Monday 17 August 2020

ஊர் கதை - குறுங்கதை

இருள் பரவ ஆரம்பித்து ஒரு மணி நேரம் ஆகிறது. மயங்கிவழியும் நீலம் வானில் விரவியிருக்கும் பதினோறு மணி. பாதிபடித்து வைத்திருந்த நாவல் மடியிலிருக்கிறது. இந்தியர்களுக்கு காட்டமான மால்புரோ சிகரேட் ஒன்றைப்புகத்தாலொழிய என்னால் விழித்திருக்க முடியாது. கண்களின் இரப்பை கனத்து இமைகள் மூடக்காத்திருக்கிறன.ஒரு நடை சென்றால் தூக்கம் கலையலாம். வழக்கமாக செல்லும் பாருக்கு வெளியே பெயர் தெரியா நண்பர்கர்களிடம் வெறும் வணக்கம் வைத்து எதாவது உதிரிச்சொற்கள் பேசலாம்.

குப்பைக்கூழங்கள் அற்ற தெருக்களில் எரித்த சிகரேட்டின் துண்டுகள் மட்டும் கூட்டுப்படுகொலை செய்யப்பட்டு பாதி எரிந்த பிணங்கள் போல கிடக்கின்றன. என் கையில் சாகக்காத்திருக்கும் ஒருவன். ஸ்வீடனில் கோடைக்காலம் முடியப்போகிறது. பகல் குறைந்து இரவின் ஆட்சி தொடங்கும் பொழுது பகலின் துகள்கள் பனியாய் மொழியும். அறையிலிருந்து தெருவில் இறங்கி பத்தடி தூரத்தில் இருக்கிறது அந்த பார். பத்து நிமிடத்திற்கு ஒருமுறை ஒரு கூட்டம் அதிலிருந்து வெளியேறி புகைவிட்டு பழைய இருக்கைகளில் அமர்ந்து கொள்ளும். சிகரேட் இல்லாமலே சென்று யாரிடமோ ஒன்று கடன் வாங்கிக்கொள்ளலாம் ஆனால் எனக்கு உகந்ததல்ல , நான் கொடுப்பவன். முழுப்போதையிலுருப்பவர்களும் கருப்பு அகதிகளுமே அதிகமாக சிகரேட் கடன் வாங்குகிறார்கள். பதின் வயது சிறுவர்களும் - பார்ப்பதற்கு பீமனைப்போலிருந்தாதும் - நம்மிடம் கேட்பதுண்டு.

லைட்டர் எடுக்காமல் வந்து விட்டேன். நண்பர்கள் யாரிடமோ கேட்டுக்கொள்ளலாம் என்றால் அங்கு ஒரு குடிகாரனுமில்லை. பின்னானிலிருந்து ஒரு குரல்.

"பெங்காலியா" என்றது உதிரி ஆங்கிலத்தில். கட்டையான உருண்டை வடிவம். சிவந்த இந்திய நிறம். தூரத்தில் அவனை பார்த்திருந்தாலும் கவனிக்காதது போலிருந்தேன்.

"இல்லை நான்" என்று முடிப்பதற்குள்

"இந்தியனா ? , வேறு எப்படியும் இருக்க வாய்ப்பில்லை" என்றான். அவன் ஆங்கிலம் புரிந்து கொள்ள கடினமாக இருந்தது. குள்ளமாக இருந்த அவனை எனக்கு கீழே பாதாளத்தில் பார்ப்பது போலிருந்தது. நான் கேட்காமலேயே லைட்டரை எடுத்து எனக்கு பற்ற வைத்தான். அவன் முன் ஸ்டைலாக புகை விட வேண்டும் என்று நினைப்பு எனக்கிருந்தது.

"நான் பங்களாதேஷி , எங்கு வேலைப்பார்க்கிறாய்" என்று சகஜமாக பேச்சுக்கொடுத்தான். எனக்கு சாதரணமாகவே அகதிகளுடன் பழக வேண்டும் என்ற நினைப்பிருந்தாலும். அவர்களைக்கண்டால் நான் விலகி விடுவதே என் இயல்பாக இருக்கின்றது. அப்படி நெருங்கி அறிந்து கொண்ட இங்கு குடியேறி அமர்ந்து விட்ட இலங்கை தமிழர்களின் கொண்டாட்டம் ஏனோ என்னில் ஒரு சந்தோஷமின்மையை கொடுத்தது.

"நான் ஐடி , உங்களுக்கு தெரிந்திருக்கும் , ஹெச் அண்ட் எம். அங்குதான் வேலைப்பார்க்கிறேன். எவ்வளவு நாளாக இங்கு இருக்கிறீர்கள்" என்றேன். அவனைப்பார்ப்பதும் பின்பு மேகமில்லாத வானைப்பார்த்து புகை விடுவதுமாயிருந்தேன்.

பதில் சொல்ல விருப்பமில்லாததைபோல "ஏழு வருடங்களாக இங்கிருக்கிறென். டீ சென்றலில் வேலைப்பார்க்கிறேன்" என்றான்.

அவன் கேட்காமலேயே " நான் இரண்டு வருடமாக இங்கிருக்கிறேன்" என்றேன். பேசி முடித்தவுடன் ஒரு சிரிப்பை நான் இயந்தரத்தமாக பழகிவிட்டிருக்கிறேன். கண்டிப்பாக எதாவதொரு கிளீனராகவோ. ரெஸ்ட்ராண்டிலோ வேலைப்பார்ப்பான். நம் அளவிற்கு சம்பளம் வர வாய்ப்பிலை பாவம்தான்.

"நீங்கள் அந்த கட்டிடத்திலிருந்து வருவதைப்பார்த்தேன்" 

"ஆம் அங்குதான் தங்கியிருக்கிறேன்" இருவரும் புன்னகைத்துக்கொண்டோம். நல்லதாகப்படவில்லை ஒருவேளை என்னுடைய அறையில் தங்க முயல்கிறானோ. எங்கு தங்கியிருக்கிறாய் என்ற கேள்வியை அவனிடம் கண்டிப்பாக கேட்கக்கூடாது.

"ஹிந்தி தெரியுமா"

"இல்லை தெரியாது நான் தென் தமிழகத்தவன் , ஓரிரு வார்த்தைகள் மட்டுமே தெரியும் , ஹமாரா , துமாரா , கானா கேலியே" ஒவ்வொன்றாக நிறுத்திச் சொன்னேன். சிரித்ததில் அவன் விட்ட புகை மூக்கிலிருந்து வந்தது. 

"எங்களூரில் ஐம்பது சதமானம் பேர் பெங்காலி பேசுவார்கள் , ஹிந்தி தெரிந்தால் அங்கு கண்டிப்பாக பிழைக்காலம். எல்லாருக்கும் ஹிந்தி தெரிந்திருக்கும். தென்னிந்திய மக்களுக்கு ஹிந்தி தெரியாதென்பது எனக்கு தெரியும்" என்று நக்கல் சிரிப்பு சிரித்தான். நானும் அதில் இணைந்து கொண்டேன்.

"உங்களுக்கு தென்னிந்திய நண்பர்கள் இருக்கிறார்களா"

"இருக்கிறார்கள்" என்று சிரித்தான். என்னில் , தமிழ் தெரியுமா ? உலகிலேயே பழைய மொழி என்று பிரஸ்தாபிக்கும் எண்ணம் வந்தது கேவலம்தான்.

பங்களாதேஷ் என்றதும் கேட்க வேண்டும் என்று வைத்திருந்த கேள்வியைக்கேட்டுத்தான் ஆக வேண்டும் "பிரம்மபுத்திரா உங்களூரில் ஓடுகிறதா" 

"ஆம் நீளமான அகலமாக நதி , வளம் கொடுப்பவள். ஆற்றின் கரையோரமாக இருந்தது எங்கள் கிராமம். விவசாய நிலம் ஆற்றங்கரையிலிருந்து தூரத்திலிருந்தது" கண்கள் எங்கோ கனவில் மிதந்து கரைசேர விரும்பா ஒற்றைப்படகேன அலைகின்றன. சிந்திக்கும் போது வரும் எழுத்து எழுத நினைக்கும்பொழுது வந்து தொலைப்பதில்லை.

"ஊருக்கு செல்வதுண்டா"

"இல்லை அங்கு எதுமில்லை"

"வருடத்திற்கு ஒருமுறை ஊருக்கு செல்வது நல்ல அனுபவமில்லையா. வெளிநாட்டிலிருந்து வரும் மிடுக்குடன் செல்லலாமில்லையா"

அவன் சிரித்துக்கொண்டான். பதில் பேசவில்லை.

"அடுத்த மாதம் நான் செல்கிறேன். நண்பர்கள் காத்திருக்கிறார்கள். உறவினர்களும்" என்று பாட்டிலை கைகளில் காட்டினேன்.

அதற்கும் சிரித்தான். அதே அமைதி

"சரி , பிறகு சந்திக்கலாம். தாக்" என்றான்

நானும் "தாக்ஸமீகேன்" என்று நன்றி கூறினேன்.

தென் கிழக்காக செல்கிறான். இங்கிருந்து அதே திசையில் பிரம்ம புத்திரா ஓடுகிறது. அட கைகளை காற்றில் ஆற்றலை போல நெளிக்கிறான்.

நல்ல ஊர்க்கதை ஒன்று எழுதலாம் , ஓடு ஓடு.

No comments:

Post a Comment