Wednesday 17 June 2020

ரயில் - சிறுகதை


மொத்தம் மூன்று நிறுத்தங்கள் இருக்கின்றன. கடினமான காரியம். இது நிலத்துள் ஒருபுறம் புகுந்து மறுபுறம் எழுந்து இரைபிடிக்கும் பாம்பு. மொத்தம் முப்பது நிமிடங்கள். தூங்க முடியாது கண்களுக்குள் பாம்பு நெளிகிறது. நடுப்புள்ளியொன்றில் நின்று தலை கிறுகிறுக்கிறது. சுவாசிக்க முடியாத பஞ்சு இருக்கைகளின் மணம். இப்பொதே இப்போதே வாந்தி எடுத்துவிடுவது எனக்கு நல்லது. முயற்சித்தால் வராது. அந்த எண்ணத்தை முற்றிலும் தவிர்க்க நினைக்கும் கணம் மீண்டும் பழைய வீரியத்தும் மூளையை பற்றிக்கொள்ளும். அடிவயிறு அழுத்த தொடர்ந்து பெருமூச்சுகள். மூச்சு முட்டுவது போல தோன்றி பின் வியர்த்து ,  அதிகமாக உமிழ்நீர் சுரக்கின்றது. ஏறுவதற்கு முன் அந்த ஆப்பிள் பன்னை குத்தித்திணிக்கமல் இருந்திருக்கலாம் , பொங்கி வெளியே வருகிறது. இந்த சிவப்பு பொத்தானை அழுத்தி இறங்கிவிட்டால்தான் என்ன , வண்டி நின்றால் அதை அழுத்திய என்னிடம் ஆயிரக்கணக்கில் கேட்கலாம். ஒரு வேளை நின்றுகொண்டு சென்றால் தலை சுற்றாதோ. எழுந்து பார்ப்போம். இல்லை இன்னும் அதிகமாக , இந்த ரயிலே என்னை மையமாகக்கொண்டு சுழல்கிறது. தினமும் இதே பிரச்சனை. அலுவலகத்திலிருந்து என்னறைக்கு செல்ல இது ஒன்றே நேரவிரமில்லாத வழி.

இவர்கள் ஏன் பேசிக்கொண்டேயிருக்கிறார்கள். சிறிது தள்ளி நின்றாவது போய் பேசலாம். காது மடலில் தொங்கிக்கொண்டு ஊளையிடுகிறார்கள். கண்களை இறுக்க மூடிக்கொள்வோம். வண்ணங்கள் ,  நீலம் அதில் கலக்கும் மஞ்சள் அதிலிருந்து பிறக்கும் பச்சை பின் இளஞ்சிவப்பு. அருகில் ஒருவன் அமர்ந்துவிட்டான். இனி கண்களை மூடமுடியாது. அவனின் பெருத்த இடுப்பு என் கைமூட்டில் தட்டி குலுங்கிறது. எப்படியிருக்கிறான் , அழுக்கடைந்த மெல்லிய குளிரங்கி , அதனை கோடைக்கால மாதங்களில் கூட சிலர்  அணிந்தே திரிகின்றனர். வெள்ளை ஷூக்கள். நடுமூக்கில் சிறுவளையம். காதுகளில் என்கை நுழையும் அளவுள்ள வளையம். சுருக்கங்கள் நிறைந்த நெற்றி , பல நாள் தாடியுடன். கைகளில் காசு குறைந்த பீர் புட்டிகள். வறுமை நிரம்பிய இந்நாட்டுக்காரனின் அனைத்து உருவ லட்சணகளும் இவனிடம் உள்ளது. ஆ.....அவன் வியர்வை நெடி. வியர்வை இந்த நாட்டில் குளிரங்கிகளுடன் கலந்து புதுவிதமானதொரு வாசனையை உருவாக்குகிறது. என் மூக்கு அதனை உணரும் முதல் கணம் துணுக்குற்று அதனை விரும்பும் ஆனால் இரு நொடிகளில் குமட்ட ஆரம்பித்துவிடும். ஏற்கனவே எனக்கு குமட்டிக்கொண்டு வருகிறது.

எதிரில் இருக்கும் பெண் நான் அவளை கவனிப்பதை பார்த்துவிட்டாள். இங்கு ரயில்களில் பேருந்துகளில் பொதுயிடங்களில் மனிதர்களை நேருக்கு நேர் பார்ப்பது கூட குற்றம். எல்லார் காதுகளிலும் புழுபோன்ற வஸ்து நெளிந்து கைப்பேசியுடன் இணைந்துள்ளது. வேறோரு உலகத்துடன் இணைக்கிறது , இங்கு இதைத்தான் பார்க்க ஆளில்லை. நான் அவளை பார்ப்பதை கவனித்த  பின் அதனை கவனிக்காததாய் தன் கைப்பேசியை பார்க்க ஆரம்பித்தாள். ஆனால் இப்பொழுது எதிலொன்றிலாவது கவனத்தை செலுத்தியாக வேண்டும். இல்லை  குமட்டல் பின் வாந்தி புரண்டெழுந்து வரும். கையிலிருக்கும் புத்தகத்தை படிக்கலாம் என்றால் அதன் படங்களும் எழுத்துக்களும் விரிந்து பெருத்து பின் சுருங்கி மறைகின்றன. இடது கண்ணின் ஓரம் மங்கல் அடிக்க ஆரம்பித்துவிட்டது. ஒற்றைத்தலைவலி , சீ இதற்கு நான் இன்று தயாராகவேயில்லை. கவனி எல்லவற்றையும் கவனி. வண்டி நின்றது முதல் நிறுத்தம். மடக்கியிருந்த கைவிரல்களில் ஒன்றை மட்டும் நீட்டி எண்ண ஆரம்பித்தேன்.

எதிரில் இருப்பவள் யார் , ஆம் அவள் பெண் அல்ல. மூதாட்டி. எங்களூரில் இவள் அவ்வை. சிவந்த சுருங்கிய முகம் , கண்களில் மஸ்காரா , செயற்கை இமைகள். அடிக்கும் உதட்டுச்சாயம். முன் வழுக்கை விழுந்த எலிவால் கேசத்தில் இளநீலநிறம். கால்களில் நேற்றோ இன்று காலையோ அடித்த சிவப்பு நகப்பூச்சு. நான் அதனை பார்த்துக்கொண்டிருந்த பொழுது கால்களை இருக்கையின் அடியில் இருட்டுக்குள் மறைத்துக்கொள்கிறாள். வண்டியின் குறுக்கு வெட்டு பாதியின் மறுபுறமிருக்கும் ஒருவனுக்கு கைகாட்டுகிறாள். அவன் அவளை கண்டும்காணாமல் தலையை திருப்பிக்கொள்கிறான். நான் அந்த செயலை கவனிப்பதை அவள் பார்த்துவிட்டாள். அவமானமாக உணர்ந்திருப்பாள். மிண்டும் அவள் நகங்களை பார்க்க முயல்கிறேன். இப்பொழுது ரயில் இருண்ட குகைக்குள் செல்கிறது பாதளத்திற்குள் செல்லும் பாம்பு. மூச்சு முட்டுகிறது. என்னை சுற்றிலும் காற்று இன்னும் அழுத்த மடைகிறது. அவள் எழுந்தாள். அடுத்த நிறுத்தம் வருகிறது என்று தானியங்கி ஒலிப்பான் கூறுகிறது. ஆ அவள் என்னைப்பர்த்து சிரிக்கிறாள் , இல்லை அது அவளின் வாய் அமைப்பு. வாயின் இருபுறமும் சுருங்கி மடங்கியுமிருப்பதால் இயல்பாகவே சிரிப்பது போல தோன்றுகிறது. வண்டி நின்றது அவள் இறங்கிச்சென்றுவிட்டாள். ஜன்னல் வழியாக அவளைப்பார்த்துக் கொண்டேயிருந்தேன் , ஒருரேயொருமுறை திரும்பிபார்த்தாள். சிரித்தாள்.

கதவுகள் மூட வண்டி  குலுங்குகிறது. ஆ....புளித்த ஏப்பம். வாய்வழியாக வரும் காற்று மூக்கில் மணக்கிறது. அந்த மணத்திற்கு என் உடம்பே அதிர்கிறது. மீண்டும் குமட்டல். இந்த வண்டி சீக்கிரம் என்று சேர்ந்துவிடாதா.

எனக்கு பின்னால் கம்பிக்கருவியின் இசை பயந்த புள்ளேன காற்றில் விருட்டென்று வருகிறது. திரும்பிப்பார்க்க வேண்டாம். சுருதி மீட்டப்படாத தந்திகள். அந்த இசை கீழ்த்தரமாக இருந்த போதிலும் அதை இசைப்பவன் அந்த சுருதி மாற்றத்தை தாண்டி அதன் ஆத்மாவை கடத்த முயல்கிறான். என்னருகில் வந்து விட்டான். கருத்த மேல் கோட்டு வெள்ளை உள்சட்டை , கருத்த டை மற்றும் கால் சட்டை. டையை திணித்து நேர்த்தியாக வைத்திருக்கிறான். கிராமங்களில் இருக்கும் துணிக்கடைக்கு பொம்மையாக நிற்கவைக்கும் அவ்வளவுக்கு நேர்த்தி. உருண்டையான ஆனால் கட்டான உடல். உருண்டை சிரியன் முகம். ஆங்காங்கே தெரியும் நரை ஆனால் அவன் கேசம் கருப்பல்ல , ஒரு மாதிரி செம்பழுப்பு. சிறிய உருண்டையான மூக்கு. சோகைபிடித்த ஆனால் பிரியமான கண்கள். ஒவ்வொரு செயலுக்கும் தலையை ஆட்டிக்கொண்டே ஒவ்வொருவராய் பார்க்கிறான். கையிலிருந்த தந்திக்கருவி செவ்வக வடிவில் மரத்தில் தட்டையாக ஒருமுறமிருந்து மறுபுறம் கம்பிகளால் இழுத்துக்கட்டப்பட்டிருந்தன. கைகளில் வைத்திருத்த குச்சியால் தட்டி தட்டி இசையை ஏவி விடுகிறான். ரயில் ஒருபுறம் செல்ல மறுபுறம் அந்த இசை மறுபுறம் தாவிச்செல்கிறது. தெரிந்த பாடல் ஆனால் நினைவில் கொண்டுவர முடியவில்லை. என்னைப்பர்த்து சிரிக்கிறான். கைகளில் ஒரு காலி காப்பிக்கோப்பை. அதிலிருக்கும் சில்லறைகளை குலுக்கி என்முன் வந்து சிரிக்கிறான். எதும் கொடுக்கப்போவதில்லை என்பது எனக்கே தெரியும். கையில் சில்லறைக்காசில்லை என்பது என் சாக்கு. என்னை தாண்டி செல்கிறான். அதே சிரிப்பு. குட்டையான உருவத்துடன் , பொம்மைப் படங்களில் வருவது போல நடந்து செல்கிறான்.

அருகில் உட்காருவதற்கு இடமிருந்தும் நின்றுகொண்டிருந்த சுவீடன் மக்கள். இதுவும் உடற்பயிற்சியென்று சொல்ல வாய்ப்பிருக்கிறது. என் எதிரிலிருக்கும் அனைத்தையும் மறைத்துக்கொண்டு இவர்களுக்கு என்ன கதை வேண்டியிருக்கிறது. தீவிரமாக பேசும்பொழுதும் அவர்களின் குரல் அமைதியாக ஒலிப்பது கடவுளின் கிருபைதான். நானெல்லாம் பேசுவதேன்றாலே கத்துவதுதான். அவர்களின் பின்னொரு கருப்பன் கதவில் சாய்ந்து நிற்கிறானே. மிடுக்கான உடம்பு , உள்ளே சிவந்த வெளியில் கருத்த தடித்த கீழ் உதடு. அமைதியான முகம் , எப்பொழுதும் பதுங்குக்குழிக்குள் இருக்கும் குருவிக்குட்டி போல. என்ன பேசுகிறான் ஒன்றும் விளங்கவில்லை. ஆனால் எங்களூர் கோலப்பனின் அச்சிவன். ஜிகு ஜிகுக்கும் உடைகள். அவனுக்கு பொருந்தவில்லை. ஆனால் அவன் விருப்பத்துடன் அணிந்திருப்பது போலிருக்கிறது.

இந்த நடுவயது சுவீடன்காரர்கள் என்ன பேசிக்கொண்டிருக்கிறார்கள்.எவன் பேசுகிறான் என்றே தெரியவில்லை. ஒரு கூட்டம் ஒற்றை மனதாய் போசுவதுபோலிருக்கிறது.

"இவர்களை நாம் உள்ளே விட்டோம் அதும் ஒரு மனிதாபிமானத்துடன். மரியாதைக்கு பிழைப்பு நடத்த வேண்டும். வெறும் ஊளை ஜனங்கள். இந்த அகதிகளின் வரத்தை தடுக்க அரசு ஒன்றும் செய்வதில்லை. ஓரளவுக்கு இருக்கும் பொழுது நமக்கு பாதிப்பில்லை. அதுவொரு முட்டாள்தனமான செயல்"

"நாடு முழுவதும் பரவிவிட்டனர் , அவர்களின் நிலத்தப்போலவே நம் நிலத்தையும் மாற்றிவிடுவார்கள் ஒட்டுண்ணிகள்"

"தெருக்களில் , அங்காடிகளில்  இவர்களே நிரம்பியுள்ளனர் , நாம் சற்று தள்ளியே நிற்க வேண்டும்"

"இந்த ரொமேனிய அகதிகள் பிச்சை எடுக்கின்றனர் கூட்டம் கூட்டமாக. கொடுக்காவிட்டால் முறைக்கிறார்கள். அதுதான் அரசு எல்லாம் கொடுக்கிறதே , அதற்கு மேல் இவர்களுக்கு என்ன பிச்சை வேண்டியிருக்கிறது"

"நம் அரசு இவர்களை அனுமதிக்கிறது , ஆனால் அவர்களுக்கு தேவயானதை கொடுக்கவில்லை. இவர்கள் தங்களுக்கு வேண்டியதை எடுத்துக்கொள்ள நினைக்கிறார்கள். இதில் இவர்களையும் குற்றம் சொல்ல முடியாது"

"எது ,  கடைகளில் புகுந்து துப்பாக்கி காட்டி திருடுவது நல்ல குணமில்லையா!"

"நான் அப்படி சொல்லவில்லையே , அவர்கள் தவறு செய்கிறார்கள் அதற்கு நம் அரசும் ஒரு காரணம் என்றுதான் சொல்கிறேன்"

"பிச்சை எடுப்பதைகூட நான் மன்னிக்க முடியும் , எனக்கு தோன்றும் பொழுது கொடுக்கிறேன். ஆனால் திருட்டு அதனை ஏற்றுக்கொள்ள முடியாது"

"ஏற்றுக்கொள்ள முடியாதுதான். ஆனால் உனக்கு தெரியுமா அவர்கள் தெருவில் தூங்குகிறார்கள்"

" ஆதுதான் பார்க்கிறோமே. அரசை குறைகூறி என்ன புண்ணியம். அவர்களால் முடிந்ததைதான் செய்ய முடியும். ஏன் நீ உன் கைகாசு அனைத்தையும் கொடுத்துவிடேன் பிரபுவே"

"கொடுப்பேன் , காலம் வரும் பொழுது"

"இருக்கலாம். நாம் இவர்களுக்கு போரிலிருந்து சுதந்திரம் கொடுத்தோம். வாழ வழி செய்தோம். ஆனால் இங்கு கொள்ளையடிக்கிறார்கள். இவர்களுக்கு துப்பாக்கி எங்கிருந்துதான் கிடைக்கிறதோ தெரியவில்லை"

"நாம் சர்வதேச அளவில் முதல் பத்து இடத்திற்குள் இருக்கிறோம் தெரியுமா"

"எதில் ?"

"ஆயுதங்கள் விற்பதில் , சிரியாவிற்கு நம் சரக்கு அதிகம் போயிருக்கும். நாம் இங்கு அமைதியாக இந்த ஒட்டுண்ணிகளின் நடுவில் வாழ்வோம். நாம் சொகுசாக இருப்பதற்கு துப்பாக்கி செய்கிறோம்"

"நேற்று நாம் கால்பந்தாட்டத்தில் ஒரு இந்தியனைபோல விளையாடித்தோற்றொம். அடுத்த அடி எடுத்து வைக்க ஒவ்வொருத்தனும் பிதாவிடம் அனுமதி கேட்பார்கள் போல. சுத்த சோம்பேறிகள்"

அவர்கள் பேசியதில் ஒரு விசயத்தை விட்டுவிட்டனர். ரொமேனியா ஐரோப்பாவில் இருப்பதாலேயே அந்நாட்டு அகதிகளை கொஞ்சமும்  கவனிக்காமல் அப்படியே விடுகிறது சுவீடன் அரசு. தங்கள் நாட்டினரின் வரிப்பணம் அவர்களுக்கு செலவளிக்கப்பட விருப்பமில்லை. இதனை பேசிக்கொண்டிருந்த இவர்கள் புரிந்து கொண்டதாக தெரியவில்லை. ஆனால் அகதிகளின் மனநிலையை அறிந்து கொள்ள அவர்கள் என்னிடம் பேசியிருக்க வேண்டுமே. இவர்களிடம் நிற வெறுப்போ அகதிகளிடமான வெறுப்போ இல்லையென்று சொல்ல முடியாது. ஆனால் அது நேரடியாகயில்லை. வேலை இல்லாதவனே பிச்சை எடுக்கிறான். இவர்கள் ஐ எம் 2015  என்ற சமூக வலைதள இயக்கத்தை மறந்திருக்கலாம். ஆனால் அகதிகளாகிய நாங்கள் அதனை மறக்க முடியாதல்லவா.

ஆ....வண்டி நின்றுவிட்டது , ஓ.....அவன் விழுந்திருப்பான் அந்த இசைகருவியிலிருந்து வரும் இனிய அதிர்வொலி. தட்டுத்தடுமாறி இறங்கிவிட்டான். நீங்கள் அந்த கலைஞனை தீண்டாமல் செல்லுங்கள். அவனும் ஓர் ஒட்டுண்ணியல்லவா. எதிரில் பெட்டியின் கடைசியில் ஒரு அரேபியக்குடும்பம். செழிப்பாக உள்ளது. இந்த குழந்தைகளின் கருவிழிகள் அவர்களின் மிருதுவான மென் சிவப்பு நிறத்திற்கு துடிப்பாகத்தெரிகிறது. அருகில் இருக்கும் இளம்பெண் பேரழகி. சில அகதிகளுக்கு தேவையான எல்லாம் கிடைக்கிறது. ஆனால் பலருக்கு இது கடலில் கலந்த உப்புப்பரலை கண்டுபிடித்து விடலாம் என்று காத்திருப்பது போல. வினோதம் என்னவென்றால் தேடுபவன் இவர்களில்லை.

வண்டி கிளம்பிவிட்டது , அருகில் ஒரு கருப்பின குடும்பம். ஒரு பெரிய பெண் மற்றம் ஒரு குழந்தை. மூக்கிற்கு கீழுள்ள பள்ளம் விரிந்து தட்டையாகவுள்ளது. பெரிய மூக்கு துவாரங்கள் ஆனால் சப்பையான மூக்கு. என் எதிரில் அந்த குழந்தை. மினுங்கும் கருப்பு எருமையின் பின் தசைத்தோல் சிறிய ஒளியில் ஜொலிக்கும் அது போன்றது. தலை சிறிய பல பின்னல்களாக சிலிர்த்துக்கொண்டு நின்றது. விரிந்த கண்களால் என்னை கைகாட்டி குமிழுதடுகளால் சிரிக்கின்றது . அவளின் அம்மாவாக இருக்காலம் அவளை அழைத்துக்காட்டி மீண்டும் சிரிக்கிறது. என் பையிலிருந்த கெய்ஷா சாக்லேட்டை கொடுக்கலாம். ஆனால் அவள் வாங்கிக்கொள்வாளா ? . நானும் சிரித்துக்கொண்டே அதனை அவளிடம் கொடுத்தேன். அம்மாவைப்பார்த்தது, அவள் தலையசைத்ததும் வாங்கிக்கொள்கிறாள். அந்த அம்மா என்னிடம் உதிரி ஆங்கிலத்தில் என்னவெல்லாமோ பேசுகிறாள் ஆனால் எனக்கு ஒன்றும் புரியவில்லை. பின் ஒரு துண்டு பிரசுரத்தைக்கொடுத்தாள். அதில் "ஜீசஸ் காலிங்" என்ற எழுத்துக்களுடன் மேலே ஏசு கைகள் விரிய நிற்கிறார். எல்லாரும் என்னிடம் வாருங்கள் நான் உங்களை அரவணைத்துக்கொள்கிறேன்.

வண்டி நின்றவுடன் அந்த குடும்பம் இறங்கியதும் நானும் இறங்கிக்கொண்டேன். நண்பர் கொடுத்த புத்தகம் கையிலிருக்கிறது. "தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்" 

அனைத்தையும் வாந்தி எடுத்து விட்டு. இரவு என்ன சமைக்கலாம் என்று யோசித்தால் நல்லது.

No comments:

Post a Comment