Wednesday 27 May 2020

போரும் வாழ்வும் ஓர் அவதானிப்பு 2 : தந்தையை கடத்துதல்


மரபென்பதை நாம் வரையறுக்க முயலும் போதோ அல்லது வரலாறு என்பதை நாம் எழுத நினைக்கும்போதோ நாம் முன்னோர்களை தேடிச்செல்கிறோம். அப்படி நாம் தேடிச்செல்லும் போது முதலில் கண்டடைவது நம் பெற்றொர்களையே அங்
கிருந்து தான் நாம் நம் வந்தவழியை பின்னோக்கி பார்க்கமுடியும். நான் எப்படிப்பட்டவானாக இப்பொழுது உருவாகியிருக்கிறேன் என்று நோக்கும் பொழுது என் தந்தையின் பயம் , கோபம்  , அனைத்தையும் உடனே நம்பும் தன்மை சகித்தல்  போன்ற சிலகுணங்கள் அதும் அச்சுபிசகாமல் அப்படியே இருப்பதைக்காண முடிகிறது. இத்தனைக்கும் என் அன்னை நான் ஒருபொழுதும் என் தந்தையைப்போல் வரக்கூடாது என்றே கூறியிருக்கிறாள் நானும் அதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்துள்ளேன். ஆனால் என் இருபத்தெட்டுவயதில் நான் அடையக்கூடாதென்று நினைத்த இடத்தயே வந்து சேர்ந்துள்ளேன்.

ஓடைகள் இணைந்து ஒரு சிறு பாசிபிடித்த பழங்கால குளத்தில் தங்குவது போல் நான் அங்கு சென்று தங்கியிருக்கிறேன். போரும் வாழ்வும் நாவலில் வரும் தந்தைகள் தன் குழந்தைகள் மீது அவர்களின் ரேகைகளை பதித்துவிடுகிறார்கள். அது சிலசமயம் அழியாமல் இருக்கிறது அல்லது அதன் நேரெதிர்திசையில் வளர்ந்து சென்றடைகிறது.

வயோதிக பால்கோன்ஸ்கியின் குணங்கள் மேரி , ஆன்ட்ரூ ஆகிய இருவருக்கும் கடத்தப்படுகிறது. மேரி அவளின் தந்தையிடம் இருந்து விலகி வர நினைக்கிறாள். அவரின் கோபம் ஒருவரையும் மதிக்காத தன்மை , தன் கருத்தை ஒப்புக்கொள்ளவைத்தல் என்ற அனைத்திற்கும் எதிர் தரப்பாக ஆன்மீக வழியில் அனைவரையும் நேசிக்கவும் பிரார்த்திக்கவும் , சன்யாசம் செல்லவும் நினைக்கிறாள். அவளின் வீட்டிலுள்ள அடிமைகள் அனைவரும் அவளிடன் சகஜமாக பழகுமாறு ஓர் சூழ்நிலையை உருவாக்குகிறாள். ஆனால் அதற்கு நேர்மாறாக ஆன்ட்ரூவின் மகன் நிக்கலஸிடம் அவன் சரியாக படிக்காமல் பராக்கு புத்தியுடன் இருப்பதற்காக அவனை அடித்து துன்புறுத்தவும் வெறுப்பது போல காட்டிக்கொள்ளவும் செய்கிறாள். இது அவளிடன் தன் தந்தையின் குணங்கள் மாறாமல் அப்படியே இருப்பதைக்காட்டுகிறது. அதற்காக குற்றவுணர்ச்சியடைகிறாள்.

வயோதிக பால்கோன்ஸ்கி இறப்பின் பொழுது தன் இளமைகாலங்களை நினைத்துப்பார்க்கிறார். அது தன் போர் திறனை , ஆழுமையை பற்றியதாக இருக்கிறது, இதனை ஆன்ட்ரூவின் போர் சார்ந்த எண்ணங்களையும் அதில் தான் செய்ய வேண்டிய அசாத்தியங்களையும் தொடர்புபடுத்தலாம். தன் தந்தையின் கீழ் வேலை செய்யும் பொழுது அவர் நெப்போலியன் ருஷ்யாவிற்குள் நுழைந்ததை சுட்டிக்காட்டும் பொழுது தன்னை அவமதிப்பதாகவும்  கேலிசெய்வதாகாவும் அவர் போல் ஆகவவில்லை என்று குத்திக்காட்டுவது போலவும் உணர்கிறான்.

மாஸ்கோ கவர்னரிடம் வயோதியக பால்கோன்ஸ்கி கொடுத்த கடிதத்துடன்  செல்கிறான் வேலைகாரன் அல்பாட்டிச். அவனைச்சுற்றி பெண்கள் அவன் செல்வதினால் பிரஞ்சுக்காரரர்களிடன் அகப்பட்டுக்கொள்ளுவான் எனும்பொழுது "ஓ பெண்கள் பெண்கள் , சகித்துக்கொள்ள முடியாதவர்கள்" என்று சலித்துக்கொண்டு வயோதிகர் சொல்வது போலவே சொல்லிச்செல்கிறான். மொத்தமாகவே அவரை அவன் பிரதியெடுத்துக்கொள்கிறான். தெய்வங்கள் மனிதர்களில் சன்னதம் கொள்வது போல. அவர் அல்பாட்டிச்சை ஆட்டிவைக்கிறார்.

அடுத்த தலைமுறையில் வரும் ஆன்ட்ரூவின் மகன் நிக்கலஸ் தன் தந்தையின் பெயரைக்காப்பாற்றுவதாகவும் அவரைப்போலவே அவன் ஆகப்போகவதாகவும் சத்தியம் செய்கிறான்.

ஆனால் இவற்றிற்கு விதிவிலக்காக இருப்பவன் நிக்கலஸ் ராஸ்டோவ். தன் வியாபாரம் அறியாத , சோம்பேறியான , அனைவரையும் நம்பும் , ஏமாறும் தந்தை மொத்த சொத்தையும் இழந்து குடும்பம் கடனால் சரிந்து நிற்கும் பொழுது நிக்கலஸின் மனைவி மூலம் கிடைத்த நிலத்தில் கடுமையாக உழைக்கிறான். விவசாயிகளை நம்பும் அவன் வீட்டு வேலைகார அடிமைகளை ராணுவத்துக்கு அளிக்க தாயாராக இருக்கிறான்.ஆனால் விவசாயிகளை மதித்து அவர்களில் ஒருவனாக ஆகிறான். விவசாயத்தின் நுட்பங்கள் அறிந்து அவர்களை சரியாக வழிநடத்துகிறான். சொத்துகளை அதிகரிக்கிறான். தன் தந்தையின் கடன்கள் அனைத்தையும் அடைக்கிறான். தந்தையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட மகனாகவே அவன் வருகிறான். அவரின் ரேகைகளை வலுவாக அவன் அழித்துவிடுகிறான்.

தந்தையின் நிழல் படியாதவர்கள் எவரும் இருப்பதில்லை. அது இருளிலும் மந்தமாக நம் கூடே வருவது. 

No comments:

Post a Comment