாக்கி அவனை சருக்கி விழ வைத்தன. அவள் அசையாமல் நதிக்குள் முளைத்த ஆணிவேர் ஆழம்வரை சென்ற மரமென அசையாமல் அங்கேயே நின்றாள். மெல்ல விழுந்து எழுந்து அவளருகில் செல்லலும்பொழுதுதான் தெரிந்தது நீரில் சலசலக்கும் சிரிப்பொலி எதற்கோ கொஞ்சி அனுமதி கொடுப்பதுபோல் இருப்பது. அவன் அவளருகில் சென்று புன்னகைக்க முயன்றான் ஆனால் வாய் கோணி இளிக்கவே முடிந்தது. அவள் புதிதாக ஒருவனை குளியலில் அரையாடையுடன் காணும் பாவனையின்றி சிரித்தாள். 


அவள் அவனருகில் கிசுகிசுக்கும் ஒலியில் "இங்க எதுக்கு வந்தது" என்றாள். 


அவன் குரல் திணறியது "இல்ல சும்மா ஃப்ரெண்ட்சோட வந்தோம். இ.பி ஆபிஸுல ஆள் பழக்கம் உண்டு" என்று ஒரு முறை வழிந்து சென்ற நீரில் மூழ்கினான். அதைப்பார்த்து அவள் வாய்விட்டு சிரித்தது காரணமில்லாமல் சிரிப்பதாக தோன்றியது. நீர் அவனை ஓர் உயிர் போல தழுவி தேற்றியது. உள்ளெ அவள் கால் விரல்கள் தனித்தனியாக பிரிவுகளுடன் தெளிவாக தெரிந்தன. அவ்விரல்கள் பெரியதொரு கல்லின் மேல் சுருங்கி மடிந்து இறுகி நின்றன. அதை தொட மனம் துடிக்கவும் என்னவோ தடுத்து நீரின் மேல் வந்தான். 


"உள்ள என்ன செஞ்சது" என்றாள் ஒருவித கிளர்ச்சியுடன். 


"நா… சும்மா மூச்சு பிடிச்சி பாத்தேன். எவ்வளவு நேரம் நிக்கலான்னு" என்று இளித்தான்.


"நான் நல்லா பிடிச்சி நிக்கும்" என்று பெருமையாக சொன்னாள். அக்கணம் அவள் சிறுமியாக தெரிந்ததை பின்பு பலமுறை நினைத்து மகிழ்ந்திருக்கிறான். ஆனால் அப்பொழுது அதனை அவன் கவனிக்கவேயில்லை. சொல்லப்போனால் இவை அனைத்துமே அவன் மீண்டும் எண்ணி எண்ணி உருவாக்கிக்கொண்டதாகக்கூட இருக்கலாம். 


மேகங்கள் முயங்கி இரண்டும் எழுப்பிய ஒலியில் வெண்ணிற கீற்றாக மின்னல்கள் அவர்கள் அருகில் நிலத்தை புணர்ந்தன. இருவரும் பயத்தில் நடுங்கினர். ஆனால் மழை பெய்யவில்லை. அவள் "பயந்துட்டேன்" என்றதும் தேற்றுவதைபோல வாயைக்குவித்து ஒண்ணுமில்லை என சைகையில் காட்டினான். அவளுக்கும் அது பயமில்லாமலாக்கியது என நம்பினான்.. 


அதற்கு அடுத்தநாள் அதே போல் அவனும் அவளும் காலம் மயங்கி இரவிற்கு வழிவிடும் நேரம் சந்தித்தனர். அவர்கள் நீரினுள் இருக்கையில் அவன் அவள் கைகளை பற்றிக்கொண்டான். அவள் தடுக்கவில்லை. இருவரும் சிரித்துக்கொண்டனர். நீரில் விண்பார்த்து விழித்து கிடக்க மேகம் மூடி நிலம் நனைத்து பொசுங்கியது. நதியில் கலக்கும் முன் சில துளிகளை தங்களுக்குள் வாங்கிக்கொண்டு அதன் சுவை குளிர் அடி நாவில் பட சிலிர்த்து விழுங்கினர்.


பெருமழை நதியில் கலந்து அதை ஒருவிதமான தன்னிலை அற்றதாய் ஆக்கிக்கொண்டிருந்தது. அனைத்தும் மறைந்து மழையின் கனத்த கால்கள் மட்டுமே தெரிந்தன. அவன் கரைமேலிருக்கும் புற்கள்  மேல் சாய அவள் அவனை அணைத்து தழுவிக்கொண்டாள். நீர்க்கோடுகள் உடல்களில் வழிய இருவரும் கற்கள் உரசி உருண்டு முயங்கி அங்கு நடந்து முடிந்த மாயமொன்றை உணர்ந்து நிமிர்ந்து கிடந்து நீர்த்துளிகளை மீண்டும் விழுங்கி சிரிக்க ஆரம்பித்தனர். பெருக்கெடுத்த நதியில் ஒற்றை கூழாங்கல் உலகின் மற்ற அனைத்தின் ஒளியையும் தன்னுள் கொண்டும் தணிந்து ஒற்றைக்கண் என ஒளிர்ந்தது. அவளை , அந்த தருணத்தை , மழையை , குளிரை முதுகில் , குறுகுறுக்கும் புல் நுனியை அந்த கூழாங்கல்லாக கற்பனை செய்தான். அவன் மனம் எதையோ அடைந்ததாக நினைத்து பொங்கி ஓடிக்கொண்டிருந்த செந்நிற ஆற்று நீரைப்போல் ஓடிக்கொண்டிருந்தது


*


வாயின் ஓரமாய் வழிந்த கோளையை துடைத்துக்கொண்டு எழும்பும் போது இருள் பரவ ஆரம்பித்திருந்தது. வரிசையாக நடப்பட்டிருந்த மின் கம்பங்கள் தனிமையில் உறைந்து நிற்க அதன் காலடியில் நீண்டு கிடைந்த ஒற்றையடிப்பாதையில் அவன் நடந்தான். மேகம் இறங்கி கைகளால் அதனை பிடித்து உருட்டி சட்டைக்குள் பொதிந்து வைத்துவிடலாம் என்பதைப்போல் அந்த பாதை முழுவதும் நிறைந்து கிடந்தது. பள்ளத்தாக்கின் சரிவைக்கடந்து இறங்கியதும் கற்களற்ற நதி சிமெண்ட் பாளத்தின் மேல் அழுக்கடைந்து  தன் தடத்தை விட்டு உள்ளிறங்கி வேறுருகொண்டு மெலிந்த பாம்பென ஊர்ந்தது. அவன் முன்பு நிமிர்ந்து கிடந்த புற் கரையை கண்டுபிடிக்க முயன்று கிடைக்காமல் அதுபோன்ற ஒன்றை கண்டடைந்து படுத்துக்கொண்டு விண்ணை நோக்கினான். மேகங்கள் விலக அந்நிலமும் வெளியும் மாயங்களின்றி வெகு சாதாரணாமாக நீண்டு கிடந்தது. மலையுச்சிகள் பொருளற்ற சிமெண்ட் சிற்பங்களைப்போல காட்சியளித்தன. அவனால் ஐந்து நிமிடங்களுக்கு மேல் அங்கு இருக்க முடியாமல் மீண்டும் வந்த வழிக்கே கிளம்ப ஆரம்பித்தான். 


மலையிறங்கி , வடசேரி சந்தைக்கருகில் ராஜேஷ் தியேட்டருக்குப்பின் இருந்த இடுங்கிய முடுக்கின் வழி நடக்கும் போது செருப்பின் வழி சாக்கடை தெறித்து அவன் பிடரியில் அடித்தது. முதலும் கடைசியுமாக இருந்த வீட்டின் கதவை தட்டவும். வெளுத்து மெலிந்த பெண் கையில் ஓர் குழந்தையை வைத்துக்கொண்டு வெளியே ஓட தயாராய் இருக்கும் சிறுவனை கால்களால் தடுத்தபடி நின்றாள். அவன் முகத்தில் வெறுமையை கண்டதும் அவளும் முகத்தில் அதை தரித்துக்கொண்டதும் சிறுவன் அவர்களை ஏமாற்றிவிட்டு காண்காணாமல் ஓடிவிட்டான். 


அன்றிரவு பிள்ளைகள் உறங்கியபின் வெம்மையான கட்டிலில் மின் விசிறிகள் அதிரும் ஒலிக்கடியில் புழுங்கிய நாற்றமெடுக்கும் அறையில் தன்னுடலை அவளுடலுடன் எதையோ செய்து எதையோ தேடிக்கண்டடையும் வேகத்தில் தேய்த்துக்கொண்டிருந்தான். உடல் தளர்ந்து வீழ்ந்ததும் இருவரும் எதிரெதிர்ப்பக்கமாய் திரும்பி படுத்துக்கொண்டனர். தினமும் செய்வதுபோல கண்களை மூடியபடி அந்த ஒளிர் கூழாங்கல்லை எண்ணங்களில் பரவ விட்டு மெல்ல குறியை வருடினான். காட்டின் குளிரின் நீரின் மழையின் முகமாய் அவள் முகம் திரண்டு விரிந்த கண்களில் கூழாங்கல்லின் ஒளி பிரதிபலித்தது. எல்லாம் முடிந்த பின் மனம் சற்றே நிம்மதியுடன் மகிழ்ந்திருந்ததில் சீரான முச்சுடன் உறங்கினான்.


ஆழ்ந்த உறக்கத்தில் முகத்தில் பட்ட மூச்சுக்காற்றால் கண்விழித்து எதிர்நோக்கியதில் தெரிந்த அவள் முகம் அவன் முன்பு நதியின் கரையில் கண்ட முகத்தில் சாயலின் மிச்சங்கள் அனைத்தையும் இழந்து வெறுமையுடன் ஒருபக்கமாய் சூம்பி கருத்துப்போன மாதுளை போலிருந்தது. அதன் பிறகான அன்றிரவில் உறக்கமின்றி விழிக்கும்படி “எங்கே அந்த கூழாங்கல்லை தவறவிட்டோம்” என்ற கேள்வி காதுக்குள் நுளைந்த சிறுபூச்சியென பெரும் சத்தம் கொடுத்து ஊர ஆரம்பித்தது. 

Friday 24 September 2021

புதிர் - சிறுகதை

 பார்வதிபுரம் சாணலின் குளிர்ந்த பச்சை நிற நீரில் மூழ்கியவாறு காதுகளில் அதன் சிறுமியின் கொலுசையொத்த சலங்கையொலியை கேட்டவாறு நீருக்குள் அமிழ்ந்திருந்தேன். தனிமையில் அந்த நீர் என்னை ஆற்றுப்படுத்தும். எண்ணங்களற்ற கேள்விகளற்ற குழந்தையொன்றைப்போல சாடி ஓடி நீந்தி குளிக்க அனுமதிக்கும். நீண்ட காரை பெயர்ந்த படித்துறையில் படிகளைத்தாண்டி நீரின் இழுப்பில் மூழ்காத நகராத இலையென அதன் மேல் மிதந்தேன். இருளில் கரைகளிலும் கவிந்த மரங்கள் பச்சையிளந்து கருத்து இலையசைத்து எனக்கு காதுகொடுத்தன. மரங்ககுக்கிடையில் தெரிந்த பாதி கடித்த வெண்மையில் சாம்பல் திட்டுகளுடன் நிலா சல்லடைபோன்ற மேகத்தினுள் ஒளிர்ந்தது. பெயரற்ற பறவையொன்றின் சத்தம் மரங்களின் கிளைக்கு கிளை தாவி அடுத்த படித்துறையில் குளிப்பரவர்களை கவர்ந்து நகர்ந்தது. நீரின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் காற்று தாழ்ந்த்ய் தவழ்ந்து சென்றுகொண்டிருந்தது. நீரின் மென்மையான அரவணைப்பில் தட்டிக்கொடுப்பில் என்னைக்கொடுத்து கிடக்கையில் நீருக்குள் யாரோ பொறுமையின்றி இறங்கும் சத்தம் கேட்டது. சுதாகரித்து என்னை சாதரணமக்கி மூணு முங்கு போட்டபின் படியேறி சோப்பை எடுத்து தேய்த்துக்கொண்டிருந்தேன். 


சாணலில் இறங்கும் மனிதனின் உடல் தொப்பையுடன் ஆனால் உறுதியாக இருந்தது. குலுங்காத தொப்பை அங்கு எதோ கருங்கல் ஒன்றை கட்டிவைத்திருப்பதைப்போல பிரம்மையை உண்டாக்கியது. 

ஆடைகளை அவிழ்த்து போட்டு நீரில் சற்றும் கரிசனமின்றி முக்கி எடுத்து படிக்கல்லில் போட்டு தேய்க்க ஆரம்பித்தான். தனிமை கலைந்த வெறுப்பில் அமர்ந்திருந்தேன். வலது கரையோரம் சென்ற வண்டியின் வெளிச்சத்தில் படித்துறையின் ஓரமாய் குந்தியிருந்த மெலிந்த சிறுமியின் உருவம் தெரிந்தது. ஒரக்கண்ணால் பார்த்ததில் அவள் முகம் எலும்பெடுத்து கன்னங்கள் குழிந்து சதைப்பற்றில்லாமல் இருந்தது. அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் இடைக்கிடை பார்த்துக்கொண்டனர் ஆனால் பேசிக்கொள்ளவில்லை. துணிகளை பிழிந்து வைத்துவிட்டு அவன் நீர்க்குள் இறங்கியதும் நானும் இறங்கிக்கொண்டேன். அவர்களை கவனிக்காதது போல காட்டிக்கொள்ள ஏதுவா முதுகுகாட்டி நீரின் குளுமையை உடலில் உணர்ந்தவாறு தலைமட்டும் வெளியே தெரிய நின்றிருந்தேன். 


கரையோரமிருந்த சிறுமியின் குரல் அசாதாரணமாய் நடுவயதை கடந்த பெண்ணின் குரல் போலிருந்தது "வாங்குன கடனெல்லாம் எப்பொ அடைக்கதா உத்தேசம். எதாவது யோசன இருக்கா இல்ல மாடு கணக்க இருந்துரலாம்னு நெனப்பா" என்றாள். தூரமாய் வந்த வண்டியும் வெளிச்சம் அருகில் வரவும் தலையை மட்டும் திருப்பி அவளை கவனித்தேன் அழுக்கடைந்த அல்லது சாம்பல் நிற சட்டையும் சிவப்பு பாவாடையும் அணிந்திருந்தாள். அவள் கேட்டதற்கு பதில் சொல்லாமல் நீரில் கைகளை அளைந்து உடலில் வழியவிட்டான். கடுப்பானவள் "லேய் கேக்கது காதுல விழுகா இல்லையா மாடு...கருமத்த மாடு"


அவன் "கேக்கு கேக்கு…" என்று ஒரு முறை முங்கி எழுந்து "எல்லாத்துக்கும் கணக்கிருக்கு" என்றவாறு மீண்டும் முங்கி எழுந்து நீரை கொப்பளித்து துப்பினான்.


"உனக்க கணக்குதான் தெரியுமே. முடிவே இல்லாத கணக்கு. உனக்கு இருக்க ஒரே தெறம எந்த எந்த வழிலலாம் கடம் வாங்கலாம் , அதுலர்ந்து எப்புடிலா தப்பிக்கலாம்னுங்கிறது தான" என்றாள். அவள் குரல் கட்டையான ஆண்குரல் போலிருந்தது.


"நான் வாங்கி வாங்கி எனக்க குண்டிக்கடியிலையா வச்சேன்" என்று அவளை பார்க்காமல் என்னை பார்ப்பது எனது தெரிந்தது. நான் கண்டுகொள்ளாதது போல அமைதியாக நீருக்குள் முங்கிக்கொண்டேன். 


"ஆமா எனக்கு அட்டியலும் ஆரமுமா போட்டு அழகு பாத்தபாரு. இந்தா கழுத்துல கெடக்கே இந்த இத்துப்போன இதுதான் கடைசி. மிச்சத்த எல்லாம் பணயம் வச்சி திண்ணு தீச்சாச்சு"


"ஜீவிக்கணும்னா அதுக்குண்டான வழிய கண்டுடிக்கணும். தொழில் யாவாரம்னு வந்தா செலவில்லாம வெறும் சம்பாத்தியம் மட்டும் வருமா" ஆரம்பத்திகிருந்தே அவன் குரல் தனிந்து தவறு செய்து அதற்கான காரணம் சொல்லும் சிறுவனின் குரல் போலவே இருந்தது.


"போட்ட மொதலாவது வரணும்ல. அதுக்குண்டான வழிய ஒருட்ரிப்பாவது செஞ்சிருக்கியா. வாய் கிழிய பேச மட்டும் வந்துட்டா"


"நீதான கேட்ட"


"திண்டுக்கு முண்டு பேசுனா கோவம் வரும் பாத்துக்க. கட்டிட்டு வரதுக்கு முன்னாலயே இதெல்லாம் செரி செஞ்சிட்டுத்தான இறங்கிருக்கணும்"


என்னை சாட்சியாக வைத்து அவர்களுக்குள் இருக்கும் பிரச்சனயை தீர்த்துக்கொள்ள முயல்வது போலிருந்தது அவர்களின் பேச்சு. நான் அமைதியாக நீரில் எழும்பி அமிழும் அலைகளில் அவர்களின் பேச்சை இணைத்து பார்த்துக்கொண்டிருந்தேன். 


"உனக்க பேருல தான அந்த வீட்ட வாங்கி போட்டேன்"


"ஆமா அதும் கடத்துலதான கெடக்கு"


"உனக்கு பண்டுவம் பாத்து வாங்குன கடமாக்கும் அது. உனக்க உடம்ப நீ நல்லா பாத்துகிட்ட இந்த கடம் வந்துருக்காதுல்ல. தேவயில்லாத செலவு" என்று சலித்துக்கொண்டான்.


"ஆமா எனக்கு சீக்கு வந்து. நானா வருத்தி வச்சதில்ல. நீயும் உனக்க தள்ளையும் சேந்து எனக்கு உண்டாக்கி வச்சது. உனக்க கொட்டாரத்துக்கு வரதுக்கு முந்தி எனக்க தேகத்துல ஒரு ரோகமும் கெடையாது"


"இல்ல தெரிதாமத்தான் கேக்கேன்..எனக்கு வெளங்கல"


"ஆமா உனக்க அம்மதான் காரணம். எல்லாத்துக்கும்." என்று நிறுத்தி மூச்சு வாங்கினாள். மூச்சு விடுவது சம்பந்தமான எதோ நோய் அவளுக்கு இருந்திருக்க வேண்டும். சிறிய மூச்சி மொடுமையா இருமலில் போய் நின்றதும். அவன் அமைதியானான். நிலவு கீழ் வானம் நோக்கி இறங்கியிருந்தது. கரு மேகங்கள் சூழ அது நடுவில் தனியாக மிதந்தது. அமைதியாக சில நிமிடங்கள் கடந்ததும் அவன் "பிள்ளயில்லன்னு எனக்க அம்ம சொல்லி பாக்க போயித்தான இந்த ரோரம் உனக்கு இருந்ததே நமக்கு தெரிஞ்சி. அதுக்கு எங்கம்ம என்ன செய்வா" என்றான்


அவள் அந்த பேச்சை தொடராமல் "மொத்தமா எவ்வளவு கடமிருக்கும் அத சொல்லி கணக்கு போடுவொம். நீ எவ்வளவுதான் உனக்கு கும்பில போட்ருக்கண்ணுதான் பாப்பமே" என்றாள் பழைய கடுகடுப்பான குரலுடன்.


"அது செட்சுமிக்கு ஒரு பத்து , அணஞ்சபெருமாளுக்கு நுப்பத்தாறு , வெண்ணக்கட செட்டியாருக்கு இருவது. அப்படியே சேத்து மொத்தமா ஒண்ணு , ஒண்ண்ர வரும்" 


"எதைவாது ஒழுங்கா சொல்லத்தெரியுதா. இதுல ஓவிவ மயிரா எல்லா பிசினஸும் செய்யணும்"


"நீ வாங்குன அறுவது. குழுல வாங்குனேல்லா அது என்ன கணக்குமோ" எழுந்து படித்துறையில் நின்றவாறு துவட்ட ஆரம்பித்தான். அவன் வயிறு குலுங்காமல் அசைந்து கொடுத்ததை நான் ஓரக்கண்ணால் பார்த்தேன்.


"அது நான் வாரக்குழு இப்பொ அசலு எவ்வளவோ களிஞ்சிருக்கும்"


"எவ்வளொ களிஞ்சிருக்கும்"


"அதொரு பத்து"


"மிச்ச அம்பதாயிரம் கெடக்குல்லா"


"நான் தீத்துட்டுத்தான் இருக்கேன்"


"செரி செரி" என்று துண்டை அடித்து உதறினான். சாணலினுள் நான் மட்டும் இருப்பது ஆசுவாசுமாய் இருந்தது. ஆனால் அவர்கள் பேசிக்கொள்வதை கேட்காமல் இருக்க முடியவில்லை. 


"இன்னும் அஞ்சி நாளைல கடைய தொறக்கணும். அதுக்கு பலசரக்கு கேஸு எல்லாம் எடுக்கணும். தெரிஞ்ச ஓணர் அட்வான்ஸ் இல்லாமல் கடைய தந்தாரு" எனும் போது அவன் குரல் கனத்து ஒலித்தது


"என்னமாஞ்செய்யி" என்றவள் வானத்தை பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.


அவன் "குழுல கேட்டு ஒரு பத்தயிரம் வாங்கித்தாயேன். இதான் கடைசி" என்றதும் "அதானே பாத்தேன். இந்த சோலி வேண்டாம் மக்ளே" என்றாள்.


"ஒருத்தன் முன்னேற என்னமாம் சப்போட் உண்டா என்று நானிருக்க்கும் திசை பார்த்து சொன்னான். 


" அந்தாளு உனக்க அம்மைக்கி மத்தவனா. உனக்கு சப்போட்டுக்கு வர" என்று சிரித்தாள். அவனும் சிரித்தான்.  


இது இப்படி முடியக்கூடாதென்று மனம் அரற்றியது. மனதிற்குள் அவனுடம் சொல்வது போல "அடி அடியவளை" என்றேன். 


"நைட்டுக்கு என்னத்த வைக்கப்போற" என்றபடி அவன் அவளை இடித்து தள்ளிக்கொண்டு அவர்கள் வந்திருந்த பைக்கின் அருகில் நகர்த்திச்சென்றான்


"கை காலெல்லாம் நல்லா ஒளையிது" என்றாள் தரையை பார்த்தவாறு


"அப்போ முக்கு கடைல அம்மைக்கி தோசையும் நமக்கு புரோட்டாவும் வாங்கிட்டு போவமா"


"உனக்க அம்மைக்கி என்னவாம் வாங்கு. எனக்கு கோழிப்பொரிப்பு வேணும்" என்று கொஞ்சலாக சொன்னாள்.


அவன் "வாங்கிருவோம்" என்றதும் வண்டி கிளம்பும் சத்தம் எனக்கு கேட்டது. 


என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை. எதும் புரிபடாமல் கதை நான் நினைத்தற்கு நேர் எதிராய் முடிந்திருக்கிறது. ஒரு வேளை கல்யாணம் செய்துகொண்டால் புரிபடும் போல எனும் எண்ணம் உதித்தது. பெயரில்லாத பறவை மீண்டும் அவனருகில் வந்து சத்தமிட்டு மின் மறைந்து போனது. அந்த சத்ததின் பொருளை அவனால் விளங்கிக்கொள்ள முடியவில்லை.


பனிப்பொழிவு - சிறுகதை

 வெறுமையின் தூய்மை நிரம்பிக்கிடந்த அந்த அறையின் நடுவில் ஒற்றை நாற்காலையில் கால்களை குறுக்கி நிமிர்ந்து அமர்ந்திருந்தான். ஒற்றை வாசலுடையை அறையின் வலதும் இடமும் இரண்டென நேரெதிராக கண்ணாடி ஜன்னல்கள் திரைகளற்று ஒளியை தனக்குள் வைத்துக்கொள்ளாமல் அறைமுழுவதும் நிரப்பியன. அணிந்திருந்த தடித்த கோட்டை குளிருக்காக மேலும் கைகளால் இறுக்கி அணைத்து காற்று புகாதவாறு அடைக்க முயன்றபடி அறைக்குள் எங்கிருந்து குளிர் நிரம்பி வருகிறதென என்ணியவாறு மூலைமுடுக்கெல்லாம் இடிக்கு பயந்த மரப்பொந்திலிருக்கும் ஓர் ஆந்தையைப்போல  தேடிக்கொடிருந்தான். வெண்பனித்தூவல் கண்ணாடி ஜன்னல்களுக்கு அப்பால் மெல்லிய தென்றலுக்கு ஏற்ற ஏற்ற இறக்கத்துடன் சரிந்து பொளிந்து கொண்டிருந்ததை கவனிக்கவோ ரசிக்கவோ விடாதபடி குளிர் அவனை வாட்டியெடுத்தது. அப்போது அறைக்கதவு சத்தமின்றி திறக்க உள்நுளைந்தவன் குளிருக்கான கோட்டு ஏதுமின்றி ஓர் கருப்பு நிற ஸுவட்டரும் அதுனுள் உள்சட்டையின் காலர் மட்டும் தெரியுமாறு அணிந்திருந்த சட்டையுடன் வளித்து வாரப்பட்ட பொன்னிற தலைமயிரை கலைந்து விடாமல் ஒருமுறை அழுத்தி தேய்த்துவிட்டவாறு அந்த நாற்காலியின் அருகில் வந்து நின்றான்.


“குளிர்காலத்தின் கடைசி பன்னிப்பொழிவாக இருக்க வாய்ப்பிருக்கிறது இல்லையா யோன்ஸ்” என்று ஜன்னலில் அருகில் சென்று வெளியேதெரியும் காட்சியை ரசித்தவனாக "நான் ஆபீசர் ஆண்ரியாஸ்" என்றான்


“இருக்கலாம் அதைப்பற்றி எனக்கொன்றும் தெரியாது” என்று நிறுத்திய யோனஸ் அந்த அமைதியை விரும்பாதவனைப்போல தொடர்ந்தான் “போன வருடம் மிட் சம்மர் விழாவிற்காக டைரிஸ்டா தேசியப்பூங்காவினுள் ஓர் ஏரியின் கரையோரமாக அமர்ந்து அவர்கள் நட்டுவைத்திருந்த கம்பத்தை சுற்றி பெண் குழந்தைகளும் பெண்களுமாக சுற்றிவந்து பாட்டுபாடி அதனை ஓர் நாடகம் போல நடத்திக்காட்டிக்கொண்டிருந்தனர். அது நான் பிறந்ததிலிருந்து கண்ட காட்சிதான் ஆனால் அங்கு தனியாக நின்றுகொண்டிருந்த குழந்தையொன்று உயிருடன் இருக்கும் வாத்துக்குஞ்சை கழுத்தைபிடித்து தூக்கி நீரில் முக்கி அதன் ஈனக்குரலை ரசித்து பின் புற்களுக்கிடையில் வளர்ந்திருந்த பாறையின் முகட்டில் ஓங்கி அடித்து அதன் சூடான குருதி மணிக்கட்டில் வழிவதை பார்த்து ரசித்தது. தூக்கி எறியப்பட்ட அந்த குஞ்சின் உடல் இறக்கைகள் பியிந்து கிடந்ததை தனக்கே காட்டி எக்காளமிட்டு மீண்டும் சிரித்தது. சகிக்க முடியாத ஓர் கொலைவெறியாட்டம் நடந்து முடிந்ததை அறிந்து ரசித்த அந்த குழந்தையின் கண்களை நான் எல்லா குழந்தைகளிடமும் காண்கிறேன். உலகிலேயே நான் பயப்படுவது அந்த மாதிரியான நீல நிறக்கண்களை மட்டுமே. அவை நஞ்சு கலந்து பிறக்கும் போதே குடுக்கபடுகிறது” என்று நிறுத்தி வரண்ட உதடுகளை நாவல் ஈரமாக்கி “எனக்கு தண்ணீர் வேண்டும்” என்றான்.


“இதோ” என்றவாறு வெளியே சென்றவனை அவனால் கவனிக்க முடியவில்லை. அந்த கண்களை மீண்டும் மீட்டுருவாக்கி ஓர் ஓவியம் போல தன்முன் கொண்டுவந்து நிப்பாட்டினான். 


ஆண்ரியாஸ் தண்ணீர் குப்பியுடன் திரும்ப அந்த அறைக்குள் வந்தபோது யோனஸ் ஜன்னல் கண்ணாடியில் முகத்தை ஒட்டி வெளியே பார்த்தபடி குளிரால் முகம் ஒரு பக்கமாய் மறத்துப்போக அதனை விரலால் வருடியபடி நின்றான். 


"பனி படர்ந்த சூழல் நம்மை இயற்கையை தரிசிக்க வைத்துவிடுகிறது. இங்கிருக்கும் அனைத்தும் இறைவனின் வடிங்களாக காட்சிதருவது நமக்கு ஆன்மவிடுதலை அல்லவா" என்று கண்களை மூடி பிரார்த்துப்பது போல முனங்கினான்.


"இருக்கலாம். ஆனால் இதோ இந்த வெண்மையான இறைவனை பிரதிபலிக்கும் பனிப்பொருக்குகள் ஒளியை தமக்குள் பொதிந்து வைத்து இருளிலும் ஒளியை கொடுப்பதாக தப்புக்கணக்கு போட்டுவிட்டீர்கள். புகை மண்டிய வண்டிகளும் மனிதர்களும் இந்த பாதைவழியாக சென்று சென்று இதன் நிறத்தை கருப்பு சாக்கடையின் நிறமாக இன்னும் ஒரு நாளில் மாற்றிவிடுவார்கள். அங்கு நீங்கள் என்னதான் கற்பனை செயதாலும் அழுக்கைத்தவிர வேறெதும் வர முடியாது" என்று நிறுத்தி வெது வெதுப்பான நீரை உடலில் நிரப்பிக்கொண்டான். அடர்ந்த சுருள் போன்ற தாடியில் வழிந்த நீர்த்துளிகள் அதனுள் புகுந்து மறைந்து கொண்டன. நீண்ட முகம் ஒரு வாரம் கிடைக்கும் நல்ல தூக்கத்தில் பொலிவு பெற்றுவிடும் தன்மை கொண்டிருந்தது. கருமை படர்ந்த கண்களை உயர்த்தி மேலாக வளர்ந்து நின்ற ஆண்ரியாஸின் கண்களை பார்த்தவாறு "நான் தங்கியிருந்த அறை செவ்வக வடிவ ஐந்து தள கட்டிடத்தின் ஐந்தாவது தளத்திலிருந்தது. அறையின் வாசலில் நின்று பார்த்தால் அந்த கட்டிடம் ஒன்றுமில்லாத பெட்டி போலவும் அதன் மேல் விளிம்பொன்றில் நான் நின்று எட்டிப்பார்ப்பதைப்போல் இருக்கும். அங்கிருந்து மேல் நோக்கினால் வானம் முழுவதுமே அந்த செவ்வகவடிவ சட்டத்திற்குள் அடங்கிவிடுவாதாய் தோற்றம் தரும். இந்த நாட்டில் எல்லா வருடம் போல அந்த வருடமும் எட்டு மாத குளிர்காலாமும் மற்ற காலங்கள் மீதமிருக்கும் நாங்கு மாதங்களில் வந்து சென்றன. அந்த எட்டு மாதங்களில் வானம் மற்ற நிறங்களில்லாமல் சாம்பல் நிறம் மண்டிக்கிடப்பதும் பயந்த சூரியன் எட்டிக்கூட பார்க்காமல் பதுங்கி என்றாவது ஒரு நாள் பேருக்கு வந்து செல்லும். அப்போது ஊரே 

கொண்டாட்டம் கொண்டு தறிகேட்டு என்ன செய்யலாம் என்று தெரியாமல் தெருவெல்லாம் நடக்க ஆரம்பித்துவிடுவார்கள்" எண்ணங்கள் எங்கோ விலகிச்செல்வதாக உணர்ந்து மேல் கோட்டை உடலோடு அழுத்திவிட்டு தொடர்ந்தவனை ஆண்ரியாஸ் தடுத்து "நீங்கள் தங்கியிருந்த இடம் எப்படி?" என்று கேட்டான்


"என் அறையின் கீழே குடியிருந்தவர்கள் ஓர் இணை. அவர்களுக்குள் சண்டை பெருத்து தூக்கி எறியப்படும் பொருட்கள் என் அறையின் தளத்தில் வந்து மோதி எழுப்பும் சத்தத்தால் தூக்கம் கலைந்து நீண்ட ஜன்னல் வழி தெரியும் கருத்த ஒளியற்ற வானை வெறித்து பார்த்தபடி அமர்ந்திருப்பேன். தூக்கம் இனிமேல் பிடிக்கப்போவதில்லை என்பது தெரிந்ததும் சாதாரணமாகவே புகைக்ககும் எண்ணம் எழுந்து வந்தது. கதவைத்திறந்ததும் குளிர்ந்த காற்று கனமான திரையைப்போல என்னை அணைத்து தள்ளியது. அந்த தளத்தின் சிவந்த மாடி கைப்பிடியை பிடித்தவாறு சிகரெட் ஒன்றை எடுத்து வாயில் வைத்ததும் நெடி 

திட உருவம் கொண்டு மூக்கை அடைத்ததும் அருகில் வந்து நின்றவளை கவனிப்பதற்கும் சரியாக இருந்தது. என்ன சொன்னாள் என்பதை நான் சரியாக சொல்ல முடியாது ஆனால் அதன் பொருள் இப்படித்தான் இருந்தது. என் காதலன் என்னை துன்புறுத்துகிறான் கன்னங்களில் அடித்து கன்றியிருக்கிறது. என்னை கண்டுகொள்ள மாட்டேன் என்கிறான். ஆனால் நான் உன்னை காதலிக்க ஆரம்பித்து விட்டேன் நீ புகைவிடுவதை பலமுறை கவனித்துள்ளேன். கைகளில் அதன் இருப்பும் சாம்பலை தட்டும் அழகும் என்னை கவர்ந்தது. நீயும் என்னை காதலிப்பாயா ? அதை என்னுடைய பழைய காதலனிடம் சொல்லி என்னை விடுவிப்பாயா என்பதாயிருந்ததும். முழிதாய் பார்க்காத அவளை நான் காதலிப்பதாக ஒத்துக்கொண்டேன். அவள் காதலன் என்னை ஓர் உயிருள்ள ஜந்துவாகக்கூட மதிக்காமல் ரத்தம் வர அடித்து நொறுக்கும் போது அவள் ஒதுங்கி நின்று வேண்டாம் என்பது போன்ற முக பாவனையில் அழுது அவனை தடுக்க முயற்சித்தாள். ஆனால் அவள் உதடுகளின் ஓரத்திலும் இடது கண்ணின் ஓரத்திலும் மகிழ்ச்சி கலந்த புன்னகையொன்று உதித்ததை நான் கவனிக்க தவறவில்லை. அவள் கண்களும் நீலமாய் பறவையின் கண்களைப்போல் இருந்தது இப்போது ஞாபகம் வருவது ஆச்சரியம்தான்" என்று தண்ணீருக்காக கைகாட்டினான். 


குப்பியை கொடுத்திவிட்டு ஆண்ரியாஸ் பேச ஆரம்பித்தான் "இதற்கும் உங்கள் அறையில் செத்துக்கிடக்கும் உன் அம்மாவிற்கும் என சம்பந்தம். எதற்காக அதைச்செய்தாய் அதனை நீ சொல்லலாம் அல்லவா" என்று அவன் தோளில் கைவைத்தான்


"அவளுக்கு வயது ஐம்பத்தியாறு. ஆனால் பார்ப்பவர்களுக்கு பாதி திறந்த மார்பும் குட்டைப்பாவாடையும் பெரிய கருப்புக்கண்ணாடியும் உதட்டுச்சாயமும் அவள் வயதை மறைத்து இளம் பெண்ணினுடையதைப்போல காட்சியளிக்கும். அதற்கான நடையை அவள் பயின்றிருந்தாள். காலையில் அவள் தூங்கி எழுவதற்கு முன் அவள் படுக்கைக்கு அருகில் நின்று முகத்தை அதில் வரிவரியான சுருக்கத்தை தொங்கிய கைத்தசைகளை பார்த்து நின்றிருப்பேன். புரண்டு படுக்கும் போது அவை அங்குமிங்கும் குலுங்குவது ரசமான காட்சி" என்று வாய்மூடி சிரித்தான். 


ஆண்ரியாஸ் "எதற்கு சிரிக்கிறாய்" என்றதற்கு பதில் சொல்லாமல் சிரிப்பை அடக்கி பேசத்தொடங்கினான் "அவளுக்கு ஓர் ஆண் நண்பன் சிக்கினான். அசாதாரண உடம்புடன் பார்ப்பவர்கள் பயப்படுவது போல கூர்மையான பழுப்பு கண்களுடன் எப்போதும் யாரையாவது அடிக்க தாயாராய் இருப்பது போல மோவாயைத்தூக்கி நடப்பது இவள் அதில் முத்தம் கொடுப்பதும் எனக்கு எவ்வளவு அருவருப்பாக இருந்திருக்கும் என்பது உங்களுக்கு புரிந்திருக்கும். அவன் ஓர் வேட்டை நாயைப்போல என்னை பார்த்த இடங்களிலெல்லாம் என்னை ஆடாக பாவனை செய்து துரத்தினான். ஒரு நாள் சாம்பல் வானில் காலை என்பது தெரியாத பொழுது எங்களின் வீட்டின் முன் யாரென்றே தெரியாத ஒருவன் அவளை போட்டு அடித்து நொறுக்கினான். நான் கதவிடுக்கு வழி அவள் அலறுவதை பார்த்து நின்றிருந்தேன். அவள் காதலன் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தானென நினைத்த போது எங்கிருந்து வந்தான் என்று தெரியாமல் நான் மலங்க விழித்துக்கொண்டிருந்த போது அவளை விடுவித்து அடித்து நொறுக்க ஆரம்பித்தான். கீழே விழுந்து எழுந்த அவள் வீட்டுக்கதவை திறக்கவும் அது மூக்கில் அடிக்க நான் விழுந்து எழுந்தேன். அவள் என்னை எதும் சொல்லவில்லை ஆனால் அவள் பார்வை செத்த அழுகிய உடலை பார்ப்பதைப்போல் இருந்தது. அதன் பிறகு நான் அவள் வீட்டுக்கு செல்வதில்லை" யோனஸின் முகம் அவன் கடைசியாய் சொன்ன அவள் அம்மாவின் முகத்தைப்போல இருந்ததாய் ஆண்ரியாஸ் நினைத்தான்.


மஞ்சல் விளக்குகள் ஒளிர்ந்த  அறையில் இருவரும் ஜன்னல் கண்ணாடியின் முன் நின்று மறுபுறம் தெரிந்த கருத்த இறுகிப்போன பனிக்கட்டிகளை பார்த்தவண்ணம் இருவரும் நின்றனர். ஆண்ரியாஸ் "போகலாமா" என்றதும் யோனஸ் "அதற்கென்ன தாராளமாய்" என்றதும். இருவரும் அந்த அறையிலிருந்து வெளியேறினர்.


"தெளிந்த வானில் முழுநிலா பொழிகிறது" என்றதனை மூச்சால் உடம்பிற்குள் நிரப்ப முயன்றவனப்போல பெருமூச்சைவிட்டான் ஆண்ரியாஸ்


"எனக்கு இருளாகவே தெரிகிறது" என்ற யோனாஸின் தலை குனிந்தேயிருந்தது.